கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 10, 2016

பழையன விரும்பு!

பழையன விரும்பு!

ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து இன்று வழக்கொழிந்து போன சில விஷயங்கள், உங்களுக்கு பரிச்சயமா? பாருங்கள்..




வண்ணான் கூடை:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் பலர் வீடுகளில் இருந்த விஷயம் இது. சலவைக்கு போடா வேண்டிய துணிகளை இந்த கூடையில் சேர்த்து வைப்பார்கள். வண்ணான் ஒவ்வொரு புதன் கிழமை அல்லது சனிக் கிழமை வந்து சாவை செய்த துணிகளை கொடுத்து விட்டு, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துச் செல்வார். 

கல் சட்டி: 



கச்சிட்டி என்று வழக்கு மொழியில் அறியப்படும் பொருள். இதில் வைக்கப் படும் வற்றல் குழம்பு தனி சுவை. அதைத் தவிர சாதாரண சாம்பார், அரைத்து விட்ட சாம்பார், கூட்டு போன்றவையும் சமைக்கலாம். கெமிகல் ரிஆக்ஷன் இல்லாததால் உணவு சுவை மாறாமல் இருக்கும். ஆனால் வாங்கியவுடன் உடனே அடுப்பில் ஏற்றி விட முடியாது,பழக்க வேண்டும். பழகிய கல் சட்டி பல வருடங்கள் இருக்கும். இப்படி மாமியார் பழக்கி பயன் படுத்தி வந்த கல் சட்டியை  மருமகள் உடைத்து விட்டால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உண்டு. இப்பொழுதும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. எப்பொழுது போய் கேட்டாலும், "கல் சட்டி எல்லாம் வரதே இல்லீங்க" என்றபடியே உள்ளே அடுக்கி வைத்திருப்பதிலிருந்து எடுத்து தருவார். 

இரும்பு தோசைக் கல்:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் நான் ஸ்டிக் தாவாவில் தான் தோசை வார்கின்றனர். எங்கள் வீட்டில் தோசைக் கல்லில் வார்க்கப்படும் தோசைக்குதான் வரவேற்பு. தோசைக் கல்லும் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு ஐடெம். நானும் என் சகோதரிகளும் ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் செல்லும் போதும் காவேரியில் குளிப்பது, ரெங்கநாதரை சேவிப்பது இவை தவறலாம், ஆனால் தோசைக் கல்லோ, இலுப்பை கரண்டியோ(தளிக்கும் கரண்டி), இரும்பு சட்டியோ வாங்குவது தவறாது. என் அண்ணா ஒரு முறை "நீங்கள் தோசை கல் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லையா"?. என்று கேட்டார். 

வெண்கலப் பானை:

ஒரு காலத்தில் இதில்தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தோம். குக்கர் என்ற ஒன்று வந்ததும் இதை பரணில் போட்டு விட்டோம். அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் செய்தால் அதன் ருசியே தனி..!

அம்மி:




முன்பெல்லாம் தேங்காய் துவையல் போன்றவற்றை இதில்தான் அரைத்துக் கொண்டிருந்தோம். அம்மியில் அரைப்பது என்பதெல்லாம் இந்த தலைமுறை அறியாத ஒன்று. 

இதையெல்லாம் பயன் படுத்துவதால் என்னை பழமைவாதி என்று கருதி விடாதீர்கள். 

Thursday, June 9, 2016

வராக நதிக்கரை ஓரம் - 2

வராக நதிக்கரை ஓரம் - 2

திருவக்கரையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கு பகல் உணவை முடித்துக் கொண்டு மாயவரத்திற்கு அருகி இருக்கும் பெரம்பூர் என்னும் சிற்றூரை நோக்கி சென்றோம். அங்குதான் எங்கள் சம்பந்தியின் குல தெய்வம் கோவில் உள்ளது. மாலையில் அங்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

