கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, November 9, 2017

மாதா பிதா குற்றம்...

மாதா பிதா குற்றம்...

என் இலக்கிய பணியாற்றுவதற்காக கணினியை திறந்ததும் அது, "என்ன எழுதப் போகிறாய்?" என்றது.

"கதை" 

"ஏற்கனவே க.க க.விற்காக ஒரு கதையும், சீ.ரா.ம வுக்காக ஒரு கதையும் பாதி எழுதி வைத்திருக்கிறாய், இப்போது இன்னொன்றா?"

"அதை பற்றியெல்லாம் நீ ஏன் கவலைப் படுகிறாய்?" 

"ம்ம்.. சரி, சரி, என்னவோ செய்..? இது என்ன சமூகக்  கதையா?"

"சரித்திரக்  கதை என்று கூட சொல்லலாம்." 

"அடி சக்கை! அப்போ புரவிகளின் குளம்பொலி கேட்கும், வாட்கள் டணால் டணால் என்று மோதிக் கொள்ளும்,கச்சை அணிந்த பெண்கள்..."

"நிறுத்து.. சரித்திர கதை என்றால் புரவிகளின் குளம்பொலிக்க வேண்டுமா? இது அவ்வளவு பழைய சரித்திரம் அல்ல, ஒரு எழுபது வருட பழசு.. எழுபது வருடங்களுக்கு முன்னாள் நடந்ததை சொல்வது சரித்திரம் ஆகாதா?"

"ஓ.. ஒ .. ஓ.கே. ஓ.கே. அப்போ பெண்களெல்லாம் நிறைய நகைகள் அணிந்து கொண்டு, அதிரசம், முறுக்கு எல்லாம் செய்வார்கள் அப்படித்தானே?"

"பெண்கள், பெண்கள், ஏன் இப்படி இருக்க?"

"இல்ல, அந்தக் கால பெண்களின் பிரச்னைகளை பேசப் போகிறாயோ? என்று நினைத்தேன்..."

"ஒரு பெரிய மனிதர், ஊரும் உலகமும் கொண்டாடியவர், தெய்வ பக்தி கொண்டவர், அவர் செய்த ஒரு தவறு இன்றளவும் அவர் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்று சொல்லப் போகிறேன்."

"அட! பீரியட் ஸ்டோரி..! இண்ட்ரஸ்டிங்..! ம், சொல்லு சொல்லு.." 

"நீ கொஞ்சம் தொண தொணன்னு பேசாமல் இருந்தால்தான் என்னால் எழுத முடியும்..."

"சரி, சரி பேசல.. ஏதாவது சந்தேகம் வந்தால் கேக்கிறேன்.. கதை எங்கே ஆரம்பிக்கிறது?"

எண்பது, தொண்ணூறு வருடங்களுக்கு முன்னாடி, தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்தை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்த   மிராசுதார் மகாதேவ ஐயரை அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் அறியாதவர் கிடையாது. மூதாதையர் வைத்து விட்டு போன சொத்தை பெருக்கும் சாமர்த்தியம், அழகான மனைவி, அவள் மூலம் ஐந்து பெண்கள், ஐந்து பிள்ளைகள் என்று குறைவில்லாத பிள்ளை செல்வம், ஆள், படை, ஊரில் மரியாதை இவற்றோடு அந்த கால தஞ்சை மிராசுகளுக்கு இருந்த கெட்ட பழக்கங்களான சீட்டுகட்டு விளையாட்டு, சின்ன வீடு போன்றவை இல்லாதது, திரிகால சந்தியா வந்தனம், பஞ்சாயதன பூஜை போன்றவைகளும் அவர் மரியாதையை அதிகப் படுத்தின. இது மட்டுமல்லாமல் அவருடைய குருவின் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டவர். 
நல்ல உயரத்தில் ஆஜானுபாகுவாய், பஞ்சகச்சம், உத்தரீயம்,  நெற்றியில் எப்போதும் பளிச்சென்று விபூதி, குடுமி, காதுகளில் வைர கடுக்கன்களோடு அவர் தெருவில் வந்தால் எல்லோருக்கும் எழுந்து நிற்கத் தோன்றும். 

அந்த வருடம் சாதுர்மாஸ்ய பூஜையை கும்பகோணத்தில் வைத்துக் கொண்டார் பெரியவர். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மஹாதேவனே எடுத்துக் கொண்டார். உதவிக்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்தும் சிலரை சேர்த்துக் கொண்டார். அப்படி அவருக்கு அறிமுகமானவர் சீதாராமன். 

மகாதேவன் அளவிற்கு சொத்து இல்லாவிட்டாலும் சீதாராமனும் ஓரளவு வசதி படைத்த நிலச்சுவான்தார்தான். மற்ற விஷயங்களில் மகாதேவனுக்கு நிகரானவர். 

சாதுர்மாஸ்யம் முடிந்து பெரியவர் ஊரை விட்டு கிளம்பும் முன் மஹாதேவன், சீதாராமன் ஆகிய இரண்டு பேருக்கும் தனியாக பிரசாதங்கள் கொடுத்தார். பிறகு மஹாதேவனைப் பார்த்து,

"உன் பெரிய புள்ள என்ன பண்ரான்?" என்று வினவ,

"பட்டணத்துல பி.ஏ. படிச்சுண்டிருக்கான்"

கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாயா ?

இன்னும் இல்ல.. என்றவருக்கு ஏதோ பொறி தட்டியது.. கல்யாணத்துக்கு பாக்கச் சொல்றேளா? என்று கேட்க..
அவர் சிரித்துக் கொண்டே தலை ஆட்டி, அவருக்கு முன் இருந்த பழத்தட்டிலிருந்து ஒரு பழத்தை எடுத்து மஹாதேவன் கையில் போட்டார். பிறகு, சீதாராமன் பக்கம் திரும்பி," உன்னோட பெரிய பொண்ணுக்கு என்ன வயசாறது..? என்றார் 

"பதிமூணு.."

"ஜாதகம் எடுத்துட்டியா?"

"இனிமேதான் எடுக்கணும்.."

குருன்சிரிப்போடு அவருக்கும் ஒரு பழத்தோடு கொஞ்சம் பூவும் சேர்த்துக் கொடுக்க, அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட சீதாராமன் மகாதேவனை பார்க்க, இருவருக்குமே பெரியவர் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார் என்று தோன்றியது. 

