கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 8, 2016

அதிர்ஷ்டம் VS போராட்டம்

அதிர்ஷ்டம் VS போராட்டம் 



















வாழ்நாள் முழுவதும் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாத ஒருவரும், வாழ்க்கை முழுவதும் தான் சொல்ல விரும்பியதை சொல்லி, செய்ய விரும்பியதை செய்த ஒருவரும்(நல்ல விதமாகத்தான்) நண்பர்கள். அந்த இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணத்தை தழுவியது ஆச்சர்யமாக இருக்கிறது. கதைகளில்தான் இப்படி கேள்விப்பட்டிருக்கிறோம். 

அவர்கள் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் கூறியுள்ளதை பார்ப்போமா?

தன்னுடைய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்னும் நூலில், ஜெயலலிதாவைப் பற்றி சோ எழுதியிருப்பது.

ஜெயலலிதாவிற்கு அப்போது பத்து வயதிருக்கும். ஒய்.ஜி.பி. ட்ரூப்பில் அப்போது ஒரு ஆங்கில நாடகம் ஒன்று போட்டார்கள். அதில் நான் ஜெயலலிதாவின் கழுத்தை  நெரித்து கொலை செய்வதைப் போல காட்சி. ஒத்திகையின் போது நான் கழுத்தை நெரிப்பது போல நடிக்கும் பொழுது பயப்படுவதற்கு பதிலாக பகபகவென்று சிரிப்பார். எல்லோரும் அவரிடம் பயப்பட வேண்டும் என்று கூறினால், இந்த சோ முழிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது" என்பார். ஒரு வழியாக நான் கொஞ்சம் முழிப்பதை குறைத்துக் கொண்டு, அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு எப்படியோ நடித்து முடித்தோம். 

நான் நாடகங்களில் நடிக்கும் பொழுது எனக்காக கொடுக்கப்பட்ட டயலாக்கைத் தவிர அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும் என் சொந்த வசனங்களை பேசி விடுவேன். இதைக் குறித்து ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஒய்.ஜி.பி.யிடம் புகார் செய்வார். நான் என் சொந்த வசனங்களை பேசக் கூடாது என்று அவர் கூறும் பொழுது "சரி, சரி" என்று தலை ஆட்டி விட்டு, மேடையில் எனக்கு தோன்றுவதைத்தான் பேசுவேன். ஜெயலலிதா நடிக்க வந்த பொழுது, நான் இப்படி என் சொந்த வசனங்களை பேசினால் அவர் அம்மா சந்தியாவைப் போல அசந்து விட மாட்டார், தானும் அதற்கேற்றார்போல் பேசி சமாளித்து விடுவார். ட்ரூப்பில் மற்றவர்களை விட என்னிடம் அதிக நட்போடு இருந்தார்".  

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து பத்து வருடங்கள் தமிழகத்தை ஆண்டால், தமிழ் நாடு சிறப்பான நிலை அடையும் என்று நம்பினார்.

1979 அல்லது 1980 இல் குமுதத்தில் 'மனம் திறந்து பேசுகிறேன்' என்ற தொடரை(சுயசரிதம்?) ஜெயலலிதா எழுத ஆரம்பித்தார், ஆனால் சில வாரங்களிலேயே 'மனம் திறந்து பேச முடியவில்லை' என்று கூறி நிறுத்தி விட்டார். அதில் "என் வாழ்க்கையில் முக்கியமான நான்கு ஆண்கள், ஒய்.ஜி.பார்த்தசாரதி. முக்தா ஸ்ரீனிவாசன், சோ, சோபன் பாபு". சோபன் பாபுவைப் பற்றி தனியாக எழுதுகிறேன். சோ என் உடன் பிறவா சகோதரர், என் வாழ்க்கையின் எந்த முடிவையும் இவரை கலக்காமல் எடுக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

அப்படிப்பட்டவரையே கூட ஒரு சமயம், "இவர் ஒன்றும் என் நண்பர் இல்லை" என்று கத்தரித்தார், பின்பு தேர்தல் சமயத்தில் அழைத்து ஆலோசனை பெற்றார். அதன் பிறகு இறுதி வரை அந்த நட்பு நீடித்தது. 