நாங்கள் அங்கு சென்ற போது ஐந்தரை மணி இருக்கும். அர்ச்சகர் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். சிறிய கிராமமாக இருந்தாலும் கோவில் பெரிதாகத்தான் இருந்தது. இதுதான் நம்முடைய பாரம்பரிய சிறப்பு. எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அங்குள்ள பெரிய வீட்டை விட கோவில் பெரியதாக இருக்கும். எத்தனையோ அரசர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள், அவர்களின் அரண்மனைகள் நமக்கு காண கிடைப்பதில்லை, அவர்கள் கட்டிய கோவில்கள் இன்னும் அழியாமல் காலங்களை கடந்து நிற்கின்றன. அது மட்டுமல்ல தன்னிடம் உள்ள சிறப்பான பொருள்களை இறைவனுக்குத்தான் படைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன், மணி, இரத்தினங்களையும் அரசர்கள் கோவில்களில்  வீற்றிருக்கும் கடவுளுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். நாம்தான் அந்த கோவில்களை சரியாக பராமரிக்காமல் இருக்கிறோம். ஆனால் பெரம்பூர் வாசிகள் அப்படி இல்லை. கோவில் ஓரளவு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது.

கர்பக்ரஹத்தில் வள்ளி,தேவசேனா இரு புறமும் நின்றிருக்க முருகன் அந்த பெயருக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக மயில் மீது ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்க விட்டுக் கொண்டும் அமர்ந்த கோலத்தில் எழிலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். தனி சந்நிதியில் தேவானை குடி கொண்டிருப்பதால் முருகனுக்கு முன் யானை வாகனம். அபிஷேகம் முடிவதற்குள் இருட்டி விட்டதால் பிரகாரத்தை வலம் வர முடியவில்லை.

அங்கிருந்து மாயவரம் வந்து இரவு அங்கே தங்கினோம். மறுநாள் காலை மாயவரத்தின் புகழ் பெற்ற காளியாகுடி ஹோட்டலில் பொங்கலில் முந்திரி பருப்பை சேர்த்தார்களா? அல்லது முந்திரி பருப்பில் பொங்கலைச் சேர்த்தார்களா என்று நினைக்கும்படி முந்திரி நிறைந்த நெய் சொட்டும் பொங்கலோடு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம்.    

வைத்தீஸ்வரன் கோவில் என்று அறியப்படும் கோயிலின் பண்டைய பெயர் 'புள்ளிருக்கு வேளூர்' என்பதாகும். புள் என்றால் பறவை என்று பொருள். ஜடாயு(இராமாயணத்தில் வருமே அதே ஜடாயுதான்), ரிக் வேதம், மற்றும் நவக்ரகங்களில் ஒன்றான செவ்வாய்(வேள்) இந்த மூவரும் வழிபட்ட தலம். ஜடாயுவிற்கு ராமபிரான் இங்கு கோவில் பிரகாரத்தில் உள்ள ஜடாயு குண்டம் என்னும் இடத்தில்தான் இறுதிச் சடங்குகளை செய்ததாக நம்பப் படுகிறது. 

செவ்வாய் இங்கிருக்கும் சிவபெருமானை வழிபட்டு சக்திகள் பெற்றதல் செவ்வாய்க்கு தனி சன்னிதி உள்ளது. நவக்ரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகவும் கருதப் படுகிறது. ப்ராசீனமான சிவன் கோவில்களில் நவக்ரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லாமல் இருப்பது போல இங்கும் நவக்ரக சந்நிதி கிடையாது. ஆனால் இன்று இது ஒரு செவ்வாய் பரிகார ஷேத்திர மாகிவிட்டது. சுவாமி சன்னிதியை விட செவ்வாய் சந்நிதியில் கூட்டம் அதிகம்.