அதன் பிறகு அவர்கள் ஜாதகம் பரிவர்த்தனை செய்து கொண்டு, பொருத்தமாக இருப்பது தெரிய வந்து, ஒரு நல்ல நாளில், பெண் பார்த்து, சம்மதம் தெரிவித்தார்கள். பிறகு உடனே வந்த ஒரு நல்ல நாளில், சீதாராமன், மஹாதேவ ஐயர் வீட்டிற்கு சீர் வரிசைகள் பற்றி பேசுவதற்காக சென்றார்.

பெரும்பாலான அந்தக் கால வீடுகளைப்  போல மூன்று கட்டு வீடு. செல்வ செழிப்பு வழிந்தோடியது. ரெட் ஆக்சைடால் பவழம் போல பளபளத்த திண்ணை, நடுவில் முற்றம், கூடத்தில் ஊஞ்சல், கூட சுவற்றில் மறைந்த குடும்ப பெரியவர்களின் பெரிய படங்கள். பின்னால்  மாட்டு கொட்டிலில் பசு, எருமை, மற்றும் காளை மாடுகள். 

விசாலம் அதிர்ஷ்டம் செய்தவள்தான் என்று சீதாராமன் மனசுக்குள் நினைத்துக் கொண்டார். தெய்வ பக்தியும், குரு பக்தியும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சீர், செனத்தி என்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் நினைப்பை பொய்யாக்கியது மஹாதேவ அய்யரின் சித்தப்பா பேசிய பேச்சு.

"எங்காத்து மூத்த பையன் மஹாதேவன், அவனோட பெரிய புள்ள கணேசன். எங்களோடது ஊருல ரொம்ப கௌரவப்பட்ட குடும்பம். அதுனால, அந்த கௌரவத்துக்கு ஒரு குறைச்சலும் வந்துடக் கூடாது."என்றவர் பெண்ணுக்கு போட வேண்டிய நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பையனுக்கு செய்ய வேண்டியவை, அதைத் தவிர பையனுக்கு ட்ரெஸ்ஸுக்கு என்று ரொக்கம் இத்தனை, எதிர் ஜாமின் இவ்வளவு, என்று ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார். 

"எதிர் ஜாமீன்...? அப்படின்னா?

"வரதக்ஷணையைத்தான் எதிர் ஜாமீன் என்பார்கள். குறுக்கே பேசாதே என்று சொன்னேனா இல்லையா?"

"சாரி, கோவித்துக் கொள்ளாதே" 

சீதாராமனுக்கு எல்லாவற்றையும் சமாளித்து விடலாமென்று தோன்றினாலும், அவர்கள் கேட்ட வைர தோடு கொஞ்சம் அதிகம் என்று பட்டது. அதை சொன்ன பொழுது, 

"எங்காத்துல எல்லாரும் வைரத்தோடுதான் போட்டுண்டிருக்கா, நாங்க ரென்று பெண்களுக்கு வைரத்தோடு போட்டுதான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம், ஆத்துக்கு வர மூத்த மாட்டுப்பெண் வைரத்தோடு போட்டுக்காம இருந்தா நன்னாயிருக்குமா? ஒரு வைர தோட்டுக்கு கூட வழியில்லாத இடத்திலிருந்தா பெண் எடுத்திருக்கான்னு எங்க சம்பந்திகள் நினைச்சுக்க மாட்டாளா?.."

ஒரு நல்ல சம்பந்தம் வைர தோட்டினால் நிற்க வேண்டாம் என்று தோன்ற சீதாராமன் அதற்கும் ஒப்புக்கொண்டார். 

ஆனால் அவர் ஒரு தவறு செய்தார். வீட்டிற்கு வந்து  எல்லா- வற்றையும் சொன்ன அவர் தான் மகளுக்கு வைரத்தோடு போடுவதற்கு ஒப்பு கொண்டதை சொல்லாமல் விட்டு விட்டார். 

அவர் வீட்டில் பணம் வரவு செலவெல்லாம் பார்ப்பது அவருடைய அம்மாதான். கணவர் மறைவுக்குப் பிறகு நிலத்திலிருந்து வந்த வருமானத்தையெல்லாம் சிக்கனமாக செலவு செய்து மிஞ்சியதை வட்டிக்கு விட்டு, கறாராக பணத்தை வசூல் செய்து அதை வங்கியில் வேறு போட்டு வைத்திருப்பாள். அதில் சேரும் பணத்தை எடுத்து அவ்வப்பொழுது நகைகளும் பேத்திகளுக்காக செய்து வைத்திருந்தாள். ஆனால் வைரத்தோடு என்பது தங்கள் சக்திக்கு மீறியது என்று நினைத்தால் இந்த வரனே வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லி விடுவாள். ஒரு நல்ல வரனை ஏன் இழக்க வேண்டும்? என்று நினைத்த சீதாராமன் அம்மாவிடம் சொல்லாமல் இருந்தது தவறு கிடையாது, வைரத்தோடு எப்படி போடுவது என்று யோசித்திருக்கலாம். குறைந்த பட்சம் உத்யோகத்தில் இருந்த தன்  தம்பியிடமாவது சொல்லியிருக்கலாம்.  தனக்கு குழந்தைகள் இல்லாததாலோ என்னவோ, அண்ணா குழந்தைகளிடம் அளவற்ற பாசம் வைத்திருந்த அவர் தம்பி வைரத்தோடு வாங்கி கொடுத்திருப்பார். சீதாராமன் அதையும் செய்யாமல் விட்டுவிட்டு மற்ற கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.   

கல்யாணத்திற்கு முதல் நாள், ஒரு மோட்டார் கார், ரெண்டு வில் வண்டி, சில கூண்டு வண்டிகளில் வந்து இறங்கிய மாப்பிளை வீட்டாரை தனது உறவினர் வீட்டில் இறக்கினார்கள். வந்து காபி குடித்த கையோடு ஆண்கள் திண்ணை திண்ணையாக சீட்டு விளையாட உட்கார்ந்தனர். சாப்பாடு ஆன பிறகு பெண்கள் ஒரு கூட்டமாக மணப்பெண்ணை பார்ப்பதற்கு வந்தனர். 