ஜெயலலிதாவிற்கு வேண்டுமானாலும் மாற்று கருத்து வந்து சென்றிருக்கலாம், ஆனால் சோ அவரை தன் சகோதரியாகவே பாவித்திருக்கிறார் போலிருக்கிறது. தன் இளைய சகோதரி தன் மீது எத்தனை கோபம் கொண்டிருந்தாலும், அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் மன்னிக்கும் மூத்த சகோதரனைப் போல ஜெயலலிதாவிற்காக தன் உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தாரோ என்று தோன்றுகிறது.  

சோவை விட வெற்றிகரமான வழக்கறிஞர்கள் உண்டு. அவரைவிட மேன்மையான பத்திரிகை ஆசிரியர்கள் உண்டு. அவரை மிஞ்சும் நடிகர்கள் நிறைய பேர் உண்டு. இதெல்லாம் அவர் பலம் அல்ல. அவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. தனக்கு கிடைத்த புகழுக்கு அதிர்ஷடம் ஒரு பலமான காரணம் என்று உணர்ததால்தான் அவரால் பூமியில் காலூன்றி நிற்க முடிந்தது. அவருடைய நேர்மைதான் அவர் பலம். 

ஜெயலலிதா அழகும், திறமையும், நளினமும் கொண்ட நடிகையாக பொது வாழ்விற்கு வந்தார். பாடல் காட்சிகளில் அவரின் துள்ளல் ஒரு ப்ளஸ். அது அவருக்கு முன்பும் யாரிடமும் கிடையாது, அவருக்கு பின்பும் யாரிடமும் கிடையாது. அவருடைய நினைவாற்றலை பலர் புகழ்ந்திருக்கிறார்கள். மேக்கப் போட்டுக் கொண்டபடியே வசனங்களை உதவி இயக்குனர்கள் படிக்க ஒரு முறை கேட்டுக் கொள்வாராம், பின்னர் செட்டில் போய் அப்படியே பேசி ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விடுவாராம். என்றாலும் திரை உலகில் அவர் பெரிய அளவில் சாதித்தார்  என்று கூற முடியாது. வெற்றி படங்களில் நடிப்பதையோ, பெரிய ஹீரோக்களோடு நடிப்பதையோ, அதிக சம்பளம் பெறுவதையோ இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நடிப்பு என்றால் ஒரு சாவித்திரி, லட்சுமி, சரிதா, ரேவதி என்றெல்லாம்  கூறுகிறோமே அந்த வரிசையில் வர மாட்டார். ஆனால் அரசியல் வாழ்க்கையில் இவர் சாதித்தது மிக அதிகம். 

இவரால் என்ன செய்து விட முடியும்? என்ன தெரியும்? வசந்த சேனா.. என்றெல்லாம் இவரை இழித்தும், பழித்தும் பேசியவர்களின் வாயை அடைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எம்.ஜி.ஆர். இவரை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம். ஆனால் அவர் இவருக்கு ஒரு பாதுகாப்பான களத்தை அமைத்து தரவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த அவமானங்களும், சோதனைகளும் வேறு யாருக்காவது நேர்ந்திருந்தால் தாக்குப் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன் என்று அவரே குறிப்பிட்டது போல இத்தனை சோதனைகளை சந்தித்து மக்களின் தலைவராக உயர்வது என்பது மிகப் பெரிய சாதனை.  அவருக்கு நன்கு பரிச்சயமான, ஒரு துறையில் சாதித்ததை விட, அனுபவமே இல்லாத மிகக் கடினமான ஒரு துறையில் சாதித்ததுதான் ஜெயலலிதாவின் சிறப்பு.

இரண்டு துணிச்சல்கார புத்திசாலிகளை ஒரே சமயத்தில் பறி கொடுத்திருக்கிறது தமிழகம்.

Sunday, December 4, 2016

சாருவும் நானும் -2

சாருவும் நானும் -2

அந்த ஞாயிற்றுக் கிழமை நாங்கள் மேனேஜரின் வீட்டுக்குப் போன பொழுது அவர்கள் வீட்டில் டி .வி.யில் ஏதோ ஒரு தமிழ் சினிமா ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போனதும் அவருடைய குழந்தைகள் வால்யூமை குறைத்து விட்டு டி.வி. அருகே அமர்ந்து படம் பார்ப்பதை தொடர்ந்தனர். வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்து எங்கள் பார்வை டி.வி.யில் விழுந்த பொழுது படத்தில் பாடல் கட்சி. அதுவரை ஏதோ ஒரு கிராமத்தில் பாவாடை,தாவணி அணிந்து, குஞ்சலம் வைத்து பின்னிக் கொண்டிருந்த கதா நாயகியும், வேஷ்டி, தாயத்துக் கயிறுமாக இருந்த கதாநாயகனும், திடீரென்று மாடர்ன் உடை அணிந்து, ஏதோ ஒரு மலை வாச ஸ்தலத்தில் ஜிங்கு ஜிங்கென்று குதித்தார்கள். ஏரியில் படகோட்டினார்கள்.

