கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 12, 2018

உங்களிடம் சில வார்த்தைகள் ... கேட்டால் கேளுங்கள் ...

உங்களிடம் சில வார்த்தைகள் ...
கேட்டால் கேளுங்கள் ...



அறிவுரை! இதற்கா பஞ்சம் நம் நாட்டில்? அதுவும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு? சிறு வயதிலிருந்து நிறைய கேட்டிருக்கிறோம். எப்படி உட்கார வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்?,ஏன்? எப்படி தூங்க வேண்டும்? என்பது வரை பல பல அறிவுரைகள். 

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் விசேஷமாக அறிவுரைகள் கிடைக்கும்."பத்து பேர் வந்திருக்கும் பொழுது குறுக்கும் நெடுக்கும் என்ன நடை?, கெக்கே பிக்கே என்று என்ன சிரிப்பு?" இவை எல்லாம் மற்றவர்கள் கவனத்தை கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தத்தான், ஸ்வாதீனம் இருப்பதால் கொஞ்சம் கோபமாக சொல்கிறார்கள் என்பதை புரிய வைத்தவர் எங்கள் குடும்பத்திற்கு  மிகவும் நெருக்கமான ஐயங்கார் மாமி.  நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு முறை என்னை எதற்கோ என் மாமா திட்டிக் கொண்டே இருந்தார். எனக்கு பயங்கர எரிச்சல். ஐயங்கார் மாமியிடம் சென்று, "மாமா என்னை திட்டிண்டே  இருக்கா, எனக்கு பிடிக்கவே இல்லை", என்றதும், என்னை உற்றுப் பார்த்த மாமி, மெல்லிய குரலில்(மாமி கோபமாக குரலை உயர்த்தி பேசி நான் கேட்டதே இல்லை),

"நேத்திக்கு மாமா பானுவை டவுனுக்கு அழைச்சுண்டு போய், சோன்பப்டி, ரோஸ் மில்க் எல்லாம் வாங்கி கொடுத்தப்போ பானுவுக்கு மாமாவை பிடித்தது, இன்னிக்கு கோபித்துக் கொள்ளும் பொழுது மாமாவை பிடிக்கவில்லை,அப்படித்தானே?" என்றார். இந்த நிகழ்ச்சி நடந்த பொழுது நான் மிகவும் சிறியவள், பத்து வயது கூட ஆகவில்லை, ஆனாலும்  என் மனதில் ஆழப் பதிந்த விஷயம் நம்மை திட்டுகிறவர்கள் நம் எதிரிகள் அல்ல. 

என் பாட்டி இதையே வேறு விதமாக சொல்வார். வீட்டில் யாராவது நம்மை கோபித்து,அதற்காக நாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால், உடனே என் பாட்டி,  "அழ அழ சொல்பவர்கள் நம் மனுஷா சிரிக்க சிரிக்க சொல்பவர்கள் அயலார்" என்பார்.

 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை என் பி.டி. டீச்சர் நான் அணிந்திருந்த சட்டை நீளம் குறைவாக இருக்கிறது என்று என்னைத் திட்டினார். அவருக்கு பயந்து நான் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, பாவாடை, தாவணி அணிந்து செல்வேன்.(இந்த விஷயத்தை என் மகளால் நம்பவே முடியவில்லை. தாவணி அணிந்து கொண்டா ஸ்கூலுக்குச் செல்வீர்கள்?) . அன்றைக்கு பி.டி. பீரியட் இல்லாததால் சாதாரண சட்டை அணிந்து கொண்டு சென்று விட்டேன். அதுவும் குட்டை சட்டை கிடையாது. அப்படி குட்டையாக சட்டை போட்டுக் கொள்ள வீட்டில் அனுமதிப்பார்களா என்ன? இருந்தாலும் சட்டையை இன் பண்ணிக்க கொள்ளவில்லை என்று டீச்சர் ஒரே திட்டு. வீட்டில் வந்து என் பாட்டியிடம்,

