கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 10, 2016

வேலை வேலை வேலை

வேலை வேலை வேலை 

"வித்யா வந்தாச்சு, நீ பேசறயா, நான் பேசட்டுமா"? கணேஷ் தன் மனைவி கீதாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்.

"நானே பேசறேன், நீங்க ஏதாவது சொல்லப் போக பிரச்சனை ஆகிடப்போகுது.." பேசிக்கொண்டே ஒரு தட்டில் வித்யாவுக்காக ரெண்டு பிஸ்கேட், கொஞ்சம் மிக்சர் எடுத்து வைத்துக் கொண்டு, காபியும் கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், வித்யா உடை மாற்றி, முகம் அலம்பிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மாவிடமிருந்து தட்டை வாங்கி கொண்டு, டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சேனலை மற்றது துவங்க, அருகில் அமர்ந்து கொண்ட கீதா,
"உனக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது"

"ஆமாம்"

"இனிமே கொஞ்சம் பொறுப்பா இருக்கணும்"

"என்ன பண்ணனும்"?

"வீட்டு வேலையெல்லாம் செய்ய கற்றுக் கொள்"

"என்ன வேலை"?

"வீட்டை க்ளீன் பண்ணுவது, மாப் போடுவது, வாஷிங் மெஷினில் துணி துவைக்க போடுவது, துணி உலர்த்துவது, இப்படி சின்ன சின்ன வேலைகள் எல்லாம்"

"இதுக்கெல்லாம் வேலைக்காரி கிடைக்க மாட்டாளா"?

"என்னதான் வேலைக்காரி இருந்தாலும் நமக்கும் செய்யத் தெரியணும்"

"ஓ.கே."

"அப்புறம் இப்படி ஆபிசிலிருந்து வந்தவுடன் அம்மா காபி கலந்து நீட்டுவது போல கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காபி போட கத்துக்கோ, அதோட மட்டுமில்ல, குக்கர் வைக்க, சிம்பிளா ஒரு வற்றல் குழம்பு, ரசம் வைக்க கற்றுக் கொள்".

அம்மா சொல்வதை எல்லாம் புன்னகையோடு கேட்டுக்கொண்டு, "அது சரிம்மா, எல்லா வேலையையும் நானே செய்து விட்டால் வீட்டில் பெண்டாட்டி என்று ஒருத்தி இருப்பாளே,அவள் என்னதான் செய்வாள்"? என்றான் வித்யா என்னும் வித்யாசாகர்.

"ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க, உனக்கு எவ்வளவு டயர்ட் நெஸ் இருக்குமோ அவளுக்கும் அதே அளவு ட்யர்ட்னெஸ் இருக்கும்டா, புரிஞ்சு நடந்துக்கோ" என்றாள் கீதா.

"சரி, சரி இப்போ இந்த காபி கப்பை நான்தான் கொண்டு போய் சிங்கில் போட வேண்டுமா"?

"முடிந்தால் கழுவி வைத்து விடேன்" என்றால் 21ம் நூற்றாண்டு  பிள்ளையைப் பெற்ற அம்மா. 


ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

இதில் உனக்கு அப்படி என்ன சந்தோஷம்? என்று கேட்க்கிறீர்களா? எனக்கும் என் அக்காவுக்கும் சரியாக ஒரு வருடம்தான் வித்தியாசம். முதல் வருடம் ஜூலை 5ம் தேதி அவள் பிறந்தாள். நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் ஸ்லோ, அவளோடு சேர்ந்து பிறந்திருக்க வேண்டியவள் ஒரு வருடம் லேட்டாக அடுத்த வருடம் அதே ஜூலை 5ம் தேதி பிறந்தேன். எனவே இரட்டையர்களைப் போலவேதான் வளர்ந்தோம். அவளை பள்ளியில் சேர்க்க வேண்டிய காலம் வந்த பொழுது, அவளை பிரிய முடியாது என்று நான் அழுதேனாம், எனவே என்னையும் அவளோடு சேர்த்து பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் பர்த் செர்டிபிகேட் கெடுபிடியெல்லாம் கிடையாது என்பதால் என் அக்காவுக்கு எனக்கு இரண்டு பேருக்குமே ஒரு வயது அதிகம் கொடுத்து சேர்த்து விட்டார்கள். பிறந்த நாள் எல்லாம் யாருக்கு தெரியும். பள்ளி ஆசிரியரிடம் ஆனி  மாதம் என்று சொல்லி இருப்பார்கள், அவர் தனக்கு தோன்றிய ஒரு தேதியை போட்டிருப்பார். சமீபத்தில் என் சகோதரிக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டி வந்தது. அதர்க்காக அவள் அந்த அலுவலகம் செல்வதற்கு முன் அவள் பேரன், "அம்மம்மா உன் டேட் ஆப் பர்த் கேட்டால், ஜுலை 5 என்று சொல்லக் கூடாது, ஜூன் 24 என்று
சொல்ல வேண்டும்" என்று அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தான். ஆக, சீனியர் சிட்டிஸின்களுக்கு வழங்கப் படும் ரயில்வே சலுகைகள் இனிமேல் அவளுக்கு கிடைக்கும். எனக்கு அடுத்த வருடம்தான். இதில் என்ன அவ்வளவு சந்தோசம் என்று மீண்டும் கேட்காதீர்கள், என் சொந்த கதை சோகக் கதையை சொல்கிறேன்.