படம் பார்த்துக் கொண்டிருந்த மானேஜரின் மகள் அவர் பக்கம் திரும்பி, " டாடி, இது கொடைக்கானல் லேக்தானே."? என்க,

"ஆமாம், ஆமாம்" என்றார். அதோடு நிற்காமல் என் பக்கம் திரும்பி, "நீங்கள் கொடைக்கானல் போயிருக்கீர்களா முரளி"? என்றது என் போதாத காலம்.

"ம் ஹும் .. இல்லை.." என்று சாரு என்னை முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.

"நைஸ் பிளேஸ், யூ ஹவ் டு ஸீ " என்றவர் தொடர்ந்து, "உனக்குத்தான் லீவ் இருக்கே, ஜாலியா போயிட்டு வர வேண்டியதுதானே"? என்றார்.

இப்போ சீசன் சமயமாச்சே? அக்காமடேஷன் கிடைக்க வேண்டாமா"?

"ஓ! கமான், ஸ்டே பண்றதா ப்ராப்லம்? நம்ம ஆபீசுக்கு ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் சூட் உண்டு. நீ எப்போ போறேன்னு சொல்லு, நான் உனக்கு அக்காமடேஷன் புக் பண்ணித்தரேன்" என்று டிசைட் பண்ணி வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் முடிவெடுப்பதற்கு எனக்கென்னவோ அதிகாரம் இருப்பது போல கூறினார்.  

வீட்டிற்கு வரும் பொழுது, சாரு "நான் கொடைக்கானல் பார்த்ததே இல்லை" என்றல்.

"நான் நிறைய பார்த்திருக்கிறேன், சினிமால.."

என் ஜோக்கிற்கு அவள் சிரிக்கவில்லை.

இந்த வருஷம் போலாமா? உங்க மானேஜர்தான் ரூம் புக் பண்ணி தரேன் என்கிறாரே?

ரூம்தான் அவர் புக் பண்ணி கொடுப்பார், துட்டு நான்தான் கொடுக்கணும், பாக்கி செலவெல்லாம் யார் பண்ணுவா"?

சாரு வாயை மூடிக் கொண்டதில் அந்த சப்ஜெக்ட்டையே மூடியாயிற்று என்று நினைத்தேன்... மறு நாள் அவள் சித்தி வரும் வரை.

"வா சித்தி, எப்படி இருக்கே? உஷாகிட்டேயிருந்து லெட்டர் வரதா? எப்போ வருவா"?

"அடுத்த மாசம் பத்தாம் தேதி வரா, இந்த தடவ அவ நேர டெல்லி வந்துடுவா, நானும், சித்தப்பாவும் டெல்லி போறோம், அங்கேயிருந்து ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் எல்லாம் பார்த்துட்டு, இங்க வந்து பதினஞ்சு நாள்தான் இருப்பா, அப்புறம் சிங்கப்பூர், ஹாங்காங், போயிட்டு அப்படியே ஊருக்கு போய்டுவாள்,, பேக்கேஜ் டூர் .."

"நீ ஏற்கனவே டில்லி பாத்துருக்க இல்லையோ.."?

 அது காசி போனப்போ.. அப்போ, இந்த இடமெல்லாம் பார்க்கல.. அடுத்த வருஷம் சித்தப்பா ரிடையர் ஆயிடுவா, அதுக்குள்ள எல்.எப்.சி.இல் பார்த்தால்தானே உண்டு.."

தான் வீசிய குண்டின் விளைவை உணராமல் சித்தி போய் விட, சாரு, ஹும்!அதிர்ஷ்டம்.! இந்த உஷா வெறும் எஸ்.எஸ்.எல்.சி., நான் பி.எஸ்.சி. படித்திருந்து என்ன பிரயோஜனம்? கேவலம் ஒரு கொடைக்கானல் போக கொடுத்து வைக்கல.. இவ போன வருஷம் யூரோப் போயிட்டு வந்து அலட்டினா, இந்த வருஷம் சிங்கப்பூர்... எல்லாத்துக்கும் தலைல எழுதி இருக்கணும்.."

