கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 31, 2017

புத்தாண்டு செய்தி

புத்தாண்டு செய்தி

ராமகிருஷ்ண பரமஹமசர் தன் சீடர்ளுக்கு உபதேசம் வழங்கும்
பொழுது வீட்டு வேலைகளை செய்தபடியே அவைகளை செவி மடுக்கும் அன்னை சாரதா தேவி தன் கருத்தை புன்னகையால் அங்கீகரிப்பாராம்.

ஒரு முறை சாரதா தேவி முறத்தால் புடைத்தும், ஜல்லடையால் சலித்தும் ஏதோ செய்து கொண்டிருந்தாராம். அதைக் கண்ட பரமஹம்சர் தன் சீடர்களிடம், "முறம், ஜல்லடை இந்த இரண்டில் முறம், தூசு, தும்பு போன்ற தேவையில்லாத விஷயங்களை வெளியே தள்ளி விட்டு நல்ல விஷயங்களை மட்டும் தன்னிடம் வைத்துக் கொள்ளும். ஆனால் ஜல்லடையோ நல்ல விஷயங்களை கீழே தள்ளி விட்டு விட்டு கல், மண் போன்ற குப்பைகளை தன்னிடத்தே வைத்துக் கொள்ளும். நாம் இந்த ஜல்லடையைப் போல இருக்கக் கூடாது. முறத்தைப் போல தீய மனிதர்களை புறம் தள்ளி விட்டு நல்ல மனிதர்களோடு மட்டும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்" எனறாராம். அதைக்கேட்ட அவருடைய சீடர்கள் ஆஹா! என்ன ஒரு அற்புதமான கருத்து என்று பெரிதும் ஆமோதித்தனராம். ஆனால் சாரதா தேவி வழக்கம் போல் அதை ஆமோதிக்காமல் இருக்க, பரமஹம்சர் சாரதா தேவியிடம்,"என்ன நான் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?" என்று கேட்டதும் சாரதா தேவி," எதை தள்ளுவது? எதை சேர்த்துக் கொள்வது? எல்லோரும் நம் மக்கள் தானே? மனிதர்கள் அப்படித்தான் நன்மையும், தீமையும் கலந்துதான் இருப்பார்கள், இதில் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்". என்றாராம்.

அன்னை சாரதா தேவியின் இந்த வாக்கையே புத்தாண்டு செய்தியாக்குகிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நட்போடும், உறவோடும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்!💐🎂😊👍

Sunday, December 24, 2017

Merry Christmas

Merry Christmas 

X mas wishes to all Christian friends. Have a joyful celebration!💐💐


Wednesday, December 20, 2017

நாங்கள் நடித்த விளம்பரப்படம்

நாங்கள் நடித்த விளம்பரப்படம் 




அப்பா இன்னிக்கு பிசா சாப்பிடலாமா? என்றான் ஏன் மகன். 

ஓ! சாப்பிடலாமே, கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது 241பிசாவுக்கு போகலாம் என்றார் என் கணவர்.

மஸ்கட்டில்  டார்செய்ட்(Darseit) கிருஷ்ணன் கோவிலுக்குச் செல்லும் வழியில் டார்செய்ட் ரவுண்ட் அபௌட் அருகில் அப்போது  241 பிசா ரெஸ்டாரெண்ட் புதிதாக தொடங்கப் பட்டிருந்தது.  அதென்ன 241பிசா? என்கிறீர்களா? அந்த கடையின் டெலிபோன் நம்பர் 241 என்று முடியும். அதையே பெயராக வைத்து விட்டார்கள். போனில் ஆர்டர் செய்ய வேண்டுமென்றால் நம்பரை நினைவில் வைத்துக் கொள்வது சுலபமாக இருக்கும் என்னும் எண்ணமாக இருக்கலாம்.

நாங்கள் கோவில் போய் விட்டு 241பிசா சென்று ஸ்டார்டர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது, சிலர் படப்பிடிப்பு உபகரணங்களோடு வந்து காமிரா, விளக்குகள் இவற்றை அங்கே செட் செய்ய ஆரம்பித்தார்கள். "என்ன நடக்கிறது? ஏதாவது ஷூட்டிங்கா?" என்று அங்கிருந்த பிலிப்பினோ பெண்ணை விசாரித்தோம், "அவள்," ஏதோ விளம்பர படம் என்று நினைக்கிறேன் என்றாள்.

அந்த படப்பிடிப்பு குழு கடையின் எல்லா பகுதிகளையும் படம் பிடித்து விட்டு, எங்களுக்கு பிசா வந்தவுடன் எங்கள் மேஜையை போகஸ் செய்ய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தானா என் மகள் என் கையில் இருந்த முள் கரண்டியை தட்டி விட வேண்டும்..? நான் சொதப்பினாலும் பிஸாவை  ருசிப்பது படமாக்கப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பப்பட்டது. என்ன..நாங்கள் பிராண்ட் அம்பாசிடராக இருந்து 241 பிஸாவை பிரபலப்படுத்தியதற்கு எங்களுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்படவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டோம். 

Sunday, December 17, 2017

பியூஷன் உலகம்

பியூஷன்  உலகம் 

அந்த திருமண பத்திரிகையில் முகூர்த்த நேரம் காலை 9:00 முதல் 10:30 வரை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் 10:30 தாண்டியும் திருமண சடங்குகள் நடந்து கொண்டே இருந்தன. காரணம் மணமக்கள் வேறு வேறு ஜாதி. 

முதலில் பெண் வீட்டு வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன, பிறகு பிள்ளை வீட்டு வழக்கப்படி தொடர்ந்தன. இப்போதெல்லாம் இம்மாதிரி திருமணங்கள் அதிகமாகி விட்டன. காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சில் கிருத்தவ முறைப்படியும் கூட சில கல்யாணங்கள் நடக்கின்றன.  இத்தகைய திருமணங்களை பியூஷன் வெட்டிங் என்கிறார்கள்.  

இந்த பியூஷன் விஷயங்கள் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு விஷயங்களில் பழக்கத்தில் வந்து விட்டது. கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் இணைத்து பாடும் ஜுகல்பந்தி என்னும் கச்சேரி ஒரு வகையில் பியூஷன் இசைதான். இதை இசை விமர்சகர் சுப்புடு," ஜாங்கிரியை மோர் குழம்பில் ஊறப்போட்டது போல" என்பார்.

இப்போது ஜுகல்பந்தியை விரும்பி கேட்காதவர்கள் கூட, கர்நாடக சங்கீதத்தை மேற்கத்திய இசையோடு இணைத்து பாடும் பியூஷன் ம்யூசிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். உதாரணம் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் 'ரெங்கபுரவிஹாரா..' பாடல். கேட்டுத்தான் பாருங்களேன். 



முன்பெல்லாம் பெண்களுக்கு புடவைக்கு மாட்சிங்காக பிளவுஸ் வாங்க படும் பாட்டை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளும், ஏன் கதைகளும் கூட வந்திருக்கின்றன. இப்போது யாரும் அப்படி மேட்சிங் ஆக பிளவுஸ் அணிவதில்லை. பச்சை புடவைக்கு ப்ரவுன் நிறத்திலும், பிரவுன் புடவைக்கு மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் புடவைக்கு கருப்பு நிறத்திலும் கான்ட்ராஸ்டாகவோ, அல்லது கலம்காரி பிலௌசுகளோ அணிவதுதான் பேஷன். ஏன் சூடிதார் கூட மிக்ஸ் அண்ட் மேட்ச் என்று ஒரே நிற பாட்டமிற்கு வேறு வேறு நிற குர்தாக்களை அணிகிறார்கள். இவையெல்லாம் பியூஷன்தானே?

திருமண விருந்துகளில் காலை முகூர்த்தத்தின் பொழுது சம்பிரதாய சாப்பாட்டை போட்டு விட்டாலும், வரவேற்பின் பொழுது சூப்,  மன்ச்சூரியன்,சப்பாத்தி,புலாவ், பன்னீர் மட்டர் மசாலா என்று வட இந்திய உணவு, சாம்பார் சாதம், உருளை கிழங்கு கறி, ரசம், தயிர் சாதம், ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கலந்து பியூஷன் விருந்து  பரிமாறுகிறார்கள். 

