மஹா நடி(விமர்சனம்)
மஹா நடிகையாகிய
சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது.
ஒரு பத்திரிகையில்
நிருபராக பணியாற்றும் சமந்தாவிடம் கோமாவில் இருக்கும் சாவித்திரியைப் பற்றிய செய்தியை
கவர் செய்யச் சொல்லி பணிக்கிறார் அந்த பத்திரிகை ஆசிரியர். வேண்டா வெறுப்பாக அந்தப்
பணியை ஏற்றுக் கொள்ளும் சமந்தா சாவித்திரி
பற்றி திரட்டும் தகவல்கள் அழகான ஓவியமாக திரையில் விரிகிறது.
பயோ பிக் என்பது
சற்று சவாலான விஷயம். அதுவும் மிகச் சமீபத்தில் மறைந்த ஒருவரைப் பற்றி, இன்னும் மக்கள்
மனதிலும், நினைவிலும் இருக்கும் ஒருவரைப் பற்றி திரைப் படம் எடுக்க வேண்டும் என்பது
கயிற்றில் நடக்கும் வித்தை. ஜாம்பவான்களே இடறி விழும் இதில் அனாயசமாக நடந்திருக்கிறார்
இளம் இயக்குனர் நாக் அஸ்வின்.
செட்(சில இடங்களில்
செட் என்று தெரிந்தாலும்), உடைகள், அந்த காலத்திய வாகனங்கள், நட்சத்திர தேர்வு என்று
அத்தனையிலும் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறார்.
குறிப்பாக நட்சத்திர
தேர்வை சொல்ல வேண்டும். இதுவரை பெரிதாக நடிப்பில் எதுவும் சாதிக்காத சின்னப் பெண் கீர்த்தி
சுரேஷ் சாவித்திரியாகவா? குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் ஆகி விடாதா? என்ற எண்ணத்தை
உடைத்து, சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி. அந்த குழந்தை சிரிப்பு, கையை
ஆட்டி, கால்களை சற்றே அகட்டி வைத்து நடக்கும் கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமான நடை, முகத்தில்
படரும் மெல்லிய சோகம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது கீர்த்திதான் நடித்திருக்கிறாரா?
அல்லது சாவித்திரியின் ஆன்மா இந்தப் பெண்ணின் உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதா என்று
தோன்றுகிறது. இந்த வருடம் விருதுகளை அள்ளப் போகிறார்.அவருடைய திரையுலக வாழ்க்கையில்
ஒரு மைல் கல் இந்தப் படம்.
சாவித்திரியின்
பெரியப்பாவாக நடித்திருக்கும் நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜெமினி கணேசனாக
நடித்திருக்கும் துல்கர் சல்மானும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். ஜெமினி, சாவித்திரி
காதல் காட்சிகள் க்யூட்!. சாவித்திரியின் வெகுளித்தனம், அவரும் அவர் பெரியப்பா சம்பந்த்தப்பட்ட
சினிமாவில் வாய்ப்பு தேடும் ஆரம்ப காட்சிகள் ஸ்வாரஸ்யம்! ஜெமினியும், சாவித்திரியும்
பிரியும் காட்சிகள் சற்று வேகமாக நகர்ந்து விடுகின்றன. பெரும்பாலான தெலுங்கு நடிகர்களுக்கிடையே
பானு ப்ரியா, ப்ரகாஷ் ராஜ், மனோபாலா போன்ற நமக்கு தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
சிறு வேடமென்றாலும் மனதில் நிற்கிறார்கள். பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் பின்னணி
இசை சிறப்பாக இருக்கிறது.
நடிப்பைத் தவிர
சாவித்திரியின் கார் ஓட்டும் திறமை, பெரிதாக கொலு வைப்பது, ராணுவ வீரர்களுக்காக தன்
நகைகளை கழட்டி கொடுப்பது, தான் கஷ்டப்படும் பொழுதும் ஏழைகளுக்கு உதவுவது, பெரிய நடிகையாக
இருந்த போதும், ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை செய்யும் சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்ந்தது,
பின்னாளில் மதுவுக்கு அடிமையானது போன்ற பல விஷயங்களை காண்பித்தவர்கள் அவருக்கும் சந்திரபாபுவுக்கும்
இருந்த நட்பையும் கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.
அதே போல சாவித்திரி
என்றாலே நம் நினைவுக்கு வரும் நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் போன்ற படங்கள் இடம் பெறாதது
கொஞ்சம் குறை.
சமந்தாவை இன்னும்
கொஞ்சம் அழகாக காண்பித்திருக்கலாமோ? திக்கு வாய் பெண்ணாக சித்தரிக்கபடும் அவர் சில
சமயம் அப்படியும், சில சமயங்களில் சாதாரணமாகவும்
பேசுகிறார். அவருடைய காதலனாக நடித்திருக்கும் நடிகர் கச்சிதம்.
ஜெமினி கணேசனுக்கு
இன்னும் கொஞ்சம் கௌரவம் கொடுத்திருக்கலாம்.
சாவித்திரிக்கு
மரணம் கிடையாது, அவர் படங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று முடித்திருப்பது
நன்றாக இருக்கிறது.