கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 10, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 


சிறு வயதில் பயணம் செய்ய மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் திருச்சி, விடுமுறை நாட்களில் கண்டமங்கலம் தவிர அதிகம் பிரயாணம் செய்ய வாய்த்ததில்லை. மிகவும் நெருங்கிய உறவுக் காரர்கள் வீட்டு திருமணங்களுக்கு குழந்தைகளில் யாராவது ஒருவரைத்தான் அழைத்துச் செல்வார்கள். அந்த லக்கி டிராவில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் உண்டு. அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்களின் ஒன்று விட்ட மாமாவின் திருமணத்திற்க்காக முதன் முதலாக சென்னை (அப்போது மெட்ராஸ்) வரும் வாய்ப்பு கிடைத்தது. என் மூத்த சகோதரி திருமணமாகி புதுக்கோட்டையில் இருந்த பொழுது ஓரிரு முறைகள் புதுக்கோட்டை சென்றிருக்கிறேன். இரண்டாவது அக்கா, மூன்றாவது அக்காக்கள்  திருமணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது சென்னை வந்தேன். என் திருமணத்திற்குப் பிறகு பயணங்கள் கொஞ்சம் அதிகம்தான். 

பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது. இப்போதும் பயணம் செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் உடல் சற்று அசந்து போகிறது. தவிர, பயணங்களுக்குப் பிறகு வீட்டை சீரமைப்பதை நினைத்தால், எங்கேயும் போக வேண்டாம் என்று தோன்றுகிறது. 

மூன்று வாரங்களாக புட்டபர்த்தி, திருவண்ணாமலை, திருப்பதி மயிலாடுதுறை என்று சற்று அலைச்சல். புட்டபர்த்தியில் முன்பு போல வெளிநாட்டவர் அதிகம் இல்லை. அங்கிருந்த வெஸ்டர்ன் கேண்டீன் மூடப்பட்டு விட்டது.  

 திருவண்ணாமலைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்றேன். பெரிதாக மாற்றமில்லை. நாங்கள் அங்கிருந்த பொழுது மளிகை சாமான்கள் உள்பட வாங்கி கொண்டிருந்த ரோஷன் மால் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  














கிரிவலம் வரும் பொழுது அடி அண்ணாமலையார் கோவிலிலிருந்து பார்த்தால் மலையின் இந்த பகுதியில் நந்தியின் முகம் போல தெரியும். இந்த படத்தில் இரண்டு செடிகளுக்கு இடையில் பாருங்கள் ஒரு முண்டு போல் தெரிகிறது. நேரில் பார்க்கும்பொழுது அமர்ந்திருக்கும் நந்தி போலவே தெரியும். என்னுடைய செல் போனில் இவ்வளவுதான் முடிந்தது.










நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது திருப்திக்குத்தான் முற்றிலும் பொருந்தும்.  நான்கு வருடங்களுக்குப் பிறகு திருப்பதி விஜயம். APTDC மூலம் முன் பதிவு செய்து கொண்டு சென்றோம். நாங்கள் புக் பண்ணிய பொழுது திருப்பதியில் தரிசனத்திற்க்காக ரூ.300க்கு டிக்கெட்,காலை சிற்றுண்டி, பகல் உணவு உட்பட நபர் ஒருவருக்கு ரூ.1600/- என்றார்கள். ஆனால் பயணம் செய்த அன்று ஜி.எஸ்.டி. வரியால் ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்து விட்டன, எனவே சிற்றுண்டி, மதிய உணவு நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறி, ரூ. 200/- திருப்பி தந்து விட்டார்கள்.  எப்படியோ, ஒரு பெரிய கூடத்திற்குள் நுழைந்து, நீ...ள ... நடந்து, ஒரு இடத்தில் இடது புற கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது கோபுரம் தெரிந்தது. இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. பெரிதாக கும்பல் இல்லை, என்றாலும்  ஸ்வாமியை தரிசிக்க செல்லும் வாயில் அருகே ஏனோ தள்ளு முள்ளு. வித்தியாசமாக அலமேலுமங்காபுரத்தில் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. 





மயூரநாதர் கோவில் முகப்பு 
மாயவரத்திற்கு அருகில் இருக்கும் என் பெண் வீட்டாரின் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் மாயவரத்தில் தங்குவோமே தவிர அங்குள்ள மயூரநாதர் கோவிலுக்குச் செல்வதில்லை. இந்த முறை மயூரநாதர் கோவிலுக்குச் சென்றோம். அன்று பௌர்ணமி என்பதாலோ என்னவோ நிறைய பேர் கோவிலை வலம் வந்து 
கொண்டிருந்தார்கள்.  அபயாம்பிகை சந்நிதியில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நின்ற நெடிய கோலத்தில் மனதை கொள்ளை கொண்டாள் அபயாம்பிகை. 

மறுநாள் என் மகள் வீட்டாரின் குலதெய்வமான சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கும் பெரம்பூருக்கு சென்று அபிஷேக, ஆராதனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இன்னும் திருநெல்வேலி, உடுப்பி, சிருங்கேரி, பண்டரிபுரம், கோனார்க் சூரியன் கோவில், பத்ரிநாத் போன்ற ஆன்மீக பயணங்களும், சுற்றுலாவாக லண்டன்,பாரீஸ், ரோம், ஸ்விசர்லாந்து போன்ற நகரங்களுக்கும் செல்ல ஆசை. ம்ம்ம்ம்!