"பாட்டிமா இன்னிக்கு என்னை ஸ்கூலில் பி.டி. டீச்சர் திட்டினா பாட்டிமா" என்றதும் என் பாட்டி "ஏன்?" என்று கேட்கவில்லை, "நீ என்ன பண்ணின?" என்றுதான் கேட்டார். விஷயத்தை சொன்னதும், "நல்லதுக்குத்தானே சொல்றா, டீச்சருக்கு என்ன உன் மேல் விரோதமா? உன்னை திட்டணும்னு ஆசையா? புருஷாளோட(ஆண்களோடு) படிக்கிறோம், நாமதானே  ஒதுக்கமா இருக்கணும்?" என்று என் வாயை அடைத்து  விட்டார். 

பாட்டி எத்தனை நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பது என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முறை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு சென்ற பொழுதுதான்  புரிந்தது. என் மகனோடு படித்த ஒரு பெண்ணின் தாய் முதலில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், அந்த வகுப்பாசிரியர் அவருடைய பெண்ணைப் பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தோரா இல்லையோ இவருக்கு முகம் மாறி விட்டது. "complaining, complaining" என்று பொருமித் தள்ளினார். தன் பெண்ணை மேம்படுத்தவே அந்த ஆசிரியர் அந்த குழந்தை செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் என்பதை  கூட புரிந்து கொள்ள முடியாத தாய், அந்தப் பெண்ணை எப்படி நெறி படுத்துவார் என்று நினைத்துக் கொண்டேன்.  என் பாட்டி போல ஒரு பாட்டி அவர்கள் வீட்டில் இல்லையோ என்னவோ?

என் அப்பாவோ, அம்மாவோ அதிகம் அட்வைஸ் கொடுத்ததில்லை. அம்மா மிகவும் வேகமானவர். நான் என் அம்மாவை வந்தியத் தேவி என்பேன். ஏனென்றால், கல்கி, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனைப் பற்றி "அவன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் கால இடைவெளியே இருக்காது, ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அதை செய்து முடித்திருப்பான்" என்று வர்ணித்திருப்பார். என் அம்மாவும் அப்படித்தான். அவ்வளவு வேகமாக இருப்பவரர்களுக்கு மற்றவர்களுக்கு சொல்லித் தரும் பொறுமை இருக்காது. 
"மேயற மாட்டுக்கு கொம்பிலா புல் சுற்ற முடியம்?" என்பது என் அம்மாவின் கேள்வி. அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்ட விஷயங்களுள் முக்கியமானது மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தக் கூடாது என்பதுதான். அதை அம்மா வலியுறுத்துவாள் சொல்லிலும்,செயலிலும். 

சிறு வயதில் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் என் பெரிய மாமி. "சாப்பாட்டை மென்று சாப்பிட வேண்டும், ஆனால் சாப்பிடும் பொழுது சத்தம் வரக்கூடாது". "குளித்து விட்டு முகத்தை அழுத்தி துடைக்கக் கூடாது, மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்" என்று அவர் சொல்லி கொடுத்ததை இன்று வரை கடை  பிடிக்கிறேன். இதைத் தவிர 'குட் டச்', 'பேட் டச்' போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

என் பெரிய அக்காவும் என்னைப் போலவே புத்தகப் பிரியை. புத்தகங்களை மடக்குவதோ, அடையாளத்திற்காக ஓரத்தை மடிப்பதோ அவருக்கு பிடிக்காது. அவருக்கு எந்த புத்தகம் படிக்க கொடுத்தாலும் உடனே அட்டை போட்டு விடுவார். புக் மார்க் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அவர்தான். புத்தகங்களில் கிறுக்குவது போன்ற விஷயங்கள் அவருக்கு கட்டோடு பிடிக்காது. பெயரைக் கூட முதல் பக்கத்தின் ஓரத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்பார். இன்றைக்கும் என் சேமிப்பில் இருக்கும் புத்தகங்கள் புதிது போலவே இருப்பதற்கு என் அக்காதான் காரணம்.

