கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 20, 2016

Morning Marina

MORNING MARINA


"ஞாயிரு காலை பீச்சுக்கு போகலாமா"? என்றேன், வெளியே செல்வதில் அதிக விருப்பம் கொண்ட என் கணவர் உடனே ஆமோதித்தார். காலை ஐந்து முப்பதுக்கு பீச்சில் இருந்தால் உதய சூரியனை, சீ சீ சூரிய உதயத்தை காணலாம். அப்படியே பிள்ளையார் சதுர்த்தி அன்று வாங்கிய பிள்ளையாரையும் கடலில் விசர்ஜனம் செய்து விடலாம். ஒ.கே. டன்! என்று முடிவு செய்தோம். எங்களோடு பெண், மாப்பிளையும் சேர்ந்து கொண்டார்கள். பிறகு என்ன, காலையில் பீச், பிறகு கற்பகாம்பாள் கோவில், பிறகு சரவண பவனில் சிற்றுண்டி.. என்று திட்டம் போட்டு கொண்டோம்.

எல்லோரையும் போலவே எனக்கும் கடலை பார்க்க பிடிக்கும். கடலோ,மலையோ அந்த பிரம்மாண்டத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றும். கடலை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஏதோ ஒன்றிர்க்கு கட்டுப்பட்டு கடல் தன் எல்லையை மீறாமல் இருக்கிறது. அது மீறினால்..? சீறினால்..? ஒரு முறை சீறியதை பார்த்தோமே.! 

திருச்சியில் வசித்த வரை விடுமுறையில் போர் அடிக்கும் பொழுதெல்லாம், "மெட்ராசில் இருந்தால் பீச்சுக்காவது போகலாம், இங்கு எதுவும் இல்லை" என்று கூறுவோம். எங்களுக்கெல்லாம் அப்போது  மெட்ராசில் இருக்கும் அத்தனை பேரும் தினசரி பீச்சுக்கு செல்வார்கள் என்றுஒரு நினைப்பு .  இதைத் தவிர லா.ச. ரா. அவர்கள் தன்னுடைய சிந்தாமணி என்னும் நூலில் இரவில் பீச்சில்  அமர்ந்து கொண்டு  க.நா.சு., புதுமை பித்தன்,ந.பிச்சமூர்த்தி போன்ற மணிக் கொடி இலக்கிய ஜாம்பவான்கள் நடத்திய இலக்கிய பரிவர்த்தனை பற்றியும், என் அபிமான எழுத்தாளராகிய இந்துமதி தன் நண்பர்களான மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களோடு தான் நடத்திய இலக்கிய விவாதங்களைப் பற்றியும் படித்த பிறகு என் பீச் ஆசை அளவு கடந்து போனது. ஆனால் இங்கு வந்த பிறகு நிதர்சனம் வேறு மாதிரி இருக்கிறது. 

சென்னையில் செட்டில் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன, இது வரை பதிமூன்று முறை பீச்சுக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகம்.ஆரம்பத்தில் சில முறை மாலையில் கடற்கரைக்குச் சென்றோம். அது கடற்கரையாக இல்லை. நடக்க முடியாமல் கடைகள், கடற்காற்றை அனுபவிக்கலாம்.. உணவகங்களிலிருந்து வரும் எண்ணை கமறல் வாசம் + மீன் பஜ்ஜி வாசத்தையும் சகித்துக் கொண்டு... குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால் கையேடு ஒரு குடை எடுத்துச் செல்வது நலம், அப்போதுதான் பொது இடம் என்று கூட தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்பவர்களை உங்கள் குழந்தைகள் கண்ணில் படாமல் மறைக்க முடியும். ஆகவே இப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்வதென்றால் காலையில்தான் செல்கிறோம். 

எங்களைப் போல நிறைய பேர்கள் கலையில் வருகிறார்கள் என்பது அங்கு போகும் பொழுதுதான் தெரிகிறது. வாக்கிங் செல்லவும், உடற் பயிற்சி செய்யவும், விளையாடவும், குடும்பத்தோடு பொழுதை செலவிடவும், கை கோர்த்து நின்றபடி சிரிக்கவும்(லாபிங் கிளப்), பறவைகளுக்கு உணவிடவும், மூலிகை சாறு பருகவும்  பலர் வருகிறார்கள். பஜ்ஜி கடை மட்டும் வந்து விடக் கூடாது.