கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 28, 2016

நன்றி ஸ்ரீராம்!

நன்றி ஸ்ரீராம்! 

சனிக்கிழமை அன்று மாங்காடு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கால் டாக்ஸி புக் பண்ணி விட்டு காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பைக்கில் உட்கார்ந்திருந்த இளைஞன் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தான். 

இவன் ஏன் என்னை முறைக்கிறான்? பயந்து போய் பார்வையை திருப்பிக் கொண்டேன். அப்போதுதான் புரிந்தது அவன் என்னை முறைக்கவில்லை அவனை காக்க வைத்து விட்டுச் சென்ற அவன் தயார் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்.. அவரைத்தான் உன்னிப்பாக பார்த்திருக்கிறான்... கடவுளே!

புக் பண்ணிய கால் டாக்ஸி இன்னும் ஒரு நிமிடத்தில் வந்து விடும் என்று அறிவிப்பு வருகிறது, ஆனால் இன்னும் காணவில்லையே..? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு வாகனம் என்னை மெதுவாக கடந்து செல்கிறது... 
"மேடம் எங்க இருக்கீங்க?" 
"கோவிலுக்கு வெளியே ட்ராபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில்.."
 "அங்கதான் நானும் இருக்கேன், கொஞ்சம் முன்னால பாருங்க..."
 
என்னை கடந்து சென்ற வாகனம்தான். ஏறி உட்கார்ந்தேன்.  
எப்போதும் போல் என் பெயரை கேட்டு ஊர்ஜிதம் பண்ணிக்க கொள்ளவில்லை. வண்டியில் 'ஓலா' ஸ்டிக்கரும் இல்லை. 

சரியான வண்டிதானே? என்னை யாரும் கடத்திச் செல்லவில்லையே? மீண்டும் பயம். 

"உங்க வண்டியில் ஏன் பெயர் ஸ்டிக்கர் இல்லை?"

"சின்ன வண்டியில்தான் மேடம் ஸ்டிக்கர் இருக்கும், இது பெரிய வண்டி. தவிர ஓலா, உபர் இரண்டிலும் ஓடும்".

என்னதான் ட்ரைவர் சமாதானம் சொன்னாலும், எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. 

ஆனால் என் பயம் அர்த்தமற்றது. சரியான வண்டிதான், ஓட்டுனரும் நல்லவர்தான்.

மறு நாள் டூ வீலரில் அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரி வீட்டுக்குச்  சென்றேன். அங்கு போனதும் மழை பிடித்துக் கொண்டதால் வண்டியை அங்கேயே விட்டு விட்டு உபர் கார் புக் பண்ணி வந்தேன். 130 ரூபாய் ஆகியிருந்தது. 150 ரூபாய் கொடுத்தால், "சில்லறை இல்லை மேடம், 30 ரூபாய் தாங்களேன்". என்றார் ட்ரைவர்.

30 ரூபாயை எடுப்பதற்காக மாடிக்கு வந்தவள் வாசல் கதவை சாத்தவில்லை.
 
ஐயோ, வாசல் கதவை திறந்தே வைத்து விட்டு வந்து விட்டோமே? அந்த ட்ரைவர் பின்னாலேயே வந்து நம்மை கத்தியால் குத்தினால்...? என்னதான் அபார்ட்மெண்ட் என்றாலும், அக்கம் பக்கம் எல்லாம் கதவை அடைத்துக் கொண்டு வெளியே அல்லவா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.." மீண்டும் பயம். 

அந்த ட்ரைவர் பாவம் அப்படி எல்லாம் எதுவும் செய்யாமல் நான் வருவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். 

இத்தனை பயம் ஏன்? என் குடும்பத்தினர்கள் வெளியூர் செல்லும் போதெல்லாம் அவர்களை விடியற் காலையிலும், இரவிலும் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கொண்டு விட்டு விட்டு தனியாக வரும் போதெல்லாம் தோன்றாத பயம் இப்போது ஏன்? உலகம் இனிமையானது, மனிதர்களில் பெரும்பான்மையோர் நல்லவர்கள் என்று நம்புகிறவன் நான்.  துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் மரணம் என்னை வெகுவாக பாதித்து விட்டது. என் நம்பிக்கை பொய்த்துப் போன பயம், மானுடம் தோற்ற பயம். 

'எங்கள் ப்ளாக்'இல் ஸ்ரீராம் பதிவு செய்திருந்த பாசிட்டிவ் செய்திகளை படித்தப் பின் என் நம்பிக்கை மீண்டது. நன்றி ஸ்ரீராம்!