பெண்ணின் கை, கழுத்து,காது,மூக்கு இவைகளில் தாங்கள் கேட்டிருந்த நகைகளை அந்தப் பெண் அணிந்து கொண்டிருக்கிறாளா என்று நாசூக்காக சோதித்தார்கள். மாப்பிள்ளையின் அத்தை, "தோடு எங்க பண்ணினேள்? கோபால்தாசா? எத்தனை காரட்?" என்று கேட்க, அதன் உள் வர்த்தமானம் தெரியாத பெண்ணின் தாயார், இது வைரத்தோடு இல்லையே, புஷ்பராகம்தான் என்றதும், அவர்கள் முகம் சட்டென்று மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், உடனே கிளம்பி சென்று விட்டார்கள்.

மதியம் சம்பந்திக்கு காபி கொண்டு சென்ற சீதாராமனின் தம்பி, அண்ணாவிடம் வந்து," அண்ணா அங்கே என்னவோ சரியில்ல.. மஹாதேவ ஐயர் உன்னை பார்க்கணும்னு சொல்றார்.." எங்க, சீதாராமனுக்கு வயிறு கலங்கியது. 

தன் மைத்துனன் ராமுவையும் அழைத்துக் கொண்டு மஹாதேவ ஐயரை பார்க்கச் சென்றார். 

சம்பந்திகள் தங்கி இருந்த வீட்டின் ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஹாதேவன், இவர்களை பார்த்ததும்," என்ன சீதாராமன், நீங்க பெரிய மனுஷன்னு நினைச்சேன், இப்படி மோசம் பண்ணுவேள்னு எதிர்பார்கலையே.."என்று சற்று காட்டமாக கூற, விதிர்த்துப் போன சீதாராமனும், ராமுவையரும், "நீங்க, எ ..ன்..ன .. சொல்றேள்..தெரியலையே ?"

தெரியலையா..? பேஷ்! இதுதான் உங்க ஊர் பழக்கமா? சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு.."

ஒத்துண்டது எல்லாம் பண்ணியிருக்கோமே.. எது பண்ணலை?

ராமுவையர் கேட்க, இதை ஏன் எங்கிட்ட கேக்கற? உங்க அத்திம்பேர் கிட்ட கேளு? பொண்ணுக்கு வைரத்தோடு போடறேனு ஒத்துண்டாரா இல்லையானு?

வைரத்தோடா..? திடுக்கிட்ட ராமுவையர் சகோதரியின் கணவரைப் பார்க்க அவர் பதில் சொல்லாமல் தலை குனிந்து கொண்டதும் சட்டென்று சுதாரித்தார்.

அது வேறொண்ணுமில்லை, இந்த முறை விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லை. பாதிக்கு மேல சாவியாயிடுத்து, அதனாலதான்... வைரத்தோடு வாங்க முடியல., இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்கோ, எப்படியாவது வைரத்தோடு போட்டுடறோம்.."

அப்போ, ஒரு மாசம் கழிச்சு கல்யாணத்த வைச்சுக்கலாம்.. மஹாதேவன் நிர்தாட்சஷண்யமாக கூறினார்.

நீங்க பெரியவா.. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. என்ற சீதாராமன், மொதல்ல காப்பிய குடிங்கோ.. என்று கூஜாவிலிருந்து காபியை டம்பளரில் ஊற்றி, அவரிடம் நீட்ட 

என்னய்யா..? காபிக்கு வீங்கிப் போய் உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்னு நினைச்சீரா? என்று டம்பளரை தட்டி விட, கூடத்தில் காபி சிதறியது. 

வைரத்தோடு போட்டால் என் பிள்ளை ஜானவாசத்துக்கு வருவான், இல்லைனா நாங்க, கிளம்பறோம்..

ஐயையோ..! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, நாங்க ஏற்பாடு பண்றோம்.. கை கூப்பி வணங்கி இருவரும் வெளியே வந்தார்கள். 

இந்த விஷயங்கள் வெளியே தெரியாததால் திண்ணைகளில் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள், " என்னங்கனும் ? காபி சூடே இல்லை? சூடா வேற நல்ல காபி கொண்டு வரச் சொல்லுங்கோ" என்று தாங்கள் வந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் ஓடிக் கொண்டிருந்தார்கள். 

அம்புலு உன்னை தலை பின்னிக்க கூப்பிடறா? காமு உன் நாத்தனாருக்கு கல்யாணமாச்சே.. அவளை நன்னா வெச்சிண்டிருக்களா? போன்ற சப்தங்களுக்கிடையியே சீதாராமனும், ராமுவும் தங்கள் வீட்டை அடைந்தனர்.  சீதாராமன் செய்வதறியாமல் வாசல் திண்ணையில் உட்கார்ந்து விட்டார். ராமு வீட்டின் முக்கியஸ்தர்களான தன் சகோதரி, அவளின் மாமியார், மைத்துனர் இவர்களை அழைத்து நடந்த விவரங்களைச் சொன்னார். 

"என்னடா சீதாராமா இப்படி பண்ணிட்ட? முன்னாலேயே சொல்லியிருக்க மாட்டாயா?" என்று அவர் அம்மாவும்,
"என்னண்ணா எங்கிட்ட சொல்லியிருக்க மாட்டேளா?" அன்று அவர் தம்பியும் புலம்பத் தொடங்கினார்கள். 

நடந்தது நடந்து போயாச்சு, இனிமே என்ன பண்ணனும்னு யோசிக்கணும். என்ற ராமுவையர், தன் அக்காவிடம், "மீனா, உன் காதுல இருக்கற வைரத்தோட்டை அவிழ்த்து உன் பெண் காதில் போடு, கல்யாணம் நடந்தாகணும்" என்றார். 

என் தோட்டை அவளுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணுவேன்? என்று விஷயத்தின் தீவிரத்தை உணராமல் அவள் கேட்டதோடு நிற்காமல், இது என் அம்மா எனக்கு கொடுத்தது, என் பொண்ணு கல்யாணத்தில் நான் மூளி காதோடு நிற்பேனா? என்றும்,  இதையும் அவிழ்த்து கொடுத்து விட்டால், எனக்கு இவர்கள் தோடு வாங்கித் தரவே மாட்டார்கள் என்றெல்லாம் சுய நலமாக பேசி பெரிதாக அழவும் தொடங்க, இந்த விஷயம் வெளியில் யாருக்கும் குறிப்பாக விசாலத்திற்கு தெரியக் கூடாது என்று அவர்கள் நினைத்ததற்கு மாறாக மெல்ல மெல்ல வெளியே கசியத் தொடங்கியது.