என் அண்ணா சிக்கலான சில நேரங்களில் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவைகள் மிகவும் ப்ரத்யேகமானவை என்பதால் பகிந்து கொள்ள முடியாது. என் கோபத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லி என்னை விட ஒரே ஒரு வயது மூத்தவளான என் கடைசி அக்கா எத்தனையோ அறிவுரைகளை கூறியும் நான் அவைகளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவளால் இயலாததை என் மகள் சாதித்தாள்.

ஒரு முறை எனக்கும் ஒரு ஆட்டோக்காரருக்கும் எங்களை சுற்றி கூட்டம் கூடும் அளவிற்கு பெரிய வாக்குவாதமாகி விட்டது. இறுதியில் அவர் கேட்ட தொகையை கொடுத்து விட்டு வரும்பொழுது, என் மகன்,"அம்மா நீ ரொம்ப கத்திவிட்டாய்" என்றான்.
"என்னடா, அவன் செய்தது சரியா?" என்றேன்
 உடனே என் மகள்,"அவன் செய்தது தப்புதான்மா , ஆனால் அதுக்காக நீ சண்டை போட்ட பொழுது உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே..! " என்றாள். 

என்னை யாரோ கன்னத்தில் ஓங்கி அடித்தது போல்  இருந்தது. அப்போது என் மகளுக்கு எட்டு வயதுதான், அந்த வயதில் அவ்வளவு மெச்சூரிட்டியோடு அவள் கூறிய அந்த அறிவுரை நம்முடைய கோபம் எத்தனைதான் நியாயமாக இருந்தாலும் பொது இடத்தில் கோபப படுவது அநாகரீகம் என்பதை உணர்த்தியது. 

படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எங்கே சென்றாலும் அங்கிருக்கும் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவேன். அங்கிருப்பவர்களோடு உரையாடுவதை விடுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல மாட்டேன். அந்த கேள்விகள் என் காதில் விழுந்தால்தானே? இதற்காக கொஞ்சம் திட்டு, கொஞ்சம் கேலி இவைகளை வாங்கி கொண்டாலும் என்னால் அந்த பழக்கத்தை அறவே  விட முடியவில்லை. எங்கள் நண்பர்கள், நான் அவர்கள் வீட்டுக்கு வருகிறேன் என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை மறைத்து வைப்பார்கள். 

ஒரு முறை என் அக்காவின் வீட்டிற்குச் சென்ற பொழுது வழக்கம்போல் நான் புத்தகத்தில் மூழ்கி விட்டிருக்கிறேன், என் அக்காவின் மாமியார் என்னிடம் ஏதோ கேட்டிருக்கிறார், நான் வழக்கம் போல் மௌனம்.. வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என் மகள், "அங்க வந்து நீ பாட்டுக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டாய், மாமி உன்னிடம் ஏதோ கேட்கிறார், நீ பதிலே சொல்லாமல் புத்தகம் படிக்கிறாய்... மற்றவர்கள் வீட்டுக்கு போய் புத்தகம் படிப்பதென்றால் எதற்கு மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? வெரி ரூட்(rude) பிஹேவியர்! என்று அட்வைஸ் மழை பொழிந்து விட்டாள்.(காய்ச்சி எடுத்து விட்டாள் என்றா சொல்ல முடியும்?)அத்தோடு விட்டேன் போகும் இடத்திலெல்லாம் புத்தகம் படிக்கும் கெட்ட பழக்கத்தை.