பெரும்பாலான நவீன யுவதிகள் ஜீன்ஸ், மூக்குத்தி, மெட்டி என்று அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. 



இதை பியூஷன் செருப்பு என்று கூறலாமா?

Wednesday, December 6, 2017

நவம்பரில் நான் பார்த்த படங்கள்

நவம்பரில் நான் பார்த்த படங்கள் 

நவம்பர் மாதம் நடிகர் கமலஹாசன் பிறந்த மாதமாக இருந்ததால் ராஜ் டி.வி.யில் தினமும் மதியம் 1:30க்கு கமலஹாசன் நடித்த படங்களாக போட்டார்கள். அதில் நான் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் மற்றும்  மன்மத லீலை பார்த்தேன். 


மூன்றுமே கே.பாலசந்தர் இயக்கியவை. அது வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கதாநாயகியாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் அறிமுகமான படம் மூன்று முடிச்சு. இருவருமே புதுமுகம் என்பது போல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருந்திருக்கிறார்கள். கமலஹாசன்(அப்போதெல்லாம் அவர் கமலஹாசனாகத்தான் இருந்திருக்கிறார். பின்னாளில்தான் கமல்ஹாசன்) இடைவேளைக்கு முன்பாகவே இறந்து விடுகிறார். படத்தில் கொஞ்ச நேரம்தான் வந்தாலும், நிறைவான நடிப்பு.
டைட்டிலில் படப்பிடிப்புக்கு இடம் தந்து உதவிய திருமதி.ராஜலக்ஷ்மி, திரு.ஸ்ரீனிவாசனுக்கு நன்றி என்று போடுகிறார்கள். கமலின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன்.



அபூர்வ ராகங்கள் படத்தை அந்தக் காலத்தில் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்தார்கள். அந்த கால கட்டத்தில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஸ்ரீ வித்யா,நாகேஷ், சுந்தர்ராஜன் கச்சிதம். கமல் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவருக்கு ஏன் அப்படி ஒரு கன்றாவி ஹேர் ஸ்டைல்? ஜெயசுதா தவறான தேர்வு. புதுமையாக செய்யலாம் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்திற்குப் பிறகு கதையை கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டு விட்டார் போலிருக்கிறது. 

குட் ஜோக்! என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு உடனே நல்ல ஹாஸ்யம் என்று மொழி பெயர்க்கும் சுந்தர்ராஜனின் ஸ்டைல் புன்னகைக்க வைக்கிறது. 


மன்மத லீலை... கதாநாயகன் என்பவன் கண்ணியவானாகத்தான்  இருக்க வேண்டும் என்னும் அந்தக் கால மரபை உடைத்து ஒரு சபலிஸ்டை கதாநாயகனாக காட்டியிருக்கும் துணிச்சல்...! ஆனால் நடிகர்கள் தேர்வு சரியில்லை. கமலஹாசன் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் பால் வடியும் முகம்,சின்னபையனைப் போன்ற தோற்றம் இரண்டும் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபை பண்ண முடியாமல் தடுக்கின்றன. உடன் நடித்த நடிகைகளும் சோ சோ தான். சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன.' மனைவி அமைவதெல்லாம்...' 
'நாதமென்னும் கோவிலிலே...' என்று இரண்டு நல்ல பாடல்கள். இந்தப் படம் வெளிவந்த கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நலங்கின் பொழுது மனைவி அமைவதெல்லாம் பாடல்தான் பாடுவார்கள்.

இந்தப் படத்தைப் பற்றி பாலச்சந்தர் கூறிய பொழுது, "கமலஹாசனின் நடவடிக்கைகளை கவனித்தேன், அப்பொழுது உருவான கதாபாத்திரம்தான் மன்மத லீலை மது" என்றார். கமலஹாசன் மீது இவ்வளவு மோசமான அபிப்ராயமா? 

Wednesday, November 29, 2017

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி 

தேவையான பொருள்கள்: 

சாபுதானா(ஜவ்வரிசி பெரியது)  - 200gm
உருளை கிழங்கு (மீடியம் சைஸ்) - 3
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3 அல்லது 4
தக்காளி(பெரியது) - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது இல்லையென்றால் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி போடலாம்.
நிலக்கடலை - ஒரு சிறிய கப் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க் 
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
எண்ணெய்  - சிறிதளவு 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
உ.பருப்பு - 2 டீ ஸ்பூன் 
க.பருப்பு -  2 டீ ஸ்பூன் 







செய்முறை:

ஜவ்வரிசியை கழுவி விட்டு, ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வடிய வைக்கவும். தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் நன்றாக வடிய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் கிச்சடி உதிர் உதிராக வராமல் கொழ கொழவென்று ஆகி விடும். 

ஊற வைத்து வடிய வைத்திருக்கும் ஜவ்வரிசி 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நாலு அல்லது எட்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.ஜவ்வரிசி தயாரானதும் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அது சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்(கீறி போடலாம்) கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது  இவைகளை சேர்த்து வதக்கவும்.






அவை நன்கு வதங்கியதும் ஜவ்வரிசியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். ஜவ்வரிசி வெந்ததும்(அதன் வெண்மை நிறம் மாறி கண்ணாடி போல மாறும்) துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, மற்றும் ஒன்றிரெண்டாக பொடி செய்யப்பட்ட நிலக்கடலை இவைகளையும் சேர்த்து கிளறி சற்று நேரம் சின்னத் தீயில் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும். 






பி.கு. : கடலையை மிக்சியில் பொடி செய்யும் பொழுது அதிகமாக நொறுங்கி விட்டது. உ.கி.? மறந்து விட்டேன்.ஹி,ஹி! நீங்கள் மறக்காமல் போட்டு விடுங்கள். 


Thursday, November 9, 2017

மாதா பிதா குற்றம்...

மாதா பிதா குற்றம்...

என் இலக்கிய பணியாற்றுவதற்காக கணினியை திறந்ததும் அது, "என்ன எழுதப் போகிறாய்?" என்றது.

"கதை" 

"ஏற்கனவே க.க க.விற்காக ஒரு கதையும், சீ.ரா.ம வுக்காக ஒரு கதையும் பாதி எழுதி வைத்திருக்கிறாய், இப்போது இன்னொன்றா?"

"அதை பற்றியெல்லாம் நீ ஏன் கவலைப் படுகிறாய்?" 

"ம்ம்.. சரி, சரி, என்னவோ செய்..? இது என்ன சமூகக்  கதையா?"

"சரித்திரக்  கதை என்று கூட சொல்லலாம்." 

"அடி சக்கை! அப்போ புரவிகளின் குளம்பொலி கேட்கும், வாட்கள் டணால் டணால் என்று மோதிக் கொள்ளும்,கச்சை அணிந்த பெண்கள்..."

"நிறுத்து.. சரித்திர கதை என்றால் புரவிகளின் குளம்பொலிக்க வேண்டுமா? இது அவ்வளவு பழைய சரித்திரம் அல்ல, ஒரு எழுபது வருட பழசு.. எழுபது வருடங்களுக்கு முன்னாள் நடந்ததை சொல்வது சரித்திரம் ஆகாதா?"

"ஓ.. ஒ .. ஓ.கே. ஓ.கே. அப்போ பெண்களெல்லாம் நிறைய நகைகள் அணிந்து கொண்டு, அதிரசம், முறுக்கு எல்லாம் செய்வார்கள் அப்படித்தானே?"

"பெண்கள், பெண்கள், ஏன் இப்படி இருக்க?"

"இல்ல, அந்தக் கால பெண்களின் பிரச்னைகளை பேசப் போகிறாயோ? என்று நினைத்தேன்..."

"ஒரு பெரிய மனிதர், ஊரும் உலகமும் கொண்டாடியவர், தெய்வ பக்தி கொண்டவர், அவர் செய்த ஒரு தவறு இன்றளவும் அவர் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்று சொல்லப் போகிறேன்."

"அட! பீரியட் ஸ்டோரி..! இண்ட்ரஸ்டிங்..! ம், சொல்லு சொல்லு.." 

"நீ கொஞ்சம் தொண தொணன்னு பேசாமல் இருந்தால்தான் என்னால் எழுத முடியும்..."