என்ன மாமா? என்ன சித்தப்பா? என்று மணப்பெண்ணான விசாலம் அழத் தொடங்கினாள்.

"சீ! சீ! அசடு! ஒண்ணும் இல்லை, நீ இப்போ எதுக்கு அழற? நாங்கள்ளலாம் எதுக்கு இருக்கோம்? கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்துவோம். நீ அழாதே.." என்று அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு, அவளைத் தனியே விட வேண்டாம் என்று தன் இளைய சகோதரியிடம் கூறி விட்டு, தன் மனைவியை தனியே அழைத்து," இங்க பாரு விஜயம், இப்போ விசாலத்தோட கல்யாணம் முக்கியம். மீனாக்கு அது புரியல, புரிய வைக்க இப்போ நேரம் இல்ல, மணி ஆயிண்டிருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல ஜானவாசத்துக்கு மாப்பிளையாத்துக்காரா  வரலைனா, ஊர் முழுக்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப அவமானமாயிடும். அதனால நீ உன்னோட வைரத்தோட அவிழ்த்து விசாலம் காதுல போடு, அடுத்த மாசம் கைலாசம் தோடு வாங்கி கொடுத்துடுவான்.." என்று கூற, நிலைமையை உணர்ந்து கொண்ட விஜயம் தன்னுடைய வைரத் தோட்டை நாத்தனார் மகளின் காதில் போட்டு விட்டாள். அது வைரத் தோடுதான் என்பதை உறுதி செய்து  கொண்ட மஹாதேவ ஐயர் குடும்பம் ஜானவாசத்துக்கு கிளம்பியது. 

அடப்  பாவிகளா! மனசாட்சி கிடையாதா? எனக்கு என்னவோ அந்த கணேசன் மீதுதான் கோபம் வருகிறது. விவரம் அறிந்தவன்தானே.. அப்பாவிடம் சொல்ல மாட்டானா? 

அப்போதெல்லாம் பெரியவர்கள் ஒரு கோடு போட்டு விட்டால் அதை யாரும் தாண்ட மாட்டார்கள்.

அப்புறம்..?

அப்புறம் என்ன? கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. விசாலமும் ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி பொறுமையாகவும், அனுசரித்தும் நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்கினாள். அது மட்டுமல்ல, அவளும், கணேசனும் கருத்து ஒருமித்தவர்களாக வாழ்ந்தனர். இரண்டு பெண்கள், மூன்று பிள்ளைகள். குழந்தைகளும் தங்கம். ஆனால் அவர்கள் செய்த வினை, நிச்சயம் செய்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பெண் வீட்டாருக்கு அவர்கள் கொடுத்த டென்ஷன், கணேசன் விசாலம் குழந்தைகளின் திருமணத்தில் பழி வாங்கியது. 

என்ன நடந்தது?

அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம் எல்லாம் நன்றாகவே அமைந்தது. தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டுதான் தங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் பிறந்த ஆண் குழந்தைகள் சொல்லி விட்டு, தங்கைக்கு திருமணத்துக்கு வரன் பார்த்தார்கள், பார்த்தார்கள், பார்த்தார்கள்... என்னென்னவோ காரணம், திருமணம் கூடி வரவே இல்லை. 

கணேசனின் தம்பிகள் கொஞ்ச நாள் பொறுத்தார்கள், பிறகு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார்கள். குடும்பத்தில் கணேசனின் குழந்தைகளுக்குத்தான் கடைசியில் திருமணம் ஆனது. மூத்த பெண்ணுக்கு முப்பத்திரண்டு வயதில்தான் திருமணம் ஆனது.  அதற்குப் பிறகு பையன்களுக்கு திருமணம் ஆகும் பொழுது கிட்டத்தட்ட நாற்பது வயது ஆகிவிட்டது. கடைசி பெண்ணுக்கும் நாற்பது வயதுக்கு மேல்தான் திருமணம் ஆனது. அது மட்டுமில்லை, அவர்களுடைய குழந்தைகளுக்கும் திருமணம் ஆகுமா என்று கவலைப்பட்டு மிகவும் தாமதமாகத்தான் திருமணம்.

சரி, இதிலிருந்து நீ எதை நிலை நாட்ட விரும்புகிறாய்?

நான் என்ன ரெண்டாம் கிளாஸ் குழந்தைக்கா கதை சொல்கிறேன்? 'மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்' என்று சொல்லி முடிக்க? இதிலிருந்து நீ என்ன புரிந்து கொண்டாய் என்று சொல்..

மாதா பிதா குற்றம் மக்கள் தலையில்... அதுதானே?

வெரி குட்! கரெக்டாக பாயிண்டை பிடித்து விட்டாய்.

ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்?

போச்சுடா..! வரவில்லயே என்று நினைத்தேன்.. என்ன சந்தேகம்?

மஹாதேவன், சீதாராமனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்குமா என்னும் பரிதவிப்பை  கொடுத்தார். அதே பரிதவிப்பு அவருடைய மகனுக்கு வந்தது. ஓ,கே. ஆனால் அந்தப் பெண் விசாலம் என்ன தவறு செய்தாள்? முதலில் தன திருமணம் எங்கேயாவது நின்று விடுமோ என்னும் அச்சம். இப்போது வேண்டுமானால் நிச்சயித்த திருமணங்கள் நின்று போவது சகஜமாக இருக்கிறது, எழுபது வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய அவமானம். அது அவளுக்கு எத்தனை மன உளைச்சலை கொடுத்திருக்கும்? பின்னாளிலும் தன் குழந்தைகளுக்கு திருமணம் தள்ளிப்போவது ஒரு தாயாக அவளை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்குமே? அவளுக்கு ஏன் இது நேர்ந்தது? அவள் பெற்றோரோ, அவளோ எதுவும் தவறு செய்ததாக தெரியவில்லையே? 

ஒண்ணு  புரிஞ்சுக்கோ.. வாழ்க்கையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடையாது. நான் படுத்துக்க கொள்ள வேண்டும்.. மணி ஆகி விட்டது. 