நான் பெற்ற இன்னொரு முக்கியமான அறிவுரை ஸ்ரீரெங்கத்தில் நாங்கள் வசித்த பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பௌராணிகரான  திருச்சி.கே.கல்யாணராமனின் தாயார் வழங்கியது. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். 
"நட்புக்கு வயது கிடையாது, பானு என்னுடைய ஃ பிரென்ட்" என்பார். அப்போது நான் கல்லூரி மாணவி. பரிச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கல்யாணராமனின் தாயார் என்னிடம்,
" நீ இப்போது எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். 
நான், நாளை பரீட்சை. அதில் என்ன கேள்விகள் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். 
மாமி உடனே, " இப்போதுதான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகத்தில் படித்தேன். உன்னிடம் யாராவது நீ எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நானா அந்தப் பூவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லும்படியாக உன் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்" என்று அதில் இருந்தது. அதை உன்னிடம் பரிசித்துப் பார்த்தேன் என்றார். 

என்ன அழகான மெசேஜ்! இதை பின்பற்றினால் மனதில் கள்ளத்தனம் தோன்றுமா?   

என் தோழி ஒருத்திக்கு நாம் ஏதாவது பரிசளித்தால் அதை உடனே உபயோகித்து நம்மிடம் காட்டுவாள். உதாரணமாக நாம் அவளுக்கு புடவை வாங்கி கொடுத்தால், அதை உடனே உடுத்திக்கொண்டு நமக்கு காண்பிப்பாள். இதை அவளிடமிருந்து கற்றுக் கொண்டேன். 

இன்னொரு தோழியை தொலைபேசியில் அழைக்கும் பொழுது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், "நன்னா இருக்கோம் பானு" என்று நிறைவாக சொல்வாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

விருமாண்டி படத்தில்,"நாம சந்தோஷமா இருக்கும் பொழுது பெரும்பாலும் அது நமக்குத் தெரிவதில்லை" என்று  ஒரு வசனம் வரும்.  நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது, அதை உணர்வதும், கர்வமில்லாமல் அதை வெளிப்படுத்துவதும் பெரிய விஷயம் இல்லையா?

(ஸ்ரீராம் நான்  நண்பர்களை குறிப்பிட்டு விட்டேன்).

இதைத் தவிர வாழ்க்கை நிறைய அறிவுரைகளை வழங்குகிறது,  கற்றுக் கொடுக்கிறது.

பிறப்பில் வருவது யாதென கேட்டேன் 
பிறந்து பார் என இறைவன் பணித்தான் 
இறப்பில் வருவது யாதென கேட்டேன் 
இறந்து பார் என இறைவன் பணித்தான் 
மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன் 
மணந்து பார் என இறைவன் பணித்தான் 
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் 
ஆண்டவனே நீ ஏன் என்றேன் 
படைத்தவன் சற்றே அருகினில் வந்து 
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவன் வார்த்தைகள் இவை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஓவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

அவற்றுள் மிக முக்கியமான பாடம், பெரிதாக கொண்டாடவோ, தூற்றவோ எதுவும் இல்லை என்பதுதான். 

அசோகாமித்ரன் ஒரு கதையில்,"உண்மையில் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்று எதுவும் இல்லை. ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அது புத்திசாலித்தனம், தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம்,முட்டாள்தனமாகி விடுகிறது" என்று எழுதி இருப்பார், எவ்வளவு உண்மை! இது புரிந்த பிறகு யாரையும் வியக்கவும் முடியவில்லை, யாரையும் இகழவும் முடியவில்லை.  காலம் சிலரை உயரத்தில் ஏற்றி உட்காரவைத்து விடுகிறது, சிலருக்கு அது வாய்ப்பதில்லை, அவ்வளவுதான். எனவே பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்னும் முதிர்ச்சி இறையருளால் வாய்த்து விட்டது. 

இந்த Blogathan ஐ தொடங்கி வைத்த மதுரை தமிழனுக்கும், அதில் என்னையும் பங்கு கொள்ள அழைத்த ஸ்ரீராமுக்கும் என் மனமார்ந்த நன்றி! இந்த ஒலிம்பிக் ஜோதியை என் கையிலிருந்து வாங்கி தொடர,

திரு.ராய செல்லப்பாவையும், 
திரு.நடன சபாபதி அவர்களையும், 
திரு.ஜீ.வி. அவர்களையும், 
திருமதி மனோ ஸ்வாமிநாதன் அவர்களையும், 
திருமதி. மிடில்க்ளாஸ் மாதவி அவர்களையும்  
அழைக்கிறேன். 