"சரி, சரி பேசல.. ஏதாவது சந்தேகம் வந்தால் கேக்கிறேன்.. கதை எங்கே ஆரம்பிக்கிறது?"

எண்பது, தொண்ணூறு வருடங்களுக்கு முன்னாடி, தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்தை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்த   மிராசுதார் மகாதேவ ஐயரை அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் அறியாதவர் கிடையாது. மூதாதையர் வைத்து விட்டு போன சொத்தை பெருக்கும் சாமர்த்தியம், அழகான மனைவி, அவள் மூலம் ஐந்து பெண்கள், ஐந்து பிள்ளைகள் என்று குறைவில்லாத பிள்ளை செல்வம், ஆள், படை, ஊரில் மரியாதை இவற்றோடு அந்த கால தஞ்சை மிராசுகளுக்கு இருந்த கெட்ட பழக்கங்களான சீட்டுகட்டு விளையாட்டு, சின்ன வீடு போன்றவை இல்லாதது, திரிகால சந்தியா வந்தனம், பஞ்சாயதன பூஜை போன்றவைகளும் அவர் மரியாதையை அதிகப் படுத்தின. இது மட்டுமல்லாமல் அவருடைய குருவின் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டவர். 
நல்ல உயரத்தில் ஆஜானுபாகுவாய், பஞ்சகச்சம், உத்தரீயம்,  நெற்றியில் எப்போதும் பளிச்சென்று விபூதி, குடுமி, காதுகளில் வைர கடுக்கன்களோடு அவர் தெருவில் வந்தால் எல்லோருக்கும் எழுந்து நிற்கத் தோன்றும். 

அந்த வருடம் சாதுர்மாஸ்ய பூஜையை கும்பகோணத்தில் வைத்துக் கொண்டார் பெரியவர். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மஹாதேவனே எடுத்துக் கொண்டார். உதவிக்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்தும் சிலரை சேர்த்துக் கொண்டார். அப்படி அவருக்கு அறிமுகமானவர் சீதாராமன். 

மகாதேவன் அளவிற்கு சொத்து இல்லாவிட்டாலும் சீதாராமனும் ஓரளவு வசதி படைத்த நிலச்சுவான்தார்தான். மற்ற விஷயங்களில் மகாதேவனுக்கு நிகரானவர். 

சாதுர்மாஸ்யம் முடிந்து பெரியவர் ஊரை விட்டு கிளம்பும் முன் மஹாதேவன், சீதாராமன் ஆகிய இரண்டு பேருக்கும் தனியாக பிரசாதங்கள் கொடுத்தார். பிறகு மஹாதேவனைப் பார்த்து,

"உன் பெரிய புள்ள என்ன பண்ரான்?" என்று வினவ,

"பட்டணத்துல பி.ஏ. படிச்சுண்டிருக்கான்"

கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாயா ?

இன்னும் இல்ல.. என்றவருக்கு ஏதோ பொறி தட்டியது.. கல்யாணத்துக்கு பாக்கச் சொல்றேளா? என்று கேட்க..
அவர் சிரித்துக் கொண்டே தலை ஆட்டி, அவருக்கு முன் இருந்த பழத்தட்டிலிருந்து ஒரு பழத்தை எடுத்து மஹாதேவன் கையில் போட்டார். பிறகு, சீதாராமன் பக்கம் திரும்பி," உன்னோட பெரிய பொண்ணுக்கு என்ன வயசாறது..? என்றார் 

"பதிமூணு.."

"ஜாதகம் எடுத்துட்டியா?"

"இனிமேதான் எடுக்கணும்.."

குருன்சிரிப்போடு அவருக்கும் ஒரு பழத்தோடு கொஞ்சம் பூவும் சேர்த்துக் கொடுக்க, அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட சீதாராமன் மகாதேவனை பார்க்க, இருவருக்குமே பெரியவர் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார் என்று தோன்றியது. 

அதன் பிறகு அவர்கள் ஜாதகம் பரிவர்த்தனை செய்து கொண்டு, பொருத்தமாக இருப்பது தெரிய வந்து, ஒரு நல்ல நாளில், பெண் பார்த்து, சம்மதம் தெரிவித்தார்கள். பிறகு உடனே வந்த ஒரு நல்ல நாளில், சீதாராமன், மஹாதேவ ஐயர் வீட்டிற்கு சீர் வரிசைகள் பற்றி பேசுவதற்காக சென்றார்.

பெரும்பாலான அந்தக் கால வீடுகளைப்  போல மூன்று கட்டு வீடு. செல்வ செழிப்பு வழிந்தோடியது. ரெட் ஆக்சைடால் பவழம் போல பளபளத்த திண்ணை, நடுவில் முற்றம், கூடத்தில் ஊஞ்சல், கூட சுவற்றில் மறைந்த குடும்ப பெரியவர்களின் பெரிய படங்கள். பின்னால்  மாட்டு கொட்டிலில் பசு, எருமை, மற்றும் காளை மாடுகள். 

விசாலம் அதிர்ஷ்டம் செய்தவள்தான் என்று சீதாராமன் மனசுக்குள் நினைத்துக் கொண்டார். தெய்வ பக்தியும், குரு பக்தியும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சீர், செனத்தி என்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் நினைப்பை பொய்யாக்கியது மஹாதேவ அய்யரின் சித்தப்பா பேசிய பேச்சு.

"எங்காத்து மூத்த பையன் மஹாதேவன், அவனோட பெரிய புள்ள கணேசன். எங்களோடது ஊருல ரொம்ப கௌரவப்பட்ட குடும்பம். அதுனால, அந்த கௌரவத்துக்கு ஒரு குறைச்சலும் வந்துடக் கூடாது."என்றவர் பெண்ணுக்கு போட வேண்டிய நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பையனுக்கு செய்ய வேண்டியவை, அதைத் தவிர பையனுக்கு ட்ரெஸ்ஸுக்கு என்று ரொக்கம் இத்தனை, எதிர் ஜாமின் இவ்வளவு, என்று ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார். 

"எதிர் ஜாமீன்...? அப்படின்னா?

"வரதக்ஷணையைத்தான் எதிர் ஜாமீன் என்பார்கள். குறுக்கே பேசாதே என்று சொன்னேனா இல்லையா?"

"சாரி, கோவித்துக் கொள்ளாதே" 

சீதாராமனுக்கு எல்லாவற்றையும் சமாளித்து விடலாமென்று தோன்றினாலும், அவர்கள் கேட்ட வைர தோடு கொஞ்சம் அதிகம் என்று பட்டது. அதை சொன்ன பொழுது, 

"எங்காத்துல எல்லாரும் வைரத்தோடுதான் போட்டுண்டிருக்கா, நாங்க ரென்று பெண்களுக்கு வைரத்தோடு போட்டுதான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம், ஆத்துக்கு வர மூத்த மாட்டுப்பெண் வைரத்தோடு போட்டுக்காம இருந்தா நன்னாயிருக்குமா? ஒரு வைர தோட்டுக்கு கூட வழியில்லாத இடத்திலிருந்தா பெண் எடுத்திருக்கான்னு எங்க சம்பந்திகள் நினைச்சுக்க மாட்டாளா?.."

ஒரு நல்ல சம்பந்தம் வைர தோட்டினால் நிற்க வேண்டாம் என்று தோன்ற சீதாராமன் அதற்கும் ஒப்புக்கொண்டார். 

ஆனால் அவர் ஒரு தவறு செய்தார். வீட்டிற்கு வந்து  எல்லா- வற்றையும் சொன்ன அவர் தான் மகளுக்கு வைரத்தோடு போடுவதற்கு ஒப்பு கொண்டதை சொல்லாமல் விட்டு விட்டார். 