சரி சரி அதற்காக விண்டோஸ்களை க்ளோஸ் பண்ணாமல் ஷட் டௌன்... .பண்ணா...

ம்ம்ஹும் .. இருள் சூழ்ந்து விட்டதே..! 

32 comments:

  1. இங்கே பாவம் ஓரிடம், பழி இன்னோரிடம் என்றல்லவா இருக்கு? தப்பே செய்யாத தம்பதிகளுடைய குழந்தைகளுக்கு ஏன் இந்த தண்டனை? தப்பு செய்ததுனு பார்க்கப் போனால் தோடு போடணும்னு கேட்டதை வெளியே சொல்லாமல் இருந்த சீதாராமன். தோடே கேட்டிருக்கக் கூடாது என்பது அத்தனை பணக்காரர் ஆன மஹாதேவ ஐயருக்கு, இத்தனைக்கும் சங்கரமடத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவருக்குத் தெரியாமலும் புரியாமலும் போனது அதிசயமே! அவர் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், "இந்தக் கல்யாணம் பெரியவா ஆசீர்வாதத்துடன் நடக்கிறது! யாரும் இது, அதுனு பேச வேண்டாம்னு சொல்லி இருந்தால்?" பிரச்னை முடிஞ்சே போயிருக்கும்! யாருக்கும் மீறத் தோன்றாது. மஹாதேவ ஐயரும், சீதாராம ஐயரும் தப்புப்பண்ணி இருக்கக் கடைசியில் கணேசனும், விசாலமும் தண்டனை அனுபவித்தார்கள். என்ன தான் இருவரும் அவங்களுடைய குழந்தைகளாக இருந்தாலும் இதை ஏற்க முடியவில்லை. :(

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா எனக்கும் இது தோன்றியது. ஆனால் பானுக்கா சொல்லியிருப்பது உண்மைக் கதை போல இருக்கு.

      ஆனா அது தெரியாம.... செம நடை...சொல்லிய விதம் ரொம்ப ரசிக்கும்படி இருக்கு. கான்வெர்சேஷன்ஸ் தொய்வில்லாமல்...அருமை.

      பானுக்காவே அந்தக் கேள்வியும் எழுப்பிட்டாங்களே ரெட் வரிகளில்....அப்புறம் சில கேள்விகளுக்குப் பதில் இல்லை...ஆமாம்.அது எனன்வோ உண்மைதான்...நானும் பல விஷயங்களுக்கு என்ன ரீஸன் இருக்கும் என்று மண்டையைக் குடைந்து கொள்வதுண்டு. இல்லனா மனசு சமாதானம் அடையாதே!! இருக்கவே இருக்கு கர்மாவினை! இப்போது இந்த வார்த்தை வாட்சப்பில் ரொம்பவே பிரபலம் என் நெருங்கிய உறவினர்கள் அனுப்பும் ஃபார்வேர்ட்ஸ் ஃப்ரம் ஒரு சில குழுக்கள்..

      கீதா

      Delete
    2. வாங்க தில்லையகத்து கீதா! இப்போதைய வாழ்க்கை முறையில் பெற்றோர், உடன்பிறந்தார் என அனைவருக்கும் எல்லாமும் செய்து கடன்பட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திய தம்பதிகள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிரமங்கள், சங்கடங்கள். நிம்மதி இல்லை! தீராத பிரச்னைகள்! ஆனால் அதுவே பெற்ற தந்தையைப் பார்த்துக்க மாட்டேன்னு சொன்னவங்களுக்கு பிள்ளை, பெண் வாழ்க்கை அருமையாக அமோகமாக அமைந்திருக்கிறது. இன்னொருவருக்கோ பிள்ளைகளால் பிரச்னை! பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவே மாட்டேன் என்கிறது! என்னத்தைச் சொல்ல! இதை எல்லாம் பார்த்தால் நல்லவர்களாக இருந்தால் கஷ்டம் தான் அனுபவிக்கணுமா என்றெல்லாம் தோன்றுகிறது. கெட்டவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்தால் நாமும் அப்படியே இருந்திருக்கலாமோ என்றெல்லாம் தோன்றுமோ என நினைக்க வைக்கிறது. அல்லது அப்படி மாறிடலாமா என்றும் தோன்றுகிறது! மொத்தத்தில் நல்லவர்கள் கெட்டவர்களாக மாறிவிடுவார்களோ என்று பயம் வருகிறது! :(

      Delete
  2. ஆ.... இரண்டு கதைகள் எங்களுக்கு வரப்போகிறதா? மூன்றாகக் கூட எழுதலாம். சாதா கே வா போ வுக்கு!

    ReplyDelete
  3. நல்ல கதை. சொன்ன விதமும் அருமை. விக்ரமாதித்தன் வேதாளம் போல...

    "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி... பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி..." என்றொரு திரைப்பாடல் உண்டு. சீதாராமன் விஜயத்துக்கு அந்த வைரத்தோட்டை திருப்பிக் கொடுத்தாரோ? சில கேள்விகளுக்கு பதில் இல்லை, கேட்கக் கூடாது என்று சொல்வதைவிட, அதை கர்மவினையில் சேர்த்து விடலாம்! மஹாதேவய்யர் செய்த தப்புக்கு மகனுக்கும், சம்பந்தமில்லாமல் மருமகளுக்கும்தான் தண்டனை கிடைக்கும் என்றால், அவர் இன்னும் இன்னும் தப்பு செய்யலாமே!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் கர்மவினை!!யெஸ் இருகக்வே இருக்கு எல்லாத்தையும் அதில் போட!!! உங்கள் கடைசி வரியும் பிடித்தது...

      ஆனால் பானுக்கா சொல்லியிருப்பதைப் பார்த்தால் உண்மைக் கதை போலத்தான் தெரிகிறது. எனவே நோ க்வெஷன்ஸ். ஹிஹிஹிஹி...நானும் கேட்டுட்டேன்...என்பின்னூட்டத்தில் ஆனால் மீண்டும் கதையை வாசித்தேன். அப்போ இப்படித் தோன்றியது..