Wednesday, January 10, 2018

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

சும்மா சொல்லக் கூடாது, இந்த வருட சீசன் ஆரம்பமே அமர்க்களம். ராமா கான சபையில் அஷ்டபதி பஜனை முடிந்து தொன்னையில் சுடச் சுட வழங்கப்பட்ட பொங்கல் மார்கழி குளிருக்கு வெகு சுகம்! அதில் ஊற்றப்பட்டிருந்த நெய் ஆண்டாள் விரும்பியபடி உள்ளங்கையில் எடுத்தால் முழங்கையில் வழிந்தது. பொங்கலின் சிறப்பே அதில் ஆங்காங்கே முழித்துக் கொண்டிருக்கும் மிளகும், சரியான பதத்தில் வறுத்துப் போடப்பட்ட முந்திரியும்தான். கறிவேப்பிலை இருக்க வேண்டும், ஆனால் அதிகமாகி விடக் கூடாது. ஒரு தொன்னைக்கு ஒரு கறிவேப்பிலை வரும்படி எப்படித்தான் சேர்த்தார்களோ..?! என்னிடம் யாராவது உங்களுக்கு இட்லி வேணுமா? வடை வேணுமா? என்று கேட்டிருந்தால், நான் ராமா கான சபாவின் பொங்கல்தான் வேண்டும் என்று சொல்லியிருப்பேன்.



கொத்ஸு உண்டா? என்று யாரோ கேட்கிறார்கள், கொத்ஸு என்னங்காணும் கொத்சு? அப்படிப்பட்ட பக்க வாத்தியங்கள் எதுவும் தேவையே இல்லை, சோலோவாகவே ரசிக்க முடிகிறது அந்த பொங்கலை. 

காலையில் சாப்பிட்ட பொங்கலுக்கு சற்றும் குறைந்ததில்லை மதியம் சாப்பிட்ட லன்ச்! சாதாரணமாக ஹோட்டல்களில் முழு சாப்பாடு ஆர்டர் கொடுப்பது வேஸ்ட் என்று சொல்பவர்கள் உண்டு. 
ஆனால் கூல் சிப்ஸில் நாங்கள் ஆர்டர் கொடுத்த முழு சாப்பாடு பிரமாதம்! முதலில் வந்தது தக்காளி சூப். டின் சூப்பாக இல்லாமல் அசல் தக்காளியில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த சூப் ஆஹா ரகம்!

அடுத்து வந்த பூல்கா சப்பாத்தி மிருதுவாகவும்,நன்றாக வெந்தும் சீராக நெய் தடவப்படும் நம் தொண்டைக்கு இடம் அளித்தது. அதற்கான சைட் டிஷான சன்னா மசாலாவில் சன்னா வாயில் போட்டதும் கரையும்படி வெந்திருந்தது. 



சாம்பாரும்,புளிகுழம்பும் கொஞ்சம் காரம்தான். அடுத்து வந்ததம்மா ஒரு பைனாப்பிள் ரசம்! அடடா! அதன் பிறகு வந்த எல்லாமே சூப்பர் ரகங்கள்தான். புளிக்காத கட்டித் தயிர், கடாரங்காய் ஊறுகாய், செர்ரி சொருகப்பட்ட ஐஸ்க்ரீம்..! எதைச் சொல்ல? எதை விட? ஓஹோ!