அவர் வீட்டில் பணம் வரவு செலவெல்லாம் பார்ப்பது அவருடைய அம்மாதான். கணவர் மறைவுக்குப் பிறகு நிலத்திலிருந்து வந்த வருமானத்தையெல்லாம் சிக்கனமாக செலவு செய்து மிஞ்சியதை வட்டிக்கு விட்டு, கறாராக பணத்தை வசூல் செய்து அதை வங்கியில் வேறு போட்டு வைத்திருப்பாள். அதில் சேரும் பணத்தை எடுத்து அவ்வப்பொழுது நகைகளும் பேத்திகளுக்காக செய்து வைத்திருந்தாள். ஆனால் வைரத்தோடு என்பது தங்கள் சக்திக்கு மீறியது என்று நினைத்தால் இந்த வரனே வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லி விடுவாள். ஒரு நல்ல வரனை ஏன் இழக்க வேண்டும்? என்று நினைத்த சீதாராமன் அம்மாவிடம் சொல்லாமல் இருந்தது தவறு கிடையாது, வைரத்தோடு எப்படி போடுவது என்று யோசித்திருக்கலாம். குறைந்த பட்சம் உத்யோகத்தில் இருந்த தன்  தம்பியிடமாவது சொல்லியிருக்கலாம்.  தனக்கு குழந்தைகள் இல்லாததாலோ என்னவோ, அண்ணா குழந்தைகளிடம் அளவற்ற பாசம் வைத்திருந்த அவர் தம்பி வைரத்தோடு வாங்கி கொடுத்திருப்பார். சீதாராமன் அதையும் செய்யாமல் விட்டுவிட்டு மற்ற கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.   

கல்யாணத்திற்கு முதல் நாள், ஒரு மோட்டார் கார், ரெண்டு வில் வண்டி, சில கூண்டு வண்டிகளில் வந்து இறங்கிய மாப்பிளை வீட்டாரை தனது உறவினர் வீட்டில் இறக்கினார்கள். வந்து காபி குடித்த கையோடு ஆண்கள் திண்ணை திண்ணையாக சீட்டு விளையாட உட்கார்ந்தனர். சாப்பாடு ஆன பிறகு பெண்கள் ஒரு கூட்டமாக மணப்பெண்ணை பார்ப்பதற்கு வந்தனர். 

பெண்ணின் கை, கழுத்து,காது,மூக்கு இவைகளில் தாங்கள் கேட்டிருந்த நகைகளை அந்தப் பெண் அணிந்து கொண்டிருக்கிறாளா என்று நாசூக்காக சோதித்தார்கள். மாப்பிள்ளையின் அத்தை, "தோடு எங்க பண்ணினேள்? கோபால்தாசா? எத்தனை காரட்?" என்று கேட்க, அதன் உள் வர்த்தமானம் தெரியாத பெண்ணின் தாயார், இது வைரத்தோடு இல்லையே, புஷ்பராகம்தான் என்றதும், அவர்கள் முகம் சட்டென்று மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், உடனே கிளம்பி சென்று விட்டார்கள்.

மதியம் சம்பந்திக்கு காபி கொண்டு சென்ற சீதாராமனின் தம்பி, அண்ணாவிடம் வந்து," அண்ணா அங்கே என்னவோ சரியில்ல.. மஹாதேவ ஐயர் உன்னை பார்க்கணும்னு சொல்றார்.." எங்க, சீதாராமனுக்கு வயிறு கலங்கியது. 

தன் மைத்துனன் ராமுவையும் அழைத்துக் கொண்டு மஹாதேவ ஐயரை பார்க்கச் சென்றார். 

சம்பந்திகள் தங்கி இருந்த வீட்டின் ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஹாதேவன், இவர்களை பார்த்ததும்," என்ன சீதாராமன், நீங்க பெரிய மனுஷன்னு நினைச்சேன், இப்படி மோசம் பண்ணுவேள்னு எதிர்பார்கலையே.."என்று சற்று காட்டமாக கூற, விதிர்த்துப் போன சீதாராமனும், ராமுவையரும், "நீங்க, எ ..ன்..ன .. சொல்றேள்..தெரியலையே ?"

தெரியலையா..? பேஷ்! இதுதான் உங்க ஊர் பழக்கமா? சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு.."

ஒத்துண்டது எல்லாம் பண்ணியிருக்கோமே.. எது பண்ணலை?

ராமுவையர் கேட்க, இதை ஏன் எங்கிட்ட கேக்கற? உங்க அத்திம்பேர் கிட்ட கேளு? பொண்ணுக்கு வைரத்தோடு போடறேனு ஒத்துண்டாரா இல்லையானு?

வைரத்தோடா..? திடுக்கிட்ட ராமுவையர் சகோதரியின் கணவரைப் பார்க்க அவர் பதில் சொல்லாமல் தலை குனிந்து கொண்டதும் சட்டென்று சுதாரித்தார்.

அது வேறொண்ணுமில்லை, இந்த முறை விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லை. பாதிக்கு மேல சாவியாயிடுத்து, அதனாலதான்... வைரத்தோடு வாங்க முடியல., இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்கோ, எப்படியாவது வைரத்தோடு போட்டுடறோம்.."

அப்போ, ஒரு மாசம் கழிச்சு கல்யாணத்த வைச்சுக்கலாம்.. மஹாதேவன் நிர்தாட்சஷண்யமாக கூறினார்.

நீங்க பெரியவா.. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. என்ற சீதாராமன், மொதல்ல காப்பிய குடிங்கோ.. என்று கூஜாவிலிருந்து காபியை டம்பளரில் ஊற்றி, அவரிடம் நீட்ட 

என்னய்யா..? காபிக்கு வீங்கிப் போய் உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்னு நினைச்சீரா? என்று டம்பளரை தட்டி விட, கூடத்தில் காபி சிதறியது. 

வைரத்தோடு போட்டால் என் பிள்ளை ஜானவாசத்துக்கு வருவான், இல்லைனா நாங்க, கிளம்பறோம்..

ஐயையோ..! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, நாங்க ஏற்பாடு பண்றோம்.. கை கூப்பி வணங்கி இருவரும் வெளியே வந்தார்கள். 

இந்த விஷயங்கள் வெளியே தெரியாததால் திண்ணைகளில் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள், " என்னங்கனும் ? காபி சூடே இல்லை? சூடா வேற நல்ல காபி கொண்டு வரச் சொல்லுங்கோ" என்று தாங்கள் வந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் ஓடிக் கொண்டிருந்தார்கள். 

அம்புலு உன்னை தலை பின்னிக்க கூப்பிடறா? காமு உன் நாத்தனாருக்கு கல்யாணமாச்சே.. அவளை நன்னா வெச்சிண்டிருக்களா? போன்ற சப்தங்களுக்கிடையியே சீதாராமனும், ராமுவும் தங்கள் வீட்டை அடைந்தனர்.  சீதாராமன் செய்வதறியாமல் வாசல் திண்ணையில் உட்கார்ந்து விட்டார். ராமு வீட்டின் முக்கியஸ்தர்களான தன் சகோதரி, அவளின் மாமியார், மைத்துனர் இவர்களை அழைத்து நடந்த விவரங்களைச் சொன்னார். 

"என்னடா சீதாராமா இப்படி பண்ணிட்ட? முன்னாலேயே சொல்லியிருக்க மாட்டாயா?" என்று அவர் அம்மாவும்,
"என்னண்ணா எங்கிட்ட சொல்லியிருக்க மாட்டேளா?" அன்று அவர் தம்பியும் புலம்பத் தொடங்கினார்கள். 

நடந்தது நடந்து போயாச்சு, இனிமே என்ன பண்ணனும்னு யோசிக்கணும். என்ற ராமுவையர், தன் அக்காவிடம், "மீனா, உன் காதுல இருக்கற வைரத்தோட்டை அவிழ்த்து உன் பெண் காதில் போடு, கல்யாணம் நடந்தாகணும்" என்றார். 

என் தோட்டை அவளுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணுவேன்? என்று விஷயத்தின் தீவிரத்தை உணராமல் அவள் கேட்டதோடு நிற்காமல், இது என் அம்மா எனக்கு கொடுத்தது, என் பொண்ணு கல்யாணத்தில் நான் மூளி காதோடு நிற்பேனா? என்றும்,  இதையும் அவிழ்த்து கொடுத்து விட்டால், எனக்கு இவர்கள் தோடு வாங்கித் தரவே மாட்டார்கள் என்றெல்லாம் சுய நலமாக பேசி பெரிதாக அழவும் தொடங்க, இந்த விஷயம் வெளியில் யாருக்கும் குறிப்பாக விசாலத்திற்கு தெரியக் கூடாது என்று அவர்கள் நினைத்ததற்கு மாறாக மெல்ல மெல்ல வெளியே கசியத் தொடங்கியது.