      கீதா

      Delete
    2. நானும் நினைத்துக் கொண்டேன். சீதாராமன் வைரத் தோட்டுக்கு மாற்றுத் தோடோ அல்லது அந்தத் தோட்டைத் திருப்பியாவது கொடுத்தாரா என்று. கேட்க மறந்துட்டேன். வைரம் போட்டுக்கவும் கொடுத்து வைக்கணும் என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒருவருக்குப் பல முறை முயற்சிகள் எடுத்தும் வைரம் வாங்கிப் போட்டுக்கவே முடியலை! :)

      Delete
    3. வைரத்தாலேயே தோஷம் வரும் என்றும் சொல்வார்கள். அதனால்தான் நான் வைரமே வாங்கவில்லை!!! (ஹி.... ஹி.... ஹி....)

      Delete
    4. ஹெஹெஹெஹெ, வைரம் வாங்கி வீட்டில் வைச்சுப் பார்ப்பாங்க! சுமார் ஒருவாரத்திலிருந்து ஒரு மாதம் வரை! பார்த்துட்டுத் தான் வாங்குவாங்க. இப்போல்லாம் கடைக்காரங்க நீங்க வாங்கிட்டுப் போங்க போறதுக்குள்ளே தெரிஞ்சுடும்னு சொல்லிக் கொடுப்பதாகக் கேள்விப் பட்டேன். :) என் தாத்தாவிடம் வைரம் பார்க்கும் கண்ணாடி எல்லாம் இருந்தது! :) வைரம் தான் இல்லை! :)))))

      Delete
    5. நான் என் பெண்ணுக்கு தோடு வாங்கியபோது, SS1 வாங்கினேன். அதை வாங்கிய ஒருவாரத்தில் நல்லது நடந்தது. கறுப்பு spotகள் வைரத்துக்கு நல்லதல்ல என்பது நம்பிக்கை.

      Delete
  4. துளசி: நல்ல கதை! உண்மைதான் பெற்றோர் செய்யும் சில தவறுகள் பிள்ளைகளைப் பாதிக்கும் தான். ஆனால் வைரத்தோடு என்ற ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிதாகுமோ? இருக்கலாம் கேரளத்தில் நில புலன், நகைகள் என்று போகும்தான். கதை நன்றாக இருக்கிறது.

    கீதா: பானுக்கா கிட்டத்தட்ட உங்கள் கதை போல இரண்டு என்னிடம் ஒன்று மனசும், கதாநாயகியும் பேசிக் கொண்டே கதை நகர்வது...கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இரண்டு வருடத்துக்கு முன் எழுதி முடிக்காமல் மனதிற்கு நிறைவான முடிவு கிடைக்காததால் ஆறப்போட்டு இப்போது அதை முடிக்கலாம் என்று நினைத்துள்ளேன். அடுத்து நீங்கள் மாதா பிதா குற்றம் என்று சொல்லியிருக்கிறீர்கள் என் கதையிலும் அதே ஆனால் தலைப்பு ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்..வரலாறு திரும்புகிறது...பெரியோர்கள் எடுக்கும் சில தவறான முடிவுகள் அதாவது நகை நட்டு இல்லை குடும்ப விஷயம்..உணர்வு பூர்வமான ஒன்று... எப்படி அடுத்த தலைமுறையினரை பாதிக்கிறது...அதுவும் அப்போது அத்தனை வீரியமாக இல்லாதது இப்போது எப்படி அதிகமாகப் பாதித்துள்ளது..என்பது பற்றியது...கொஞ்சம் குறுநாவல் போல..

    இப்போது கதைக்கு வருகிறேன். அக்கா உங்கள் கதை நடை அருமை. ரொம்ப அப்படியே கான்வெர்சேஷன் எல்லாம் செமையா இழுத்துச் செல்கிறது. சொன்ன விதம் எல்லாம் அருமை அக்கா...
    என் மனதில் தோன்றியது...அந்தத் தவறு எப்படி மூன்றாவதுதலைமுறையைப் பாதிக்கிறது என்பதுதான்... ஆஃப்டர் ஆல் ஒரு பளபளக்கும் கரித்துண்டு...எப்படி படுத்துகிறது கல்யாணங்களில்...(எனக்கும் இதே அனுபவம் உண்டு.) அந்த பக்திமான், ரிலிஜியசாக இருக்கும் அந்த மஹாதேவனுக்கு இந்த விஷ்யத்திற்கு அத்தனை படுத்தல் அவசியமா என்னதான் இறை பக்தி இருந்தாலும் மெச்சூரிட்டி இல்லாமல்..அவர் நினைத்திருந்தால் ஸ்மூத்தாக முடித்திருக்கலாம்....ஹும் ஊரே மதிக்கிறது என்ற ஒரு கர்வம்...ஸ்டேட்டஸ்...அவர் செய்ததும் தவறு!

    அடுத்து சீதாராமன் வீட்டில் சொல்லாதது தவறு. சரிதான். அதுவும் தன் சக்திக்கு அப்பாற்பட்டது. ( என் பெற்றோர் நினைவுக்கு வந்தனர். ஆனால் சொல்லாமல் தவறு செய்யவில்லை. என்னிடம்மட்டும் சொல்லாமல் விட்டார்கள்.) ஓகே..டிஸ்கஸ் செய்திருக்கணும்....ஆனால் அதன்பின் ஆசிர்வாதத்துடன் கல்யாணமும் நடக்கிறது விசாலம் நல்ல பெயரும் எடுக்கிறாள். அவர்கள் தவறே செய்யலை.. அப்போ எப்படி கணேசனின் குழந்தைகளை அது பாதிக்கும்.அதனால் கணேசனும் விசாலமும் வேதனை அனுபவித்தார்கள்..அதுவும் அப்படிப்பட்ட பெரிய குற்றமாகவோ இல்லை.... பலகுடும்பங்களில் நடப்பதுதானே அதுதான் ஏன்..என்பது புரியவில்லை. ஒருவேளை எனக்குத்தான் தோன்றுகிறதோ...

    ஆனால் நாம் செய்யும் தவறுகள் கண்டிப்பாக நம்மையோ இல்லை அடுத்த தலைமுறையையோ பாதிக்கும் என்ற நம்பிக்கை உண்டு...

    ReplyDelete
    Replies
    1. கம்பியூட்டர் கேக்கறதா கேட்டிருக்கும் கேள்விகள் கம்பியூட்டர் வழியாய் படிக்கும் வாசகர்கள் கேள்விகள் இப்படி இருக்கும்னு பானுக்கா யோசிச்சு, அதை கம்ப். கேக்கறதா கொடுத்துட்டாங்க போல!