அவளுடைய பொருமல் எனக்கு எரிச்சல் ஊட்டினாலும், அது ஓரளவு நியாயமானதுதான். கல்யாணமான இந்த இரண்டு வருடங்களில் நான் அவளை எங்கேயும் அழைத்துச் சென்றதில்லை. எனக்கு அலையும் உத்தியோகம் என்பதால் எப்போதடா வீட்டில் இருப்போம் என்றிருக்கும். அவளுடைய பிறந்த வீடும் சென்னையாகவே இருப்பதால் பிறந்த வீட்டிற்கு போகும் சாக்கில் ஊருக்குப் போவதும் இல்லை, இப்போது ஒரு மாறுதலுக்காக கொடைக்கானல் போனால் என்ன?

வெரி குட் டெசிஷன்..! போய்ட்டு வா. இந்த வயசுல என்ஜாய் பண்ணாமல் அப்புறம் எப்போ என்ஜாய் பண்ண முடியும்? ஐ வில் அரேஞ்ஜ் for யுவர் ஸ்டே"  மானேஜர் தட்டி கொடுத்தார்.

நாங்கள் கொடைக்கானல் போகப் போவதை சாரு பக்கத்து வீட்டில் புத்தகம் இரவல் வாங்கி, அவுட் ஹவுஸ் குழந்தைகளை டி.வி.பார்க்க அனுமதித்து,வேலைக்காரியோடு சிரித்துப் பேசி,லெட்டர் எழுதி, போன் பண்ணி எல்லோருக்கும் தெரியப் படுத்தினாள்.

அடுத்த ஒரு வாரத்தில் என் பர்ஸ் மளமளவென்று காலியாக சாரு கொடைக்கானல் போக சீப்பு, கொடைக்கானல் போக சோப்பு, கொடைக்கானல் போக ஸ்டிக்கர் போட்டு என்று வாங்கிய சாமான்களின் அளவு, திருமணமாகிச் செல்லும் பெண்ணிற்கு வாங்கித் தரும் சாமான்களை விட அதிகம் இருந்தது.

ஊருக்கு போவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே பாக் பண்ண ஆரம்பித்து விட்டாள். தன் பீரோவை தளி கீழாக கொட்டி முதலில் பச்சை புடவையை எடுத்து வைப்பாள். " பச்சை வேண்டாம், அங்கே எங்க பார்த்தாலும் பச்சையாக இருக்கும், கான்ட்ராஸ்டாக ஏதாவது கட்டிக்க கொள்ளலாம்.." என்று பச்சை புடவையை உள்ளே வைத்து விட்டு சிவப்பு புடவையை எடுத்து வைப்பாள். அதற்கு பிளவுஸ் பழசாக தோன்றும், உடனே அதை வைத்து விட்டு பிரௌன் புடவையை எடுத்து வைப்பாள்.

" சாரு, அப்படியே எங்க நாக்பூர் அக்கா கொடுத்த ஷாலையும் எடுத்து வைச்சுக்கோ.."

ஆமாம் பெரிய ஷால்..! ஒரு அறுதல் பழசு..! தூக்கிப் போட மனசில்லாம ஒங்க கிட்ட குடுத்திருக்கா, அதை எடுத்து வைச்சுக்கணுமா? தவிர இது ஜூன் மாசம்தானே? இப்போ ஒன்னும் குளிராது.."

ஒரு இடத்தின் சீதோஷ்ணம் அது கடல் மட்டத்திலிருந்து எத்தனை உயரத்தில் இருக்கிறது என்பதைக் குறித்து மாறுபடும் என்னும் அடிப்படை பூகோளத்தை சாருவுக்கு புரிய வைக்கும் த்ராணி எனக்கில்லாததால் வாயை மூடிக் கொண்டேன்.

ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் இருக்கும் சாருவின் பெரியப்பா பையனுக்கு சீமந்தம் என்று கடிதம் வந்தது.

எங்க பெரியப்பா அவ்வளவு பெரிய மனுஷன்(உசிலை மணி சைஸ்) தன கைப் பட லெட்டர் எழுதி இருக்கார், போகாம இருக்கறது மரியாதை கிடையாது. தவிர அவருக்கு பெண்னே கிடையாது நான்தான் பெண் ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்யணும். போற வழிதானே? தலையைக் காட்டி விட்டு போய்டலாம்.."