என்ன மாமா? என்ன சித்தப்பா? என்று மணப்பெண்ணான விசாலம் அழத் தொடங்கினாள்.

"சீ! சீ! அசடு! ஒண்ணும் இல்லை, நீ இப்போ எதுக்கு அழற? நாங்கள்ளலாம் எதுக்கு இருக்கோம்? கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்துவோம். நீ அழாதே.." என்று அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு, அவளைத் தனியே விட வேண்டாம் என்று தன் இளைய சகோதரியிடம் கூறி விட்டு, தன் மனைவியை தனியே அழைத்து," இங்க பாரு விஜயம், இப்போ விசாலத்தோட கல்யாணம் முக்கியம். மீனாக்கு அது புரியல, புரிய வைக்க இப்போ நேரம் இல்ல, மணி ஆயிண்டிருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல ஜானவாசத்துக்கு மாப்பிளையாத்துக்காரா  வரலைனா, ஊர் முழுக்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப அவமானமாயிடும். அதனால நீ உன்னோட வைரத்தோட அவிழ்த்து விசாலம் காதுல போடு, அடுத்த மாசம் கைலாசம் தோடு வாங்கி கொடுத்துடுவான்.." என்று கூற, நிலைமையை உணர்ந்து கொண்ட விஜயம் தன்னுடைய வைரத் தோட்டை நாத்தனார் மகளின் காதில் போட்டு விட்டாள். அது வைரத் தோடுதான் என்பதை உறுதி செய்து  கொண்ட மஹாதேவ ஐயர் குடும்பம் ஜானவாசத்துக்கு கிளம்பியது. 

அடப்  பாவிகளா! மனசாட்சி கிடையாதா? எனக்கு என்னவோ அந்த கணேசன் மீதுதான் கோபம் வருகிறது. விவரம் அறிந்தவன்தானே.. அப்பாவிடம் சொல்ல மாட்டானா? 

அப்போதெல்லாம் பெரியவர்கள் ஒரு கோடு போட்டு விட்டால் அதை யாரும் தாண்ட மாட்டார்கள்.

அப்புறம்..?

அப்புறம் என்ன? கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. விசாலமும் ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி பொறுமையாகவும், அனுசரித்தும் நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்கினாள். அது மட்டுமல்ல, அவளும், கணேசனும் கருத்து ஒருமித்தவர்களாக வாழ்ந்தனர். இரண்டு பெண்கள், மூன்று பிள்ளைகள். குழந்தைகளும் தங்கம். ஆனால் அவர்கள் செய்த வினை, நிச்சயம் செய்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பெண் வீட்டாருக்கு அவர்கள் கொடுத்த டென்ஷன், கணேசன் விசாலம் குழந்தைகளின் திருமணத்தில் பழி வாங்கியது. 

என்ன நடந்தது?

அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம் எல்லாம் நன்றாகவே அமைந்தது. தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டுதான் தங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் பிறந்த ஆண் குழந்தைகள் சொல்லி விட்டு, தங்கைக்கு திருமணத்துக்கு வரன் பார்த்தார்கள், பார்த்தார்கள், பார்த்தார்கள்... என்னென்னவோ காரணம், திருமணம் கூடி வரவே இல்லை. 

கணேசனின் தம்பிகள் கொஞ்ச நாள் பொறுத்தார்கள், பிறகு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார்கள். குடும்பத்தில் கணேசனின் குழந்தைகளுக்குத்தான் கடைசியில் திருமணம் ஆனது. மூத்த பெண்ணுக்கு முப்பத்திரண்டு வயதில்தான் திருமணம் ஆனது.  அதற்குப் பிறகு பையன்களுக்கு திருமணம் ஆகும் பொழுது கிட்டத்தட்ட நாற்பது வயது ஆகிவிட்டது. கடைசி பெண்ணுக்கும் நாற்பது வயதுக்கு மேல்தான் திருமணம் ஆனது. அது மட்டுமில்லை, அவர்களுடைய குழந்தைகளுக்கும் திருமணம் ஆகுமா என்று கவலைப்பட்டு மிகவும் தாமதமாகத்தான் திருமணம்.

சரி, இதிலிருந்து நீ எதை நிலை நாட்ட விரும்புகிறாய்?

நான் என்ன ரெண்டாம் கிளாஸ் குழந்தைக்கா கதை சொல்கிறேன்? 'மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்' என்று சொல்லி முடிக்க? இதிலிருந்து நீ என்ன புரிந்து கொண்டாய் என்று சொல்..

மாதா பிதா குற்றம் மக்கள் தலையில்... அதுதானே?

வெரி குட்! கரெக்டாக பாயிண்டை பிடித்து விட்டாய்.

ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்?

போச்சுடா..! வரவில்லயே என்று நினைத்தேன்.. என்ன சந்தேகம்?

மஹாதேவன், சீதாராமனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்குமா என்னும் பரிதவிப்பை  கொடுத்தார். அதே பரிதவிப்பு அவருடைய மகனுக்கு வந்தது. ஓ,கே. ஆனால் அந்தப் பெண் விசாலம் என்ன தவறு செய்தாள்? முதலில் தன திருமணம் எங்கேயாவது நின்று விடுமோ என்னும் அச்சம். இப்போது வேண்டுமானால் நிச்சயித்த திருமணங்கள் நின்று போவது சகஜமாக இருக்கிறது, எழுபது வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய அவமானம். அது அவளுக்கு எத்தனை மன உளைச்சலை கொடுத்திருக்கும்? பின்னாளிலும் தன் குழந்தைகளுக்கு திருமணம் தள்ளிப்போவது ஒரு தாயாக அவளை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்குமே? அவளுக்கு ஏன் இது நேர்ந்தது? அவள் பெற்றோரோ, அவளோ எதுவும் தவறு செய்ததாக தெரியவில்லையே? 

ஒண்ணு  புரிஞ்சுக்கோ.. வாழ்க்கையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடையாது. நான் படுத்துக்க கொள்ள வேண்டும்.. மணி ஆகி விட்டது. 

சரி சரி அதற்காக விண்டோஸ்களை க்ளோஸ் பண்ணாமல் ஷட் டௌன்... .பண்ணா...

ம்ம்ஹும் .. இருள் சூழ்ந்து விட்டதே..! 

Tuesday, November 7, 2017

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு 


மழை பெய்து கொண்டே இருப்பதால் காற்றில் ஒரு ஜிலீர்தனம். இப்போது மிளகு குழம்பு செய்து சாப்பிட்டுப் பாருங்கள், வாய்க்கு ருசி, உடம்புக்கும் நல்லது. 

தேவையான பொருள்கள்:



புளி(பழைய புளியாக இருந்தால் நன்று) - ஒரு பெரிய எலுமிச்சம் பழம்  அளவு. புதுப் புளியாக  இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் ஊற வைக்கவும்.

வறுத்து அரைக்க:

துவரம் பருப்பு  -  1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விரை(தனியா)  -  3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1 1/2  டீ ஸ்பூன்
சீரகம்  - 1 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
உப்பு - 2 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - இரண்டு கரண்டி 
பெருங்காயம் -  1 சிறு துண்டு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை  
கடுகு(தாளிக்க) - 1/2 டி ஸ்பூன் 





செய்முறை: 

 ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அது கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாணலியில் மிகக் குறைவாக எண்ணை ஊற்றி முதலில் துவரம் பருப்பு, பெருங்காயம்,  இவைகளைப் போட்டு வறுக்கவும். து.பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் பொழுது தனியாவையும், மிளகு வற்றலையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். இறுதியாக சீரகத்தையும், கொஞ்சம்  கறி- வேப்பிலையையும் போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.  இவைகள் ஆறியதும் மிக்சியில் அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலோடு சேர்த்து கொதிக்க விடவும்.  நல்லெண்ணையை அவ்வப்பொழுது சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விடவும். எண்ணெய் தனியே பிரிய துவங்கும் பொழுது நிறுத்தி விடலாம். கடைசியில் கடுகோடு கறிவேப்பிலையும் தாளித்து இறக்கினால் மிளகு குழம்பு ரெடி.