      Delete
  5. நல்ல கதை.

    ஆனாலும் இப்படி எல்லாம் மக்கள் இருந்திருக்கிறார்களே/ இன்றும் இருக்கிறார்களே என நினைக்கும்போதே மனதில் வலி.....

    ReplyDelete
  6. எல்லாவற்றுக்கும்விதி என்றும் கர்மா என்றும் கூறி மன சமாதானமடையலாம்

    ReplyDelete
  7. கதையினை ரசித்தேன். ஏதோ ஒருவகையான மனச்சுமையை உணர்ந்தேன்.

    ReplyDelete
  8. அம்மா அப்பா செய்யும் குற்றம் பிள்ளைகளை கஷ்டப்படுத்தும் என்ற குறிப்புகளை உணர்த்தும் கதை
    நிறைய புரியவில்லை கொடுத்துவிட்டால் பிரச்னையில்லை மனகஷ்ட்டமில்லையா? கணேசனின் தம்பிகளுக்கு எல்லாம் கொடுத்து திருமணம் ஆகிவிட்டதா ?

    ReplyDelete
  9. பெரியவர் பார்த்து சொன்ன திருமணத்திற்கு இவ்வளவுதான் மரியாதையா? அப்புறம் ஏன் அவரை பெரிதாக கும்பிட போக வேண்டும் இவர்கள்

    ReplyDelete
    Replies
    1. இது ஒண்ணுமே இல்லை பூவிழி! எங்க பெண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்தப்போ வந்து பெண் பார்த்த ஒரு பையரின் அம்மா, வைரத்தோடு போடணும்னு கண்டிஷன் மட்டும் போடலை! அந்தத் தோட்டை வைரக்கற்கள் முதலில் கொண்டு வந்து அவங்க கிட்டே காட்டி அவங்க பொறுக்கிக் கொடுக்கும் கற்களை வைத்து அவங்க வீட்டிலேயே ஆசாரியை வைத்துக் கட்டிக் கொடுக்கணும்னு சொன்னாங்க! அதோட அவங்க உயரத்துக்கு இரண்டு வெள்ளிக்குத்துவிளக்குகளும் கேட்டாங்க. அந்த வரனே வேண்டாம்னு சொல்லிட்டேன்! இதில் வேண்டாம்னு சொன்னதில் என் பங்கு முக்கியமாக இருந்தது! அப்புறமா அவங்களே திரும்ப வந்தாங்க! ம்ஹூம்! நோ!

      Delete
    2. நல்லது செய்தீர்கள் காலத்துக்கும் தங்கிவிடும் மனசங்கடத்தில் இருந்து தப்பித்தீர்கள்

      Delete
  10. கதையை ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி! கொஞ்சம் பிசியாக இருப்பதால் தனித்தனியாக பின்னூட்டம் இடமுடியவில்லை.

    ஹை பைவ் கீதா தில்லையகத்து இது கதையல்ல நிஜம்! எங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு நடந்தது. (இதை நான் பின் குறிப்பாக கொடுத்திருக்கலாம்.)

    @கீதா அக்கா: //மஹாதேவ ஐயரும், சீதாராம ஐயரும் தப்புப்பண்ணி இருக்கக் கடைசியில் கணேசனும், விசாலமும் தண்டனை அனுபவித்தார்கள். என்ன தான் இருவரும் அவங்களுடைய குழந்தைகளாக இருந்தாலும் இதை ஏற்க முடியவில்லை. :(//

    இதைப் பற்றி என் அம்மா கூறும்பொழுதெல்லாம் உங்களுக்கும் வரும் அதே சந்தேகம்தான் எனக்கும் வரும். அதைத்தான் நான் கடைசியில் கேட்டிருக்கிறேன். இதை ஸ்ரீராம் சரியாக கணித்திருக்கிறார் :)

    சீதாராமனனையும், மஹாதேவ ஐயரையும் மட்டும் சொல்கிறீர்களே, தன் மகள் திருமணத்தை விட, தன் வைரத்தோடு முக்கியம் என்று நினைத்த விசாலத்தின் தாய் மீனாவை விட்டு விட்டீர்களே..என்ன சுய நலம்? தாய்மை, புடலங்காய் என்று பேசுவதெல்லாம் பம்மாத்தோ? என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்ணின் தாய் சொன்னதைக்கவனித்தேன். அந்த மாதிரித் தாய்மார்கள் இன்னமும் இருப்பதால் அதைக் குறிப்பிடவில்லை. எங்கள் உறவிலேயே அப்படித் தாய்மார்கள் உண்டு! அவங்க கொடுக்காமல் இருந்ததுக்கு நான் கொடுத்திருக்கேன். இதைக்குறிப்பிடும்படி இருக்கும் என்பதால் தான் முதலில் சொல்லவில்லை. :))))) ஆனால் எனக்கு நான் என்ன கொடுக்கிறேனோ அது அப்படியே திரும்பி வரும்! வந்திருக்கிறது! :)))))

      Delete
  11. @பூவிழி: //பெரியவர் பார்த்து சொன்ன திருமணத்திற்கு இவ்வளவுதான் மரியாதையா? அப்புறம் ஏன் அவரை பெரிதாக கும்பிட போக வேண்டும் இவர்கள்//

    இந்த கதை மூலம் நான் குறிப்பிட விரும்பியது இதைத்தான், அதை அழுத்தமாக பதிவு பண்ணவில்லையோ என்னவோ.. ஒரு பாமரன், விஷயம் தெரியாதவன், பக்தி சிரத்தை இல்லாதவன் தவறு செய்தால் அதற்க்கு தண்டனை குறைவுதான். ஆனால், பக்தியம், சத்திர அறிவும் உள்ளவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனையை அன்பவிக்க நேரும். படித்தவன் சூதும் வதும் செய்தால் ஐயோன்னு போவான் என்று பாரதி கூறவில்லையா?