ஒரே வகுப்பில் படித்தாலும் நாங்கள் இருவரும் சகோதரிகள் என்று நிறைய பெருக்குத் தெரியாது. வகுப்பு வாசல் வரைதான் ஒன்றாக செல்வோம், பிறகு அவளுடைய குழு வேறு, என்னுடைய குழு வேறு. ஒத்த ஜாடையும் கிடையாது.  அது மட்டுமல்ல, பழக்க வழக்கங்களிலும் நானும் அவளும் எதிரெதிர் துருவங்கள்தான். நான் கொழு கொழுவென்றிருக்க, சவலைக் குழுந்தையாகிய அவள் சோனியாக இருப்பாள் (இன்றும் அப்படித்தான்). எங்கள் வகுப்புக்கு புதிதாக வரும் ஆசிரியர்கள் இருவருக்கும் ஒரே இனிஷியல் வருவதைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் சிஸ்டெர்ஸா? என்று ஆச்சர்யமாக கேட்பார்கள், ஆமாம் என்றால் யார் அக்கா?, யார் தங்கை என்பார்கள்? உண்மையைச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பலரும் இன்று வரை அவள்தான் அக்கா, நான்தான் தங்கை என்பதை நம்புவதில்லை. 

இதை விட பெரிய கொடுமை அப்போதெல்லாம் பஸ்ஸில் அரை டிக்கெட் உண்டு. நான் சிறுமியாக இருந்த பொழுது நாங்கள் திருச்சி உறையூரில் இருந்தோம், அங்கிருந்த ராம விலாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து மெயின் காட் கேட் செல்ல முழு டிக்கெட் 10 பைசா, அரை டிக்கெட் 5 பைசா. பஸ்ஸில் கண்டக்டரிடம் என் அம்மா, ரெண்டு அரை டிக்கெட் என்றால், அவர் என்னை காண்பித்து, இந்த பாப்பாக்கு முழு டிக்கெட் வாங்கிடுங்க, அந்த பாப்பாக்கு அதாவது என் அக்கா அரை டிக்கெட் வாங்கிக்கலாம் என்று என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார். ஒரு முறை எங்கள் பள்ளியில் திருச்சி ஏர் போர்ட் காண்பிக்க அழைத்துச் சென்றார்கள். அப்போது ஒரு அசிரியை மாணவிகளை இரெண்டு வரிசையாக பிரித்தார். ஒரு வரிசை முழு டிக்கெட்டுக்கானது, மற்றது அரை டிக்கெட். என்னை முழு டிக்கெட் வரிசையில் நிற்க வைத்துவிட்டு, என் அக்காவை அரை டிக்கெட்டுகளோடு சேர்த்தார். என்ன கொடுமை!!

என்னை பொறாமை பட வைத்த என் சகோதரியும் நானும் 


இப்படி எத்தனை முறை என் காதில் புகை வர வைத்திருக்கிறாள்.. அந்த பாச்சாவெல்லாம் இனிமேல் பலிக்காது  ட்ரெயினில் டிக்கெட் புக் பண்ணும் போதே சீனியர் சிட்டிசன் என்று குறிப்பிட்டால், சலுகை கிடைக்கும். நான் இன்னும் ஒரு வருடம் ஜாலியாக காத்திருப்பேன்.

இதற்காகவே அவளோடு எங்காவது ரயிலில் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. டிக்கெட் புக் பண்ணி விட்டு," பாத்தியா நீதான் சீனியர் சிட்டிசன், நான் கிடையாது", என்று கொக்கரிக்கலாமே.(அட அசட்டு அல்பமே! இவ்வளவுதானா நீ?!!?)