மாலை ஜன ரஞ்சக சபா கேண்டீனின் மெது பக்கோடாவும், தயிர் வடையும் ஏமாற்றமளித்தன. அதுவும் தயிர் வடையின் மீது தூவப்பட்டிருந்த காரா பூந்தி கண்ராவி ராகம் சாரி ரகம்! போகட்டும், காபி குடிக்கலாம் என்றால் சூடு இல்லாமல், ஆடை படிந்த காபி..!  ஹும்! மூன்று தலைமுறைக்கு முன் மாயவரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் வாரிசு. அப்போதெல்லாம் இந்த ஹோட்டலின் ரவா தோசைக்காகவும், டிகிரி காபிக்காகவும் கும்பகோணத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வருவார்களாம். 

இரவு எட்டு மணி கிருஷ்ணன் கிருதி நடத்திய கச்சேரியின் உணவுத் திருவிழாவில் தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு இவற்றோடு மேற்கத்திய உணவும் கலந்து கட்டி எதை சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாமல் முழி பிதுங்கினோம். 

ஆனந்தசிரிப்பின் ஆஸ்தான விமரிசகர் குப்புடு தான் எழுத வேண்டிய சங்கீத விமர்சனத்திற்க்காக கூட அழைத்து வந்த தன் உதவியாளர் பப்படுவிடம் விமர்சனத்தை எழுத சொல்லி விட்டு ஸ்டார் ஹோட்டலில் போய் சுகமாக தூங்கி விட்டு மறு நாள் எந்தெந்த கான்டீன்களுக்குச் செல்வது என்று பட்டியலிட்டுக்  கொண்டிருந்த பொழுது  அவர் அறையின் டெலிபோன் விடாமல் ஒலித்தது. எடுத்தால் எதிர் முனையில் ஆ.சி.யின் ஆசிரியர்.

"என்ன சார் இப்படி பண்ணிடீங்க?"

"என்ன சார் யாராவது விட்டேனா பார் அந்த குப்புடுவை என்று கத்தினானா?"

"நானேதான்" என்று மனசுக்குள் கருவிக்கொண்ட பத்திரிகையாசிரியர், "நீங்க எழுதி அனுப்பி இருப்பதை உங்கள் ஐ.டி.க்கு மெயில் அனுப்பி இருக்கிறேன், ஒரு முறை பார்த்து விட்டு திருப்பி அனுப்புங்கள்" என்று கூறி போனை துண்டித்தார்.  

"அப்படி என்ன எழுதி விட்டான்? என்னை விட குத்தல் அதிகமோ..?"என்று யோசித்துக் கொண்டே மெயில் இன் பாக்ஸை திறந்து மேலே நீங்கள் படித்த விமரிசனத்தை படித்த குப்புடு அதிர்ந்தார். "அடப் பாவி! கெடுத்தானே குடியை..!" வரட்டும் என்று வன்மத்தோடு காத்திருக்க, "இன்றைக்கு எந்த காண்டீனுக்கெல்லாம் என்னை அழைத்துச் செல்லப் போகிறாரோ" என்று ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பப்படு உள்ளே நுழைய, அங்கே ஆரம்பமாகியது ஒரு தனி ஆவர்த்தனம்.

படங்கள் உபயம் கூகுள் 

Sunday, January 7, 2018

நாள் காட்டியும், நாள் குறிப்பும்

நாள் காட்டியும், நாள் குறிப்பும் 


















புது வருடம் என்றால் தவிர்க்க முடியாத விஷயங்களில் முக்கியமானவை காலண்டரும் டைரியும். புது வருடம் பிறக்கும் பொழுது புது காலண்டர் வீட்டில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத குடும்பஸ்தர்கள் உண்டா? குறிப்பாக ஆண்களுக்கு டைரியில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்கி கொள்வதில் இருக்கும் ஆர்வத்திற்கு நிகரானது.

 பெண்கள் காலண்டரில் காட்டும் ஆர்வத்தை டைரியில் காட்டுவதில்லை.  நல்ல டைரி ஏதாவது காம்ப்ளிமென்ட்டாக கிடைத்து, அதை வீட்டம்மாவிடம் ஐயா கொடுத்தாலும், அதில், தொலைக்காட்சியில் காட்டப்படும் சமையல் குறிப்புகள், பரிகார ஸ்லோகங்கள், போன்றவற்றை எழுதி வைக்கத்தான் பயன் படுத்துவார்கள். சிலர் ஸ்ரீ ராமஜெயம் எழுதவும் உபயோகப்படுத்திக் கொள்வதுண்டு.