    பக்திமான், ஊர் மதிக்கும் பெரியவர் ஒரு வைர தோட்டிற்க்காக தன மகனின் திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு போய், அந்த பெண்னிற்கு மன உளைச்சளைத் தந்தது, அதற்கு அவர் மகனும் வாய் மூடி மௌனித்ததுதான் அவர் குழந்தைகளின் திருமணதிற்கு தடை ஏற்படுத்தியதோ என்று தோன்றியது. எழுதினேன். இது ஒரு ஊகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. சரி சிஸ் புரிகிறது எனக்கு முதலில் தோன்றியது அதுதான் ஐயோ பயமற்று போய்விட்டார்களே முக்காலம் உணரக்கூடியவர் என்பவரின் வாக்கையே தாண்டிவிட்டார்களே என்பது தான் இ படுவதற்குமுன் பயம் வேண்டும் அந்த ஆசைக்கு தகுதியா தேவையா என்பதை இதனால் பலன் பயன் என்னவாக இருக்கும் என்று சீர்துக்கி பார்க்க வேண்டும் என்று தோன்றியது இதை படித்தவுடன்

      Delete
  12. விசாலத்திற்கு ஏன் இது நேர்ந்தது என்பதற்கு ஊழ் வினை என்பதைத் தவிர வேறு விடை இல்லை.

    @ஸ்ரீராம் & கீதா அக்கா: ராமுவையர் தன் மனைவியின் தோட்டை அக்கா பெண்னுக்கு போட்டதற்காக அவர் அப்பா,"என் மருமகளின் தோட்டை நீ எப்படி அவளுக்கு போடலாம்" என்று கோபித்துக் பேத்தியின் திருமணத்திற்கே இருக்காமல் கோபித்துக் கொண்டு போய் விட்டாராம். என்ன மாதிரி மனிதர்கள்!!
    தோட்டை திரும்ப பெற்றதை இன்னும் ஒரு கதையாகத்தான் எழுத வேண்டும்.

    தில்லைஅகத்து துளசிதரன், வெங்கட் நாகராஜ், டர்.ஜம்புலிங்கம் ஐயா, ஜி.எம்.பி.சார், ஸ்ரீராம், கீதா அக்கா, கீதா, பூ விழி, இன்னும் படிக்க போகு எல்லோருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. இந்த நிகழ்வில் மஹாதேவய்யரைவிட சீதாராமன் குற்றம்தான் எனக்கு அதிகமாகத் தெரிகிறது. வாக்கு என்பது அவ்வளவு முக்கியம். திருமணத்தின்போது இந்தப் பிரச்சனை அதிகமாக்கியதும் மகாதேவய்யரின் தவறு. அதனால்தான் அவர்களின் பிள்ளைகளுக்கு கஷ்டம் வந்தது. நிகழ்வு நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நெல்லை. வருகைக்கு நன்றி! அது சரி ஏன் யாருமே ராமுவையரையும் அவர் மனைவியையும் பாராட்டவில்லை.

      Delete
    2. வாஸ்தவம் தான். உண்மையில் பாராட்டுக்குரியவர்கள் அவர்கள் இருவருமே! மனதாலும் செய்கைகளாலும் பெரியவர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை.

      Delete
  14. கணவரின் கட்டளைக்கு கீழ்படிந்த விஜயம் அருமையான மனைவி.
    எதிர்த்து ஒரு வார்த்தை கேட்க வில்லையே!
    என் அம்மாவும் இது போன்ற கதை சொல்லி இருக்கிறார்கள். வைரத்தோடு போடாத கல்யாணம் நின்றதை, தலை தீபாவளிக்கு தங்க வாட்ச் செயின் மாப்பிள்ளைக்கு போடாத காரணத்தால் பெண்ணை திருப்பி அனுப்பியதை எல்லாம் கதைகளை மிஞ்சும் உண்மைகதைகள் நிறைய உண்டு அந்தக் காலத்தில்.


    எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்த குடும்பம் கஷ்டபடுவதும் நடக்குதே அதை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அக்கா! விஜயம் போன்ற பெண்களால்தான் உறவுகள் தொடர்ந்தன. இந்த கதையைப் படித்த என் உறவுப் பெண்மணி ஒருவர்,"அந்த காலத்தில் பிள்ளையைப் பெற்றவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொண்டதால்தான், இன்று பெண்கள் நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் போலிருக்கிறது" என்றார். இவையெல்லாம் ஒரு யூகம்தான்.

      நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கு கர்ம வினை என்பதைத் தவிர வேறு என்ன சோயா முடியும்?

      Delete
  15. உண்மைச் சம்பவம் என்று சொல்லி விட்டதால் குறுக்கு கேள்வி கேட்பது முறையல்ல! என்று கருதுகிறேன்.

    எனது நினைவில் வந்த பாடல் வரிகளை ஸ்ரீராம் ஜி அவர்கள் சொன்னதை கண்டு எனக்கு ஆச்சர்யம். நான் மிகவும் விரும்பிய பாடல் இடம் பெற்ற படம் பொன்னகரம்.

    இப்பொழுது பாவத்தின் சம்பளத்தை அவர்களே பெற்றுக் கொண்டே மரணிக்கின்றார்கள். எனக்கு தெரிய பலரையும் பார்த்து விட்டேன்

    எனக்கு செய்த துரோகத்துக்கு தண்டனையாக கஷ்டத்தை அனுபவித்தவர்களையே பார்த்து விட்டேனே காலம் அவ்வளவு மாற்றத்தை கொடுத்து விட்டது.

    கடைசியில் வேதாளம் போல நானும் கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம். இது குறை காணலே...

    அதாவது 70 வருடங்களுக்கு முன்பு உள்ள சம்பாஷனைகள் அனைத்தும் நன்று ஆனால்?

    "சாரி கோவித்துக் கொள்ளாதே"

    என்பதை

    "செமிக்கணும் கோவித்துக் கொள்ளாதே"

    என்று சொல்லி இருக்கலாம்.

    சாரி தப்பா நினைக்காதீங்கோ - இது நான்.

    இப்பதிவு எனது டேஷ்போர்டில் வரவில்லை

    ReplyDelete
  16. இருக்கலாம், ஆனால் இது கணினிக்கும் கதாசிரியருக்கும் இடையே நடந்த உரையாடல்தானே,அதனால்தான்.. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ இதுவும் சரிதான் ஆகவே கேள்வி பின்வலிப்பு.
      (இருந்தாலும் சமாளிப்பு ஸூப்பர்)

      Delete