சூடான சாதத்தோடு கொஞ்சம் நெய் சேர்த்துக் கொண்டு, மிளகு குழம்பை பிசைந்து கொண்டு, உளுந்து அப்பளம் அல்லது டாங்கர் பச்சிடி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ஆஹா.! 

Friday, November 3, 2017

குழு மனப்பான்மை.

குழு மனப்பான்மை. 

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்னது. அவருடைய நிறுவன மேலாளரை சந்தித்த ஒரு பிரபல நடிகர் அவர்களுடைய அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கென்ன தாராளமாக வாருங்கள் என்று வரவேற்பளித்த மேலாளர்,அதற்கென ஒரு நாளையும் குறிப்பிட்டு, அவரது அலுவலக பிரத்யேக வெப்சைட்டில் இந்த தேதியில் இந்த நடிகர் நம் அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார். அவர் வரும்பொழுது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவோ, அவரோடு செல்பி  கொள்ளவோ யாரும் முயலக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். ஆனாலும், அந்த நடிகர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த பொழுது அவரை சூழுந்து கொண்டு,புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் கணிப்பொறி என்ஜினீர்கள் முயன்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவை பழக்கம் இருப்பதாலோ என்னவோ நடிகர் திறமையாக சமாளித்தாராம்  சி.ஈ.ஓ தான் பாவம்  ஒரு மூலைக்குத் தள்ளப் பட்டதில் நொந்து போய் விட்டாராம். மறு நாள் இப்படிப்பட்ட ஒரு அலுவலகத்திலா நான் சி.ஈ.ஓ.வாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் மிகவும் வெட்கமாக இருக்கிறது என்று அலுவலக வெப் சைடில் புலம்பி இருந்தாரம்.

அவரை வெட்கமும் வருத்தமும் பட வைத்த குழு மனப்பான்மைக்கு பாமரர், படித்தவர் என்ற பேதம் கிடையாது போலிருக்கிறது.

Wednesday, November 1, 2017

Budhan pudhir - substitute

புதன் புதிர் பார்க்காவிட்டால் கை நடுங்குபவர்களுக்காக... substitute


1. தொந்தி பருத்தவன் தினமும் கொஞ்சம் இளைப்பான், அவன் யார்?

2. 
a).சந்திரசேகர் 
b).ரெங்கராஜன் 
c).செந்தில் 
d).ராமசாமி தேவர் 
e).தாமரை 

இவர்கள் எல்லாம் தமிழ் சினிமா பாடலாசிரியர்கள். நாம் இவர்களை எப்படி(எந்த பெயரில்)அறிவோம்? கூகுளார் உதவியை நாடும் போங்காட்டம் எல்லாம் ஆடக்கூடாது.


If 24 H in a D refers 24 hours in a day 
What the folowing refer?

90 D in RA
26 L of the A
7 W of the W
12 S of the Z
52 C in a P
11 P in a C T
5 F in a H
206 B in a B
29 D in F in LY

Enjoy. Answers will be revealed by tomorrow morning.



OCT.31

OCT.31 



இரும்பு பெண்ணாக விளங்கிய இந்திரா காந்தியை அவருடைய காவலர்களில் ஒருவனே சுட்டுக் கொன்ற நாள் Oct.31. அந்த நிகழ்ச்சி நடந்த அன்று நாங்கள் பம்பாயில்(அப்போது மும்பை ஆகவில்லை) இருந்தோம். எங்கள் தலை தீபாவளி முடிந்து, என் கணவர் மஸ்கட் திரும்பும் முன் பம்பாயில் இருந்த என் பெரிய நாத்தனாரின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்புவதாக திட்டம். 

அக்டோபர் 31 அன்று பாந்திராவில் வசித்துக் கொண்டிருந்த எங்கள் நாத்தனாரோடு நானும் என் கணவரும் செம்பூரில் அவர்களுக்குத்  தெரிந்த ஒரு பொற்கொல்லர் கடைக்கு சில நகைகள் ஆர்டர் கொடுப்பதற்காகச் சென்றோம். அவர் நம் ஊர் பொற் கொல்லர்களைப் போல இல்லாமல் பாண்ட், ஷர்ட் அணிந்து கொண்டு, ஷர்டை டக் இன் செய்து கொண்டு மிடுக்காக இருந்தார். ஒரு ஜோடி வைர தோடுகளை எடுத்துக் காட்டி, அவை நடிகை சாந்தி கிருஷ்ணாவிற்காக செய்யப் பட்டவை என்று மலையாளத்தில் நனைந்த தமிழில் கூறினார்.  

நாங்கள் செம்பூர் மார்க்கெட்டில் இருந்த பொழுதுதான் இந்திரா காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்தது. ஷாப்பிங்கை அவசரமாக முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். ஆனால், மார்க்கெட்டிலோ, வரும் வழியிலோ எங்கும் எந்த அசம்பாவிதமும் இல்லை. கடைகள் கூட அவசர அவசரமாக மூடப்படவில்லை. ஆனால் அலுவலகங்களுக்குச் சென்றிருந்தவர்கள் மதியமே வீடு திரும்பி விட்டார்கள். இரண்டு நாட்கள் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று இருந்தோம். 

'மா குரு தன ஜன யவ்வன கர்வம் 
ஹரதி நிமேஷா கால சர்வம்' 

(உன்னுடைய உடைமைகள், நண்பர்கள் குறித்தோ, இளமை குறித்தோ கர்வம் கொள்ளாதே, இவை அனைத்தும் காலன் நினைத்தால் ஒரு நொடியில் நிர்மூலமாகிவிடும் ..)

என்னும் பஜ கோவிந்த வரிகளை நான் முழுமையாக உணர்ந்த தருணம் அது.  

Monday, October 30, 2017



4 கேள்விகள் உங்களுக்கு...
ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
☺😊...நீங்க 😀😀மட்டுமே😁😁 அறிவாளி
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2nd positional இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க position என்ன?
...
...
...
....
Position 1ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது position க்குத்தான் வருவோம்...
...
....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க position என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...
...
...
....
கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
...
...
...
....
இப்போ 3வது கேள்வி...
...
...
...
ஒரு கணக்கு.. கால்குலேட்டர் உபயோகிக்காம வாசிச்ச உடனே ans. சொல்லணும்...
...
...
...
ஒரு 1000 எடுங்க அதோட 40 கூட்டுங்க
மீண்டும் ஒரு 1000 அதோட 30 கூட்டுங்க
இன்னொரு 1000 அதோட 20 கூட்டுங்க
மற்றுமொரு 1000 அதோட 10 கூட்டுங்க..
...
...
...
...
விடை?
5000 அப்படீன்னு சொன்னவங்க கால்குலேட்டரை யூஸ் பண்ணுங்க..
...
...
...
...
...
...
விடை 4100 சரிபார்த்துகீங்க..
...
...
....
.....
......
4 வது கேள்வி..
மேரியோட அப்பாவுக்கு 5 பெண்குழந்தைகள்..
முதல்பெண் Tanu
இரண்டாவது Tenu
மூன்றாவது Tinu
நான்காவது Tonu
அப்போது 5வது குழந்தை பெயர் என்ன?
...
...
...
....
....
....
Tunu அப்படீன்னு சொன்னவங்க கேள்விய திரும்ப வாசிங்க...
...
...
...
...
போனஸ் கேள்வி..
வாய் பேச முடியாதவருக்கு
டூத் பிரஷ் தேவைப்பபட்டது..
கடைக்கு போய்...
" ஈ " என காண்பித்து அது மேல விரலை வைத்து தேய்த்தார்..
கடைக்கார் புரிந்துகொண்டு பிரஷ் எடுத்துக் கொடுத்தார்..
...
...
இப்போ..
கண் தெரியாதவருக்கு ஒரு கூலிங்கிளாஸ் வேணும்..
என்ன செய்யலாம்..
...
...
...
....
கண்ண சிமிட்டுனவங்க
கண்ண தேய்ச்சவங்கல்லாம் அவுட்டு..
...
...
...
...
கண் தெரியாதவர் கூலிங்கிளாஸ் வேணும்ணு வாயாலே கேட்கலாம்...
...
....
...
அம்புட்டு கேள்விக்கும் கரீக்டா பதில் சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்...💐
....
மத்தவங்க ரொம்ப டென்சனாகீறீங்க...💤💤😭😰
நிதானமா இருங்க..
🙂🙂 பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...😜😜
பகிர்வு

Saturday, October 28, 2017

கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்ற கந்த சஷ்டி விழா

கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்ற கந்த சஷ்டி விழா

மேலத்தெரு எனப்படும் மேற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோவில் 
எங்கள் மாமா வீட்டில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் பழக்கம் உண்டு. எங்கள் ஊர் கண்டமங்கலம் சற்று பெரிய கிராமம். அக்கிரஹாரமே நான்கு தெருக்கள். சாதாரணமாக மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் அரசர்களால் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட  இறையிலி கிராமங்களாக இருக்கும். அப்படிப்பட்ட ஊர்களில் அக்கிரஹாரம் பெரிதாக இருக்கும். ப்ராசீன அமைப்பின்படி ஊரின் மேற்கே பெருமாள் கோவிலும், வட கிழக்கில் சிவன் கோவிலும் உண்டு. 

