கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 1, 2016

கார்பரேட் கோவில்கள்

கார்பரேட் கோவில்கள்

ஆகம முறைப் படி இயங்கும் கோவில்களில் நாலு கால பூஜை ஒரு நியமத்தோடு நடக்கும். கோவில் திறப்பதற்கும், மூடுவதற்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு. சமயபுரம் போல சில கோவில்களில் காலையில் நடை திறந்தால் இரவுதான் நடை அடைப்பார்கள். சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் திங்கள் மற்றும் வெள்ளிதான் தரிசனம். இப்படி ஒரு முறையோடு இருக்கும். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் கோவில்கள் ஒரு அலுவலகத்தைப் போல காலை 6:00 மணிக்கு திறந்து 10:30 அல்லது 11:00க்கு மூடி விடுகிறார்கள். அதே போல மாலை 4:30 அல்லது 5:00 க்கு திறந்து 8:30 க்கு நடை அடைத்து விடுகிறார்கள்.    

சென்ற ஞாயிரன்று எங்கள் தெருவில் இருக்கும் கோவிலில் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கலாம் என்று காலை ஆறு முப்பதிற்கு சென்றேன். கோவில் திறக்கவே இல்லை. வாசலை கூட்டிக் கொண்டிருந்தவர் முதல் நாள் பௌர்ணமியாக இருந்ததால் அன்று கோவில் திறக்க சற்று நேரம் ஆகும்  ஏழரை மணிக்குத்தான் திறப்பார்கள் என்றார். 

சரி கோவிலுக்கு என்று கிளம்பி விட்டோம், கே.கே.நகர் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு வரலாம் என்று அங்கு சென்றேன். 
அங்கும் கோவில் திறக்கப் படவில்லை. கோவில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் எத்தனை மணிக்கு கோவில் திறப்பார்கள் என்று கேட்டதற்கு," தெரியாதே" என்றார். சரிதான் என்று அதே வீதியின் கோடியில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றேன். 

அங்கு சண்டே கொண்டாட்டமெல்லாம் கிடையாது போலிருக்கிறது, எப்போதும் போல் கோவிலை திறந்து வழக்கப் படி பூஜைகளை துவங்கி விட்டனர். அமைதியான சூழலில் ஐயப்பன், பகவதி, விநாயகர் இவர்களோடு புதிதாக திறந்திருக்கும் கோசாலை கிருஷ்ணன் (திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குப் பிறகு சென்னை கே.கே. நகர் ஐயப்பன் கோவிலில்தான் கோசாலை கிருஷ்ணனுக்கு தனி சன்னிதி உள்ளது. மாடு மேய்க்கும் சிறுவனாக கையில் சாட்டையோடு காட்சி அளிக்கும் கிருஷ்ணன் கொள்ளை அழகு!) இவர்கள் எல்லோரையும் தரிசனம் செய்து கொண்டு மன நிறைவோடு திரும்பினேன். 

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்கு நிலவும் அமைதி என்னை ஆச்சர்யப் படுத்தும். இங்கு வரும் அதே மக்கள்தானே மற்ற கோவில்களுக்கும் வருகிறார்கள், இங்கு அமைதியை கடை பிடிக்கும் இவர்கள் நம் ஊர் கோவிகளில் ஏன் சள சளவென்று பேசுகிறார்கள்?

நான் மீண்டும் எங்கள் தெரு கோவிலுக்கு வந்தேன். இப்பொழுது கோவிலை திறந்து விட்டார்கள்(மணி 8:00) ஆனால் உள்ளே சுத்தம் செய்து கொண்டிருந்த பூசாரி, அபிஷேகம் ஆரம்பிக்க எட்டரை மணி ஆகும். என்றார். பாலை அவரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். எனக்கு அன்றைய கொடுப்பினை அவ்வளவுதான்!