சுவாமி சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கத் திரு மேனிக்கு முன்னால் ஆடி(கண்ணாடி) போன்றஒன்று பித்தளையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும். அதே போன்ற ஒன்றை திருவண்ணாமலையிலும் காணலாம். காரணம், மிகவும் சக்தி பொருந்திய வடிவாதலல் அதன் அதிர்வுகளை நம்மால் முழுமையாக தாங்க முடியாது அந்த லிங்கத் திருமேனி எதிரே வைக்கப்பட்டிருக்கும் பித்தளை ஆடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இறைவன் வைதீஸ்வரனாக, மருத்துவனாக வரும் பொழுது இறைவி அவனுக்கு உதவியாக வரும் செவிலி போல கையில் தைலப் பாத்திரம் ஏந்தி தைலாம்பாளாக வருகிறாள். 

ஒரு முனிவருக்கு மகளாக அவதரித்த அம்பாளை முதியவராக வந்த சிவ பெருமான் தனக்கு திருமணம் செய்து தர கேட்டாராம். மகளோ சிறுமி இந்த முதியவருக்கு எப்படி திருமணம் செய்து தருவது என்று முனிவர் தயங்க, இறைவன், கவலைப் படாதீர்கள் உங்கள் மகளின் இரும்பைப் போன்ற உறுதியான மாங்கல்ய பாக்கியம் என் உயிரை காப்பாற்றும் என்று கூறி அவளுக்கு இரும்பால் தாலி அணிவித்தராம். அந்த இரும்புத் தாலியே இன்றும் அம்மனை அலங்கரிக்கிறது. முன்பெல்லாம் இந்த விவரங்களை அர்ச்சகர் கூறி அம்பாளின் இரும்புத் தாலியை தரிசனம் செய்யச் சொல்வார். இப்போது அதையெல்லாம் சொல்வதில்லை. ஒரு பக்கம் சரியாக பராமரிக்கப்படாத கோவில்கள், இன்னொரு பக்கம் பக்தர்கள் வந்தாலும் அங்கு அர்ச்சகர்களின் அலட்சியம்...!  ஹூம்! 

இங்குள்ள குளத்தில் வெல்லம், உப்பு, மிளகு இவைகளை கரைத்தால் நம் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது.  அவைகளை கரைப்பவர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ யாரையும் குளத்தில் கரைக்க விடுவதில்லை. குளக்கரையில் உள்ள பெட்டியில் போட்டு விடச் சொல்கிறார்கள். வெகு அழகான குளம்,




இந்தக் கோவிலில் உள்ள செல்ல முத்துக் குமரனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். கத்திரி வெய்யலின் பொழுது அவர் இங்கே இருக்க முடியாமல் கைலாசம் சென்று விடுவதால் அப்போது முருகன்(செல்ல முத்துக் குமரன்) சந்நிதியை பூட்டி விடுவார்கள் என்றார்கள். 

வைதீஸ்வரன் கோவிலிலிருந்து சிதம்பரம் சென்று இரத்தின சபாபதி அபிஷேகம், தீபாராதனை தரிசித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இரத்தின சபாபதி என்பது சிவப்பு கல்லினால் ஆன சிறிய நடராஜ மூர்த்தம். சிதம்பரத்தில் தினமும் காலை 10:30க்கு ஸ்படிகத்தால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பிறகு, இந்த இரத்தின சபாபதிக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனையை இரத்தின சபாபதியின் முன் பக்கம் காண்பித்து விட்டு பிறகு பின் பக்கமும் காட்டுவார்கள். ரத்தினம் வழியே ஒளி ஊடுருவி செல்லும் என்பதால், பார்க்க மிக அழகாக இருக்கும்.   

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரத்தை தான் குறிக்கும். அப்படிப் பட்ட சிறப்பான பாடல் பெற்ற தலமாகிய இதனுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியும் இருப்பது ஒரு சிறப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே நேராக சிவபெருமானையும் பக்கவாட்டில் கோவிந்தராஜ பெருமாளையும் தரிசனம் செய்ய முடியும். ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு இல்லையா?

சிதம்பரம் கோவிலைப் பற்றி நிறைய விஷயங்கள் facebook, whatsaap இவைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நான் புதிதாக எழுத எதுவுமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் திருவண்ணாமலையைப் போலவே சிதம்பரமும் ஒரு முறை அங்கு சென்றால் மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது.