கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 9, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020



ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி இந்த வருடம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் குருநானக் கல்லூரியில் ஜனவரி 28ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 03ஆம் தேதி வரை நடந்தது.

தென்னகத்தில் இருக்கும் பல்வேறு ஆன்மீக இயக்கங்கள் தங்கள் அமைப்புகள் குறித்தும், அவை செய்யும் சேவை குறித்தும் காட்சி படுத்தியிருந்தார்கள். ருத்திராட்சம், ஆன்மீக புத்தகங்கள், விபூதி, குங்குமம், ஸ்படிக மாலை போன்றவை விற்பனைக்கிருந்தன. சென்ற வருடங்களை விட இந்த வருடம் கோ சம்ரக்ஷணை செய்யும் அமைப்புகள் நிறைய கண்ணில் பட்டன. சுத்தமான பசு நெய், கோமியம், வரட்டி, இயற்கை உரம் போன்றவை விற்கப்பட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், தினத்தந்தி, தினமலர், குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் ஸ்டால்கள் போட்டிருந்தன.  அவை தங்கள் யூ ட்யூபிற்காக கவரேஜ் செய்தன.

இவை தவிர இந்தியா போஸ்ட்டும் ஸ்டால் அமைத்திருந்தது. அதில் முன்னூறு ரூபாய்க்கு நம்முடைய ஃபோட்டோவோ, அல்லது நமக்கு பிரியமானவர்களின் புகைப்படமோ கொடுத்தால் உடனடியாக 10 ஸ்டாம்புகள் தயாரித்து கொடுப்பதாக சொன்னார்கள்.  நான் செய்து வரும் இலக்கிய பணிக்காக அரசாங்கமே என் தபால் தலையை வெளியிடலாம். அதனால் வேண்டம் என்று சொல்லி விட்டேன்.  ரூபாய் 65க்கு ராமாயண காட்சிகள் தபால் தலைகளாக வந்திருக்கின்றன. அவைகளை நாம் பயன் படுத்தலாம், யாருக்காவது பரிசளிக்கலாம், அல்லது அப்படியே சேமிப்பாகவும் வைத்திருக்கலாம். என் சகோதரி தன் பேரனுக்காக ஒன்று வாங்கினார். அதைப்போல சென்ற வருடத்தின் சிறப்பு நிகழ்வான அத்தி வரதரின் வருகையை முன்னிட்டு ஒரு சிறப்பு என்வெலப் கூட வெளியிடபட்டிருக்கிறது. அதையும் நாம் பயன் படுத்தலாம் அல்லது நினைவாக வைத்துக் கொள்ளலாம்.

Athi Varadhar envelope 
 


இந்த வருடம் ஆன்மீக கண்காட்சிக்காக எடுத்துக் கொண்ட பொருள் 'பெண்மையை போற்றுவோம்' அதனால் நம் தேசத்தில் வாழ்ந்த பெருமை மிகு பெண்களைப் பற்றிய ஓவியங்கள் நுழையும் பொழுது வரவேற்றன.  ஆரம்பத்தில் நுழை வாயிலில் வைத்திருந்த கண்ணகி சிலையை பின்னர் மத்தியில் வெளியேறும் வழியைப் பார்த்தவாறு மாற்றி விட்டார்கள். கண்ணகி சிலையில் முகத்தில் ஆக்ரோஷத்திற்கு பதிலாக சிரிப்பு!!



கண்காட்சியை தொடங்கி வைத்தது மாதா அமிர்தானந்தமயி. அன்று மேடையில் ஹிந்து ஆன்மீக, சேவை நிறுவனத்தின் தலைவி திருமதி.ராஜலக்ஷ்மி, பத்மா சுப்பிரமணியம், ஷீலா ராஜேந்திரன் என்று அனைவரும் பெண்கள்தான்.

கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அமிர்தானந்தமயி அவர்கள் மலையாளத்தில் உரையாற்றியதை அவருடைய சீடர் ஸ்வாமிஜி ராமக்ரிஷ்ணானந்தபுரி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். ராஜலக்ஷ்மி அவர்களும், பத்மா சுப்பிரமணியம் அவர்களும் நீண்ட உரை நிகழ்த்தினார்கள். இதில் ராஜலக்ஷ்மி அவர்கள் மேலை நாட்டில் பெண்ணை வீக்கர் செக்ஸ் என்று கூறும் பொழுது, நம் நாட்டில் பெண்ணை சக்தி என்கிறோம் என்றார். பத்மா சுப்பிரமணியம் நம்முடைய ஹிந்து ஆன்மீக அமைப்புகள் செய்யும் சமூக சேவைகளை பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார். உதவி செய்து விட்டு அதனால் மதம் மாற்றுவது நம் நோக்கமல்ல,வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் கொள்கையை நாம் பின்பற்றுவதால் நம்முடைய சேவைகளை நாம் பிரகடனப் படுத்திக்க கொள்வதில்லை என்றார்.  உண்மையில் இந்த கண்காட்சியில் சென்று பார்த்த பொழுதுதான் ஹிந்து அமைப்புகள் எத்தனையெத்தனை சேவைகளை சத்தம் போடாமல் செய்து கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.



வருகை புரிந்த ஆயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அல்லது பள்ளிக்குழந்தைகள். இளைஞர்களும், மத்திம வயதினரும் குறைவாகத்தான் இருந்தார்கள். இந்த வருடம் இதை தவற விட்டவர்கள், அடுத்த முறை கண்டிப்பாக வருகை தாருங்கள். ஒரு அருமையான, பெருமிதம் கொள்வீர்கள்.

கல்யாணமாலை நிகழ்ச்சிக்கான பேச்சரங்கம் சனி அன்று நடை பெற்றது. காலம்தோறும் பெண் என்பதில் பக்தியில் பெண் என்னும் தலைப்பில் டாக்டர்.சுதா சேஷய்யன் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். குடும்பத்தில் பெண் என்பதைக் குறித்து திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் 
பேசி கை தட்டல்களை அள்ளினார். அவரைத் தொடர்ந்து திருமதி.கவிதா ராமானுஜம் என்னும், மும்பையில் வருமானவரித்துறையில் உயரதிகாரியாக பணியாற்றும்  இளம் பெண், நிர்வாகத்தில் பெண் என்னும் தலைப்பில்  மேடைப் பேச்சில் ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுத்தார். இறுதியில் இலக்கியத்தில் பெண் என்பது பற்றி திருமதி பாரதி பாஸ்கர்,  நேரம் சற்று குறைவாக இருந்தாலும் உரையாற்றி அசர அடித்தார். மறக்க முடியாத மாலையாக அது அமைந்தது. 

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனோடும், பாரதி பாஸ்கரோடும் நானும் என் அக்கா பெண்ணும்.

மேலும் சில தகவல்களும் புகைப்படங்களும் அடுத்த பதிவில்.




31 comments:

  1. சிறப்பான நிகழ்வு. உங்கள் வழி நாங்களும் தகவல்கள் அறிந்தோம். நன்றிம்மா...

    ReplyDelete
  2. அம்பத்தூரில் இருந்தவரை அநேகமாக ஒவ்வொரு வருஷமும் போயிருக்கோம். கடைசியாப் போனப்போத் திருவான்மியூரில் கண்காட்சி நடந்தது. அதைப் பற்றிப் படங்களோடு எழுதினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருமே வந்து படித்துக் கருத்துச் சொல்லலை. இப்போது குடியரசு துணைத்தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு நாங்க போன அன்னிக்கு அங்கே வந்திருந்தார். படம் எடுத்துக்கணும்னு தோணவே இல்லை பாருங்க! :)))))))

    ReplyDelete
    Replies
    1. //படம் எடுத்துக்கணும்னு தோணவே இல்லை பாருங்க! :)))))))// கண்காட்சியில் ஒரு ரவுண்டு போகலாம் என்று சென்ற பொழுது ஸிடோ ஒரு ஊடகத்தை சேர்ந்தவர் என்னிடம் இந்த கண்காட்சியைப் பற்றி கூற முடியுமா? என்று கேட்டு, படம் பிடித்தார்கள். அவர்கள் எந்த சேனலை சேர்ந்தவர்கள்? எப்போது ஒளி பரப்புவார்கள் என்று கேட்க மறந்து விட்டேன். தி ஹிந்து தமிழ் என்று மைக்கில் பார்த்த நினைவு. இன்னும் யூ ட்யூபில் நான் பேசியது வருமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். சில சமயம் இப்படி ஆகி விடுகிறது. வருகைக்கு நன்றி அக்கா. 

      Delete
    2. ஏதோ என்பது சிடோ என்று வந்து விட்டது. 

      Delete
  3. https://sivamgss.blogspot.com/2009/12/blog-post_29.html

    https://sivamgss.blogspot.com/2009/12/blog-post_30.html

    https://sivamgss.blogspot.com/2010/01/blog-post.html

    விட மாட்டோமுல்ல!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி. 

      Delete
  4. வணக்கம் சகோதரி

    நல்லதொரு கண்காட்சி குறித்து சுவைபட பகிர்ந்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. கண்ணகி சிலை முகத்தில் ஏன் ஆக்ரோஷத்திற்கு பதிலாக சிரிப்பு? ஆக்ரோஷம் முற்றிலும் அகன்று விட்டதாலா? எப்போதும் புயலுக்குப் பின் அமைதிதானே..!

    சிறப்பான பேச்சாளர்களின் பேச்சை நேரில் கேட்டது மட்டுமின்றி அவர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள். சுவையான தகவல்களை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. கண்ணகிக்கு மாடலாக நின்றவருக்கு சிரித்த முகமாக இருந்திருக்கலாம். ஹாஹா!

      Delete
  5. வருடா வருடம் இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை பார்த்திருக்கிறேன்.  ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேனா என்பதே நினைவில்லை.  கண்ணகியை நகைச்சுவைப்பாத்திரமாக மாற்றி விட்டார்களா?!!  பாரதி பாஸ்கர் என்ன பேசினார்?  அதாவது மேடையிலும், உங்களிடமும்?

    ReplyDelete
    Replies
    1. பாரதி பாஸ்கர் மேடையில் என்ன பேசினார் என்பதை சன் டி.வி.யில் கல்யாண மாலை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் பொழுது கேட்டுக் கொள்ளுங்கள். என்னிடம் அவர் எங்கே பேசினார்? நான்தான் அவர் கம்பன் விழாவில் வாலியின் மனைவி தாரையைப் பற்றி கூறிய விஷயங்களை பாராட்டினேன். பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
      அன்றைய ஸ்டார் ஜெயந்தஸ்ரீதான். அவரைத்தான் நிறைய பேர் மொய்த்துக் கொண்டார்கள். சிலர் கண்ணீர் விட்டார்கள், சிலர் காலில் விழுந்தார்கள், சிலர் கட்டி அணைத்துக் கொண்டார்கள். நிறைய பேர் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொன்னார், செல்ஃபிக்கு புன்னகைத்தார்.   
      வருகைக்கு நன்றி ஸ்ரீராம். 

      Delete
  6. நல்ல நிகழ்வைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி

    ReplyDelete
  7. என் சகோதரி சேர்ந்து இருக்கும் வேளச்சேரி மகளிர் குழு ஒரு நாள் லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோரம் பாடினார்கள். நன்றாக நடந்தாக சொன்னார் சகோதரி.
    சென்று வந்து கண்காட்சியில் இடம்பெற்றதை மிக அழகாய் தொகுத்து வழங்கியதது அருமை.

    7ம் தேதி ஒரு திருமணவிழாவிற்கு வந்து இருந்த பாரதி பாஸ்கர் அவர்களோடு நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் ஏதோ ஒரு நிகழ்ச்சி இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியருக்கு போட்டிகளும் இருந்தன. பாரதி பாஸ்கரோடு நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முகநூலில் பகிருங்கள், நாங்களும் பார்க்கிறோம். வருகைக்கு நன்றி. 

      Delete
  8. மிக மிக அருமை பானுமா.
    படங்களும், கண்ணகியும் அழகு.
    நம் அமைப்புகள் இவ்வாறு கண்காண,காது கேட்க
    ஒரு நிகழ்ச்சி அமைத்தது மிக மனனிறைவாக இருக்கிறது.

    அந்தப் பட்டியலும்மிக மிக அருமை.
    இப்படிக் கண்காட்சிகள் எல்லா ஊரிலும் நடக்க வேண்டும்.
    நம் பெருமையை நாமே சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.
    உங்கள் இலக்கியப் பணிகளைப் பற்றியும் எழுதுங்கள் பானு.

    பாரதி பாஸ்கர், ஜெயந்தி ஸ்ரீயுடன் உங்கள் படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. இது பதினோராவது வருடம். ஹிந்து அமைப்புகள் என்றால் வெறும் சுலோகம், பூஜை, ஆன்மிகம் மட்டும்தான். சேவை கிடையாது என்று நாமே நினைத்துக் கொள்கிறோமே, அதை மாற்றத்தான் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். முதல் வரும் சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 35 ஸ்டால்களோடு தொடங்கப்பட்டது. இப்போது நூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள். 

      Delete
    2. //அந்தப் பட்டியலும்மிக மிக அருமை.//  இதைப் போல இன்னொரு தட்டியும் இருந்தது. அது சற்று தெளிவாக இல்லாததால் நான் இணைக்கவில்லை. ஹிந்து ஆன்மீக அமைப்புகள் இவ்வளவு சமூக சேவை செய்கின்றன என்பதை அறிய சந்தோஷமாக இருந்தது. 

      Delete
    3. //உங்கள் இலக்கியப் பணிகளைப் பற்றியும் எழுதுங்கள் பானு.// ஹாஹா! நல்ல ஜோக்!
      வருகைக்கு நன்றி. 

      Delete
  9. நிகழ்வின் அருமை சிறப்பு...

    படங்களும் அழகு...

    ஆனாலும் நீங்கள் வேண்டாம் என்று சொல்லிருக்கக் கூடாது...!

    ReplyDelete
  10. நன்றி டி.டி. ஆனாலும் நீங்கள் வேண்டாம் என்று சொல்லிருக்கக் கூடாது...!  உங்கள் கிண்டல் புரிகிறது. ஹாஹா. 

    ReplyDelete
  11. ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடத்தி, பேச்சுகள் மூலம் வந்திருந்தவர்களுக்கு விளக்கியது, சம்பந்தப்பட்டவர்கள் அளித்த இன்னுமொரு சேவை. நல்லவிஷயங்களும் நடக்கின்றன சென்னையில் என்பது மனதுக்கு இதமாக இருக்கிறது! உங்கள் கட்டுரை படங்களுடன் விபரம் தருகிறது.

    கண்ணகி சிரிப்பது புரிகிறது. தமிழ்நாட்டின் நடப்புகள், நிலவரம் அப்படி. ஆக்ரோஷத்தினால் ப்ரயோஜனம் இல்லை என்பது புரிந்துவிட்டது கற்புக்கரசிக்கு.

    ReplyDelete
    Replies
    1. //கண்ணகி சிரிப்பது புரிகிறது. தமிழ்நாட்டின் நடப்புகள், நிலவரம் அப்படி.// உண்மைதான். வருகைக்கு நன்றி.

      Delete
  12. யாராவது இது பற்றிச் சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தேன். நானும் சிலருக்கு இது பற்றிச் சொல்லியிருந்தேன். விவரமான உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  13. //மொழி பெயர்த்தார்..//

    மொழி மாற்றம் சிறப்பான வார்த்தை

    ReplyDelete
  14. //வீக்கர் செக்ஸ்//

    மேலை நாட்டில் அப்படிச் சொல்கிறார்களா?.. ஆச்சரியம் தான். அங்கு சரிநிகர் சமானமாய்
    (Manual works செய்யும் அளவுக்கு) அல்லவோ இருக்கிறார்கள்?..

    //நாட்டில் பெண்ணை சக்தி என்கிறோம் //

    (சக்தி) வாய்ப்பந்தல் வார்த்தை. சக்தி என்போம்; சகதியில் போட்டு மிதிப்போம். 'பொண்ணா லட்சணமா இரு' என்று உபதேசம். அப்படீன்னா என்ன பா.வெ?..

    ReplyDelete
    Replies
    1. //சக்தி) வாய்ப்பந்தல் வார்த்தை// உண்மைதான்.

      Delete
  15. //ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனோடும், பாரதி பாஸ்கரோடும் நானும் என் அக்கா பெண்ணும்.//

    கலையுணர்வோடு படத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த விதம் அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //கலையுணர்வோடு படத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த விதம் அழகு// எல்லாம் செல்ஃபோன் தயவு.

    ReplyDelete