தினசரி கணக்கெழுதும் எங்கள் தாத்தாவுக்கு அதற்கு லிஃ ப்கோ டைரிதான் வேண்டும்.  எங்கள் தாத்தா வயதொத்த பெரியவர்கள் பலருக்கு தினசரி டைரி எழுதும் பழக்கமிருந்தது. எங்கள் அப்பாவின் மாமா  தினசரி விடாமல் டைரி எழுதுவார். ஒவ்வொரு வருடமும் புது டைரி வாங்கிய பிறகு சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புது டைரியில் குறித்து வைத்து விடுவார். உதாரணமாக 2015 டிசம்பர் 2ல்  சென்னையில் வெள்ளம் வந்ததல்லவா, அதை 2016 டைரி வாங்கியவுடன் டிசம்பர் மாத ரெண்டாம் தேதி அன்று சென்ற வருடம் வெள்ளம் வந்தது என்று குறித்து வைத்துக் கொள்வதோடு ஒவ்வொரு வருடமும் அப்டேட்டும் செய்து கொள்வார்.  இதனால் அவருடைய ஞாபக சக்தி மிகப் பிரமாதமாய் இருக்கும். குடும்பத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் வருடம், தேதி, கிழமையோடு சொல்வார். 

அது மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களுக்கு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த தேதி, கிழமை, நட்சத்திரம் நேரம் இவற்றை குறித்து வைத்துக் கொள்வார். எங்கள் குடும்பத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதகம் குறிக்க வேண்டும் என்னும் பொழுது அவரிடமிருந்துதான் தங்கள் குழந்தைகளின் பிறந்த விவரங்களை பெற்றுக் கொள்வார்கள்.  வருடத்தை சொன்னால் அந்த வருட டைரியை எடுத்துப் பார்த்து, தேவையான தகவல்களை சொல்லி விடுவார்.  

மற்றபடி வேறு யாரும் அவ்வளவு முறையாக நாட்குறிப்பு எழுதி நான் அறியவில்லை. பெரும்பான்மையோர் அதிக பட்சமாக இரண்டு   மாதம் வரை எழுதுகிறார்கள் பின்னர் லாண்டிரி கணக்கு எழுதத்தான் பயன்படும், அல்லது சும்மா கிடக்கும். சுஜாதா டைரி எழுதுவதை குறித்து,"மற்றவர்கள் டைரியை படிப்பது அநாகரீகம், நாம் எழுதுவதை மற்றவர்கள் படிக்கக் கூடாது என்றால் ஏன் டைரி எழுத வேண்டும்? அதனால் எழுதுவதில்லை" என்று கூறியிருந்தார். 

என் சிறு வயதில் நிறைய டைரிகள் வீட்டிற்கு வரும். அதன் பிறகு பேப்பர் விலை, அச்சிடும் செலவு இவை அதிகமானதும் பலர் டைரிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். 

காலண்டர்கள் இன்னும் தங்கள் மவுசை இழக்கவில்லை. அப்போதெல்லாம் திருச்சியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்  காலண்டர் மிகவும் பிரசித்தி. அதில் தேதி பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும், மேலும் பக்கவாட்டில் தேதி குறிப்பிடப்பட்டு இடம் விடப்பட்டிருக்கும். அதில்  பால் கணக்கு, போன்றவை குறித்துக் கொள்ளலாம். அதை பெண்கள் மிகவும் விரும்பி சமையல் அறையில் மாட்டி வைத்துக் கொள்வார்கள். 

