கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 18, 2016

பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும் !

பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும் !


கனவுகள் குறித்த என்னுடைய முந்தைய பதிவினை'// அவசரப் படாதீர்கள், கதை சாரி கனவு இங்கே முடியவில்லை..//- என்று முடித்திருந்தேன். 
என் கணவருக்கு சிகிச்சை நடந்தது செவ்வாய் கிழமை. அன்று மாலை என்னோடு தொலை பேசியில் பேசி, என் கணவரின் உடல் நலத்தை விசாரித்த என் மைத்துனன், "வியாழக் கிழமை அண்ணாவை பார்க்க வருகிறேன்" என்று கூறினான். ஆனால் புதன் கிழமை வேலையிலிருந்து திரும்பிய அவன், திடீரென்று மயங்கி விழுந்து விட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக செய்தி வந்தது. சர்க்கரையின் அளவு அதிகமாகி விட்டதாம். சிகிச்சை பலனின்றி இரண்டு  நாட்களில் அவன் இறந்து போனான். இப்போது என் கனவை நினைவு கூறுங்கள். //-ஈஸி சேரில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் என் காலடியில் வலது புறம் ஒருவரும் இடது புறம் ஒருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். வலது புறம் இருப்பவர் டீசென்டாக உடை அணிந்து கொண்டிருக்கிறார். ஆனால் சற்று கவலையோடு ஏதோ யோசித்தபடி இருக்கிறார். இடது புறம் இருப்பவர் வயலில் வேலை செய்பவரைப் போல வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்க கொண்டு முண்டாசு அணிந்து கொண்டு குந்தியபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் என்னிடம்," வெங்கி அவ்வளவுதான், போயாச்சு.." என்கிறார், உடனே வலது புறம் இருப்பவர், "சீ! சீ! இவன் சொல்றதை நம்பாதே, நான் அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்" என்கிறார். உடனே இடது புறம் இருப்பவர், அப்படினா இதுக்கு பதிலா எனக்கு வேற உசிரை காட்டுங்க, நான் என்ன பண்ண முடியும்?" என்கிறார். நான் திடுக்கிட்டு முழித்துக் கொண்டேன்.//- 

என்னை மிகவும் பாதித்த கனவு இது. இதைப் போலவே என்னை அதிகம் பாதித்த வேறு இரு கனவுகள் இளம் வயதில், மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு அகாலமாக இறந்து போன என் மாமா மகனின் மரணமும், சுனாமி என்னும் பேரழிவும். 

என் மாமா பையன் டிசம்பர் மதம் இறந்து போனான். எனக்கு அக்டோபாரிலிருந்தே  கனவுகள் வரத் துவங்கி விட்டன. எல்லாம் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருந்ததால் என்னால் அவைகளை புரிந்து கொள்ள இயலவில்லை.

சுனாமி பற்றிய கனவு  மூன்று நாட்கள் அடுத்தடுத்து பகல் தூக்கத்தில்தான் வந்தது. முதல் நாள் ஹோ வென்று அலை ஓசை மட்டும், இரண்டாம் நாள் அலை ஓசையோடு மக்களின் ஓலம்.., முன்றாம் நாள் ஒரு பெரிய குழி வெட்டி அதில் நிறைய பிணங்களை போட்டு மொத்தமாக மூடுகிறார்கள். என்னடா கண்ராவி கனவு! என்று நினைத்துக் கொண்டேன். அது அப்படியே பலித்த பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. 

சோகமாக முடிக்காமல் சுபமாக முடிக்கிறேன். என் மகளுக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு திருமண பத்திரிகை அதில், முதல் வரியில் என் மகளின் பெயர் அச்சிடப்பட்டு, இரண்டாம் வரியில் வெட்ஸ் என்னும் வார்த்தை, மூன்றாம் வரியில் மணமகனின் பெயர் அச்சிடப்பட்டிருக்கிறது, மருமகனின் அப்பாவின் முகம் தெளிவாக தெரிகிறது அவர் பெயர் 'ராம' என்று துவங்குகிறது. அவர் வீட்டில் குண்டாக வெள்ளையாக ஒருவர் இருக்கிறார் என்று வந்தது. இந்த கனவு வந்த ஒரு மாதத்தில் என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. எங்கள் சம்பந்தி அம்மாள் குண்டாகவும் வெள்ளையாகவும் இருப்பார். மாமாவின் பெயர் ராமகோடி.

அதே போல என் மகனுக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவன் அச்சடித்த திருமண பத்திரிகைகளை ஒரு அட்டை பெட்டியில் கொண்டு வந்து அன்னை படத்திற்க்கு முன்பு வைப்பது போல கனவு வந்தது. அதுவும் விரைவில் பலித்தது.  

இப்படிப் பட்ட கனவுகள் வந்து அவை பலிக்கும் பொழுது அரவிந்த அன்னை கூறியுள்ளதுதான் என் நினைவுக்கு வரும். ஒரு விஷயம்  
இந்த பூவுலகில் நடை பெறுவதற்கு முன்பே சூட்சும உலகில் முடிந்து விடும் என்பார். அதை சிலருக்கு ஏனோ இயற்கை காட்டி கொடுக்கிறது. இயற்கை சிந்து பைரவி ஜனகராஜோ?(அந்த படத்தில் அவருக்கு தெரிந்த விஷயத்தை வெளியே சொல்ல விட்டால் தலை வெடித்து விடும் போல ஆகி விடும், அதனால் பல விஷயங்களை போட்டு உடைத்து விடுவார்). அதைப் போல இயற்கையும் ரகசியத்தை பாதுகாக்க முடியாமல் யாரோடாவது பகிர்ந்து கொள்ள துடிக்கும் போலிருக்கிறது. 

மனதளவில் நுட்பமாக(subtle) ஆகும் அளவிற்கு clairvoyant ஆக மாறுவோம், அப்போது இதெல்லாம் சாத்தியம் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ போன ஜென்மத்தில் ஏதாவது ஆன்மீக பயிற்சி செய்திருப்பார்கள் அதனால் விளைந்த 'சித்தி' என்கிறார்கள். அது சித்தியோ பெரியம்மாவோ ரொம்ப சந்தோஷத்தை தரக் கூடிய விஷயம் என்று கூற முடியாது. 

ஏனென்றால் சில விஷயங்கள் நமக்கு புரியவே புரியாது(எனக்கு வந்த சுனாமி கனவை போல), புரிந்த விஷயங்களையும் தடுக்க முடியாது. நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, மோசமான விஷயமாக இருந்தால் வெளியே சொல்லவும் முடியாது. மனதிற்குள் வைத்துக் கொண்டு மருக வேண்டும். பெரிய அவஸ்தை அது. 

இந்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயம். ஒரு பேரறிவு இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. உண்மையில் நாம் செய்கிறோம் என்று நாம் நினைக்கும் பல செயல்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டவை. நாம் வெறும் நிமித்த காரணம்தான். எனவே இதில் நமக்கு கர்வம் கொள்ள எதுவும் இல்லை. 

பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி!



Monday, November 14, 2016

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!




குழந்தைகள்!

இன்றலர்ந்த பூக்கள் 
இறைவனின் தூதர்கள் 
காணாத சொர்க்கத்தின் 
கார்பன் காப்பிகள் 
சிவப்பு முக்கோணத்தால் 
சிறை படுத்தப் பட்டாலும் 
தவிர்க்காமல் தலை நீட்டும் 
அழகான அதிகப் படிகள்.
  
Happy children's day! பேத்தி உறங்கிய பிறகுதான் பி.சி. ஐ திறக்க முடிகிறது. எனவே கொஞ்சம் தாமதமாக குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!