சிவன் கோவிலில் உள்ள விநாயகர்
சிவன் கோவில் கொஞ்சம் படிகள் ஏறி செல்லும்படி அமைந்திருக்கும். மூலவர் கைலாசநாதர் கிழக்கு பார்த்தும், ராஜராஜேஸ்வரி அம்மன் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்தும் இருக்கின்றனர். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியும், பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமி மயில் வாகனத்தில் தனித்தனி சன்னதிகளிலும் வீற்றிருக்கின்றனர். ஸ்வாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் இடையே இருக்கும் மேடையில் ஊரின் எல்லை தெய்வமான வாத்தலை நாச்சியம்மனின் உற்சவ விக்கிரகம் இருக்கின்றது. அமர்ந்த கோலத்தில் ஒரு கையில் கிண்ணமும், மறு கையில் வாளும் ஏந்தி, நெருப்பு கீரிடத்துடன், புன்சிரிப்போடு விளங்கும் அம்மன் வெகு அழகு!. அம்மனின் கிரீடத்தின் பின் பகுதியில் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

இங்கிருக்கும் முருகன் சந்நிதியில் ஒரு சிறப்பு என்னவென்றால், நேரே நின்று தரிசிக்கும் பொழுது முருகன் மட்டும் தனியாகவும், வலது புறத்தில் நின்று பார்த்தால் தெய்வானையோடும், இடது புறம் நின்று பார்த்தால் வள்ளியோடும் காட்சி அளிப்பார். 





வீட்டிலிருந்து பூஜிக்கப்பட்ட காவடியை சுமந்து சிவன் கோவிலில் இருக்கும் முருகன் சந்நிதிக்கு வந்து, அங்கு அபிஷேகம், ஆராதனைகள் முடித்து, பின்னர் வீடு திரும்பி ஊரில் உள்ளோருக்கு விருந்து. பெரிய கூடத்தில் நான்கு வரிசை இலை போடப்பட்டு, இரண்டு பந்திகள் ஆண்கள், ஒரு பந்தி பெண்கள் என்று சாப்பாடு போடப்பட்ட காலங்கள் மாறி, இன்று இரண்டு வரிசை ஒரு பந்தி ஆண்கள், அரை பந்தி பெண்கள் என்று சுருங்கி விட்டது. மாலையில் சூர சம்ஹாரம் மற்றும் ஸ்வாமி புறப்பாடு உண்டு. அப்போது பொங்கல், சுண்டல் பிரசாத விநியோகம் உண்டு. 

பல வருடங்களுக்குப் பிறகு கந்த சஷ்டி விழாவுக்கு ஊருக்கு சென்றிருந்தேன். 
ஊர் வெகுவாக மாறியிருக்கிறது. ஊருக்குள் நுழையும் முன் 'கண்டமங்கலம் டிஜிட்டல் கிராமத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்னும் பெரிய பிளக்ஸ் போர்ட் நம்மை வரவேற்கிறது. எங்கள் ஊர் டிஜிட்டல் கிராமமாகியிருக்கிறது என்பதை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்தேன். 

சில உறவினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டு இருக்கின்றன. சில வீடுகள் இடிந்து பாழாகி விட்டன, சில வீடுகள்தான் அப்படியே இருக்கின்றன. 





மேலே உள்ளது எங்கள் வீடு. உயரமாக இருந்த அந்த திண்ணை ரோடை உயர்த்தியதால் குட்டையாகி விட்டது. இதிலிருந்து எத்தனை முறை கீழே விழுந்திருக்கிறோம்..! திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, பல்லாங்குழி, கல்லாங்காய்(ஏழு கல்) முதல் பாண்டி வரை அத்தை குழந்தைகளோடு விளையாடியிருக்கிறோம்.

கதவுக்கு மேல் உள்ள வளைவில் கே.விஸ்வநாத ஐயர், முத்திராதிகாரி, காஞ்சி மடம் என்னும் போர்ட் இருக்கும்.

நடையில் அல்லது ரேழியில் உள்ள மாப்பிள்ளை திண்ணை.

இந்த திண்ணையில் சின்ன தாத்தா இரவில் கொசுவலை கட்டிக்கொண்டு படுத்துக் கொள்வார் 


 

கூடத்தில் உள்ள ஊஞ்சல். இதில்தான் எங்கள் அப்பாவின் அத்தை உறங்குவார். அவர் பகலில் தூங்கி நான் பார்த்ததில்லை. இரவில் பதினோரு மணிக்குத்தான் இதில் வந்து உட்கார்ந்து கொண்டு மெதுவாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே இருப்பார். எப்போது தூங்குவார்? அவரின் இறுதி மூச்சு அடங்கியதும் இந்த ஊஞ்சலில்தான்.

நான் சிறுமியாக இருந்த பொழுது இந்த ஊஞ்சலின் கம்பிகளை பிடித்துக் கொண்டு நின்றபடி நான்தான் ஜெயலலிதா என்று கூறி, 'ஒரு நாள் யாரோ, என்ன பாடல் சொல்லிதந்தாரோ..' என்று பாட முயற்சிக்க, பின்னாலிருந்து யாரோ ஊஞ்சலை வேகமாக உதைக்க, எப்படியோ விழாமல் தப்பித்தேன்.

ஊஞ்சலுக்கு பின்னால் தெரியும் கதவைத் திறந்தால் இருக்கும் அறைக்குள்தான் பலசரக்கு சாமான்கள் இருக்கும். அன்றாட சமையலுக்கு  தேவையானவற்றை அத்தைதான் எடுத்து கொடுப்பார். ஊஞ்சலை ஒட்டி ஒரு அலமாரி தெரிகிறதே, அது மருந்து அலமாரி எனப்படும். அதை திறந்தாலே குப்பென்று மிக்ஸர், டர்பன்டைன் போன்றவைகளின் நெடி அடிக்கும். ஊஞ்சலுக்கு பக்கவாட்டு சுவரின் மேலே வினொலியா சோப்பின் காலண்டர் பட லட்சுமி, சரஸ்வதி, தஞ்சாவூர் பட காளிங்க நர்த்தன கிருஷ்ணன் போன்ற பெரிய படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.

கூடத்தை ஒட்டியிருக்கும் முற்றம் 
வாசலிலிருந்து ரேழியைத் தாண்டியதும் வரும் முற்றம். நீல வண்ணம் பூசப்பட்டிருக்கும் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டிருக்கும். உள்ளே வரும் பொழுது அங்கு கால் அலம்பிக்கொடு வர வேண்டும் என்பது விதி. சாக்கு போட்டு மூடப்பட்டிருப்பது தாத்தா உட்கார்ந்து பூஜைக்கு சந்தனம் அரைக்கும் கல்.





இது எங்கள் மாமா வீடு. இதில் ஒரு பகுதியை மாற்றி கட்டிக்க கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பகுதி அப்படியே இருக்கிறது. படத்தில் இருப்பது வடவண்டை தாழ்வாரம். நல்ல காற்று வரும் இங்குதான் பெரும்பாலும் எங்கள் கோடை விடுமுறை நேரங்கள் கழியும்.