எனக்கு நினைவில் இருக்கும் வேறு சில பிரபலமான காலண்டர்கள் என்றால் மேட்டூர் கெமிக்கல்ஸ் வெளியிடும் காலண்டர். ஒவ்வொரு வருடமும் ஆயில் பெயிண்டிங்கில் மிக அழகான கடவுள் படங்களை வெளியிடுவார்கள். அவற்றில் மிக முக்கியமானவை ஸ்ரீகுருவாயூரப்பன், மீனாட்சி கல்யாணம் போன்றவை. அவைகளை பலர் சட்டமிட்டு தங்கள் பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர் மேட்டூர் கெமிக்கல்ஸ் காலண்டர் வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

ஏர் இண்டியாவின் காலண்டர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பாரம்பரிய சிறப்பை விளக்குவதாக இருக்கும். இப்போது அவையும் வருவதாக தெரியவில்லை. 

பாம்பே டையிங் காலண்டர்கள் பிரும்மச்சாரிகளுக்காக என்று நினைக்கிறேன். ஓவ்வொரு  வருடமும் அந்த வருடத்தின் பிரபல பாலிவுட் நடிகைகளின் பெரிய அளவு புகைப்படம் இடம் பெற்றிருக்கும் பெரிய சைஸ் காலண்டர்கள் அவை.

இப்போது நிறைய பேர் விரும்புவது GRT நிறுவனத்தின் காலண்டர் என்று நினைக்கிறேன்.  ஒரு மினி பஞ்சாங்கம் போல அதில் எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதைப் போலவே வேறு சில நகை கடைகளும் காலண்டர்கள் வெளியிடுவதே அதன் சிறப்பை உணர்த்துகிறதே.  இதைத்  தவிர தினமலர் காலண்டருக்கும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. பாலக்காட்டுக்காரர்கள் விரும்புவது மாத்ரு பூமி காலண்டர்களை. 


இது அட்லாண்டாவிற்கான காலண்டர் 
டேட் ஷீட் காலண்டர் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பு கொண்டவைதான்.  கிரிகோரியன் காலண்டர் தேதி (ஆங்கில வருட தேதி), முஸ்லீம்களுக்கான காலண்டர் தேதி, இந்துக்களுக்கான தேதி என்ற மூன்றோடு அந்த நாளின் நட்சத்திரம், யோகம், நல்ல நேரம், போன்ற விஷயங்கள் தவிர, அகத்திக்கீரை சாப்பிடுவது வாய்ப்புண்ணை ஆற்றும் போன்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கும். 

மஸ்கட்டில் எங்களுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட தினசரி காலண்டர்தான் வேண்டும் என்பார். அவருக்கு நட்சத்திரம், நல்ல  நேரம் போன்ற விவரங்கள் தேவை இல்லை. ஆனால் டெய்லி ஷீட் பெரிய சைசில் இருக்க வேண்டும்,  ஆங்கில,தமிழ்,இஸ்லாமிய தேதிகள் மூன்றும் பெரிதாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பார். நம் கையில் ஒரு சாம்பிள் ஷீட்டையும் கொடுத்து விடுவார்.  யாரெல்லாம் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்து விடுவார். எனவே எல்லோரும் ஒரு காலண்டர் வாங்கி  வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் ஹாலில் ஒன்று, டைனிங் ரூமில் ஒன்று, இரண்டு படுக்கை அறைகளிலும் தலா ஒன்று, சமையல் கட்டில் ஒன்று, நடைபாதையில் ஒன்று என்று எல்லா இடங்களிலும் நாள்காட்டிகள் நீக்கமற நிறைந்திருக்கும்.

இந்த வருடம் கனடாவில் இருக்கும் என் பெண்ணிற்காக ஒரு டெய்லி ஷீட் காலண்டர் வாங்கி அங்கிருந்து வந்திருக்கும் அவளுடைய தோழியிடம் கொடுத்தனுப்ப விரும்பினேன். என் மகனும், கணவரும் இப்போதெல்லாம் செல் போனில் நாள் காட்டிகள் வந்து விட்டன. எதற்கு காலண்டர் என்கிறார்கள்.