"அங்க போனா ரெண்டு நாள் வேஸ்ட் ஆகிடும்.."

"எப்படி ரெண்டு நாளாகும்?. சீமந்தம் முடிஞ்ச உடனே சாப்பிட்டு விட்டு கிளம்பிடலாம்.."

"ரொம்ப அழகா இருக்குடி! வந்ததும் ஓடறேங்கறது.. ஒரு நாளில் கொடைக்கானல் எங்கேயும் ஓடிடாது. சாயந்திரம் பூச்சூடலுக்கு நாத்தனார் ஸ்தானத்தில் நீதான் இருக்கணும். நாளைக்கு முதல் பஸ்ஸில் உங்களை ஏத்தி விட்டுடறோம்" சாருவின் பெரியம்மா கண்டிப்பாய் கூறி விட மீற முடியவில்லை.

நாத்தனார் ஸ்தானம் என்று கூறி விட்டதால் பூச்சூடல் பெண்ணுக்கு புடவை எடுத்துக் கொடுக்கத்தான் வேண்டும் என்று சாரு அவள் மன்னிக்கு ஒரு புடவையும் தான் இரண்டு புடவைகளும் எடுத்துக் கொண்டது வேறு விஷயம். 

சாரு அன்று இரவே எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாள். "நாங்க முதல் பஸ்ஸில் கிளம்பி விடுவோம். உங்களை எல்லாம் எதுக்கு எழுப்பி சிரமப் படுத்தனும்"? 

ஆனால் மறு நாள் காலையில் வீட்டில் இருந்த அத்தனை பேரும் அவளை எழுப்ப வேண்டி இருந்தது.

 முதல் காபி, செகண்ட் டோஸ், மூன்றாவது டோஸ்..

"குளி, ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போய்டலாம்.." உபசாரம் கொஞ்சம் ஓவர்தான். என்ன செய்வது சில சமயங்களில் அன்புத் தொல்லைகளை தவிர்க்க முடியாது.

எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் சாருவுக்கு சாப்பிட்டவுடன் பத்து நிமிடம் படுத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராகு காலம் ஆரம்பித்ததை சாருவின் தவறு என்று கூற முடியாது. எப்படியோ கிளம்பும் பொழுது மணி நாலு.

சாருவின் பெரியப்பாவிடம் விடை பெற்றுக் கொள்ளலாம் என்று வந்த பொழுது, துண்டை விரித்து படுத்திருந்தவர் எழுந்து, கையிலிருந்த விசிறிக் காம்பை என் பக்கம் திருப்பி ஆட்டி,முகத்தை வேறு மேலே தொக்கி, "க்கும்.." என்று உறும பயந்தே போனேன்.

பாதி தூக்கத்தில் எழுப்பினால் தன் பெரியப்பாவுக்கு கோபம் வரும் என்று சாரு சொல்லியிருக்கிறாள், அதற்காக இப்படியா? என் அப்பா கூட என்னை விசிறிக் காம்பால் அடித்ததில்லை.

"ஸ்ஸ்ஸ்.. எப்படி போறேள் னு பெரியப்பா கேட்கிறார்" என்று சாரு என் விலாவில் இடித்ததும்தான் அந்த உறுமலுக்கு இப்படி ஒரு பொருள் உண்டு என்று தெரிந்தது.

"இங்கேயிருந்து நேரா மதுரை, மதுரைலேர்ந்து.." நான் முடிக்கும் முன் பெரியப்பா மறுபடி விசிறிக் காம்பை ஆட்டி, "ம்ஹும்.." என்றார். பிறகு எழுந்து பக்கத்திலிருந்த சொம்பு ஜலத்தினால் வாயை கொப்பளித்து விட்டு, "எதுக்கு அனாவசியமா மதுர வரைக்கும் போகணும்? திண்டுக்கல்லில் எறங்குங்கோ, அங்கேர்ந்து கொடை ரோட்டுக்கு நிறைய பஸ் உண்டு, கோடை ரோடுலேர்ந்து..."

கொடைக்கானல் செல்லும் கடைசி பஸ் சென்று ஐந்து நிமிடம் ஆகியிருந்தது...

-- தொடரும்.