மாமா வீட்டின் புதுப்பிக்கப்பட்ட பகுதியில் நூறு வருடங்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம்.
(படத்தில் இருப்பது என் மன்னி(மாமா மகள்)





இந்த கண்ணாடி பீரோவுக்கும் நூறு வயதுக்கு மேல் ஆகி விட்டது. எங்களின் சிறு வயதில் 'ஐ ஸ்பை' விளையாடும் பொழுது இந்த பீரோவுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் பார்த்தால் திட்டுவார்கள்.
புகைப்படத்திற்கு போஸ்  கொடுத்திருப்பது மாமாவின் மருமகள். 

Friday, October 27, 2017

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((




முன் குறிப்பு:இதை படிக்கும் முன் கிரி படத்தில் வரும் 
வடிவேலு,ஆர்த்தி காமெடி சீனை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.  

நான் மாமா வீட்டிற்கு சென்ற பொழுது மாமா கை, கால், மண்டை என்று பல இடங்களில் காயத்தோடும் அதில் கட்டோடும் காணப்பட்டார்.

என்ன மாமா என்ன ஆச்சு?

ஒண்ணுமில்லேப்பா, மழையில கொஞ்சம் வெளில போக வேண்டி வந்தது.

அப்படி என்ன மாமா முக்கியம்? மழை நின்ன பொறவு போக வேண்டியதுதானே?

இல்லப்பா, ரொம்ப தோஸ்து, ஆஸ்பத்ரில  சீரிஸா  இருகார்னாங்க  போகாம  இருக்க முடியுமா..?

சரி பஸுல போக வேண்டியதுதானே?

அது எங்கப்பா வருது..? அவசரத்துக்கு ஆகுமா?

ஆட்டோ புடிக்க வேண்டியதுதானே..?

சரிதான் மழைல ஆட்டோவா?  என்னோட  ஒரு  மாச  சம்பளம்  முழுசையும்  ஆட்டோவுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணறது? சரி நமக்கு தெரிஞ்ச 
ரோடுதானே? எங்க பள்ளம் எங்க குழி எல்லாம் தெரியும் என்கர தைரியத்தில் டூ வீலரில்  கிளம்பினேன்..

மெயின் ரோடுல போனா அங்க ட்ராபிக் ஜாம்... சரி
பரவாயில்லன்னு குறுக்கு ரோடுல நொழஞ்சேன்.. மொதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. திடீர்னு ஒரு பள்ளம்... அவ்வளவு பெரிய பள்ளமா இருக்கும்னு எதிர் பார்கல... வண்டியோட விழுந்துட்டேன்..  கைல அடி..

அய்யய்யோ!

சமாளிச்சு எழுந்து மெதுவா ஒட்டிகிட்டே வந்து மெயின் ரோடு நல்லாத்தான் இருக்கும்னு ந...ம்...ம்...பி    திரும்பிட்டேன், அங்க லைட்டே  எரியல, வண்டி கீழ விழுந்ததுல ஹெட் லைட்டும் எரியல, ரோடுல கிடந்த ஒரு கல்லுல மோதி மறுபடியும் கீழ விழுந்தேன்
காலுல,தலைல அடி,

அடடா! நீங்க சொல்றதப் பார்த்தா நம்ம கவுன்சலர் வீடு வழியாத்தான்
வந்துருக்கீங்க... அப்படியே அவரப் போய் பார்த்து ரோடைப்பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதானே...?

போய் சொன்னேனே...அவரு என்னைப் பார்த்து ஒரு
வார்த்தை சொல்லிட்டார் ...

அப்படி என்ன சொன்னார்?

இவன்  ரொ...ம்ம் ...ப.. நல்லவன்டா... ரோடு எவ்ளோ மோசமா இருந்தாலும் ஓட்டறான் ன்னு சொல்லிட்டாரே...!
ஓஓஒ!

பி.கு. : இது என்னுடைய ஒரு பழைய பதிவு. சென்னையில் கொஞ்சம் மழை பெய்கிறது. எங்கள் பகுதியில் நன்றாக இருந்த சாலைகளையெல்லாம் மெட்ரோ வாட்டர் இணைப்பிற்காக தோண்டி, குத்தி, கிளறி போட்டிருக்கிறார்கள். நாங்கள் படும் அவஸ்தையை உங்களுக்கு உணர்த்த இதை பகிர்கிறேன்.

Friday, October 20, 2017

தயிர் வடை மஹாத்மியம்

தயிர் வடை மஹாத்மியம்



"தயிர் வடை ஒரு பிளேட்" என்று நான் ஆர்டர் கொடுத்தவுடன், என் கணவர் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டதும் நான்," என்ன சிரிப்பு?" என்றேன்.

இல்ல..நேத்துதான் ஏதோ தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையும்னு ஏதோ கதையெல்லாம் சொன்ன, இன்னிக்கு தயிர் வடைன்னு ஆர்டர் குடுக்கற.." என்றார்.

என்னது.. தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா? என்றான் என் மகன்.

ஆமாம்டா..

என்ன கதை? சொல்லு சொல்லு, எப்படியும் தயிர் வடை வர நேரமாகும். 

ஹர்ஷவர்தனர் தெரியுமா?

ஹர்ஷவர்தனர்..ஹர்ஷவர்தனர்  ? நார்த் இந்தியா முழுவதையும் ஆண்டவர், நாளாந்த யூனிவர்சிட்டி அவர் காலத்துலதானே இருந்தது...??

அவரேதான். அவர் சிறந்த வீரர் மட்டுமில்லை, நல்ல படிப்பாளியும் கூட. பெரிய ஸ்காலர். ஆனால் அவருக்கு தனக்கு நண்பர்கள் இல்லையேன்னு ஒரு மனக்குறை.

ஆமாம் அறிவுஜீவிகளோடு நட்பு பாராட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்ப டீடைலா பேசி போரடிப்பார்கள், இல்லைனா மற்றவர்கள் சொல்லும் விஷயங்களில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.."

"ம்ம்.. இருக்கலாம்.. ஹர்ஷர் தன்னோட குருவிடம் சென்று நண்பர்கள் கிடைக்கனுன்னா நான் என்ன பண்ணனும்? என்று கேட்டார். அவரோட குரு நீ சொன்னதைத்தான் சொன்னார்."

அதாவது நீ நிறைய படிச்சிருக்க, அதனால் உன்னோட பேசவே எல்லோரும் பயப்படுகிறார்கள். நீ படித்ததை எல்லாம் கொஞ்சம் மறந்தால் உனக்கு நண்பர்கள் கிடைக்கலாம்.." என்றாராம்.

எப்படி மறப்பது என்று ஹர்ஷர் கேட்க, உளுந்தை தயிரில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிடு, மறதி வரும். என்றாராம்.

ஹர்ஷரும் அதன்படி 48 நாட்கள் உளுந்தை தயிரில் ஊற வைத்து சாப்பிட்டு விட்டு குருவை சென்று சந்தித்திருக்கிறார். அவர் இவருக்கு ஒரு பரீட்சை வைத்தாராம். அதில் ஹர்ஷர் வழக்கம்போல முதல் மார்க் வாங்கி விட, அவருடைய குரு," உனக்கு விமோசனமே கிடையாது. 48 நாட்கள் தயிரில் ஊறவைத்த உளுந்தை சாப்பிட்டும்  கூட உனக்கு மறதி வரவில்லை. நட்பு வட்டம் என்னும் ஆசையை மறந்து விடு என்றாராம்.

அடக்கடவுளே! இது தெரிஞ்சும் நீ ஏன் தயிர் வடை சாப்பிடுகிறாய்?

என் மகன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தயிர் வடை வந்து விட்டது. அதன் மேல் காரா பூந்தி தூவ வேண்டாம் என்று சொல்ல மறந்து விட்டேன். எனக்கு என்னவோ மிருதுவாக இருக்கும் தயிர் வடை மேல், காரா காரா கர கரப்பான காரா பூந்தி தூவினால் பிடிக்காது. சில சமயம் அந்த காரா பூந்தி சிக்கு வாடை வேறு அடிக்கும். காரட் துருவல் ஓகே.!

நான் ஹர்ஷ வர்தனரைப் போல அறிவு ஜீவியும் அல்ல, தவிர 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடப் போவதில்லையே.. சர்வர் கொண்டு வைத்த தயிர் வடையை ஸ்பூனால் விண்டு வாய்க்குள் தள்ளினேன்.

படம்: நன்றி கூகிள்!