கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 1, 2016

சாருவும் நானும்

சாருவும் நானும் 

கொஞ்ச நாட்களாக மிகவும் சீரியசாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாறுதலுக்கு, நான் எழுதி, 1992 நவம்பர் மாதம் மங்கையர் மலரில் வெளியான "கொடைக்கானல் போனோம்" என்னும் குறுநாவலை ஒரு சிறு தொடராக பதிகிறேன். 24 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்பதால் இப்போதைய கால கட்டத்திற்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கலாம். நான் தலைப்பை மட்டும் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி இருக்கிறேன். படித்து, சிரித்து, ரிலாக்ஸ் செய்யுங்கள். பின்னூட்டம் இட மறக்க வேண்டாம்.

ஒரு மனிதனுக்கு போதாத காலம் என்றால் அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாப்பிட்டு விட்டு  நிம்மதியாக தூங்கலாம் என்று படுத்தால் மீண்டும் எழுந்திருக்க முடியாத ஸ்ட்ரோக்காக, சிவனேன்று பிளாட்பாரத்தில் ஓரமாக போய் கொண்டிருக்கும் பொழுது பிரேக் இழந்து பிளாட்பாரத்தில் ஏறி மோதித்தள்ளும் அரசு பேருந்து வடிவத்தில், உயரும் என்று எதிர்பார்த்து போட்ட கம்பெனி ஷேர் சடாரென்று கீழே விழுந்து உங்களுக்கு பலமாக அடி படலாம். இப்படி ஏதாவது மோசமான நிகழ்வுகளால் வரலாம். ஆனால் எனக்கோ வெகு வினோதமாக என் சின்சியாரிட்டி வடிவில் வந்தது.

என்னுடைய உழைப்பு எங்கள் கம்பெனியின் விற்பனை டார்கெட்டை தாண்டியதில் கம்பெனிக்கு கணிசமான லாபம் கிடைத்ததோடு,இந்த ரீஜெனிலேயே அதிகம் விற்பனை செய்த டிவிஷன் என்ற சிறப்பும் சேர எங்கள் மானேஜர் வெகு குஷியானார்.

எல்லோருக்கும் முன்னால் அவர் என்னை ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்த பொழுதே பயந்தேன்,பயந்த படியேதான் நடந்தது. என்னை தனியாக அழைத்து,"இந்த சண்டே எங்க வீட்டுக்கு டின்னருக்கு வந்துடு, ஓ.கே.?

இல்லை, எதுக்..?"

என்ன எதுக்கு? சாப்பிடத்தான்.. நான் என் வொய்ப் கிட்ட சொல்லியாச்சு. அவ இதுக்காக தன்னோட ப்ரோக்ராமெல்லாம் கேன்சல் பண்ணியிருக்கா. ஸோ, யூ, ஆர் கமிங் வித் யுவர் வொய்ப்.." ஆணையிடுவது போல சொல்லிவிட்டு தீவிரமாக சிஸ்டத்தை பார்ப்பது போல பாவனை செய்தார். 

அவருக்கு அசிடிட்டி வந்தாலும் வந்தது, அதுதான் சாக்கென்று அவர் மனைவி புளி சேர்க்கக் கூடாது, காரம் அதிகம் கூடாது, கிழங்கு கூடாது, எண்ணெய் கூடாது என்று தினசரி பத்திய சமையலை சமைக்க, இவருக்கு நாக்கு அருவருத்து போகும் போதெல்லாம் எங்களில் யாரையாவது ஏதாவது சாக்கு சொல்லி சாப்பிட கூப்பிட்டு விடுவார். 

வேறு வழியில்லை, போய்த்தான் ஆகா வேண்டும். அங்கு போய் மானேஜர் யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டாலே அவர் மனைவி செய்யும் சாம்பார் சாதத்தையோ, வாங்கி பாத்தையோ, பிஸிபேலாபாத்தையோ உருளைக் கிழங்கு ரோஸ்டோடு சாப்பிட வேண்டும். அவர் கை வசம் இருக்கும், எத்தனையோ முறை கேட்டு அலுத்த, இரண்டு ஜோக்குகளுக்கு விலா நோக சிரிக்க வேண்டும். அவர் குழந்தைகளின் அதிகப் பிரசங்கித்தனங்களை ஆஹா! என்ன அறிவு கூர்மை என்று வியக்க வேண்டும். 

இதையெல்லாம் விட அவை மனைவி புதிதாக வாங்கியுள்ள நகையையோ, புடவையையோ, க்ளாஸ்வேரையோ, துடைப்பத்தையோ பார்த்து விட்டு என் மனைவி சாரு என்னோடு போடப்போகும் சண்டைக்கும், அதன்பிறகு சமாதான நடவடிக்கைக்காக செலவிட வேண்டியதற்கும் ஆயத்தமாக வேண்டுமே.

மாலை காபியை குடித்துக் கொண்டே சாருவிடம் விஷயத்தை சொன்னேன்.

அப்படியா? அப்போ நான் அந்த பின்னி சில்க்கை எடுத்துக்கலாம்.."
என்று சாரு சொன்னதும், நில அதிர்ச்சிக்கு உண்டானதைப் போல என்றெல்லாம் சொன்னால் அது பொய். சாரு அவ்வப்பொழுது வீசும் குண்டுகளை சமாளித்து, சமாளித்து நான் ஷாக் புரூப் ஆகவே மாறி விட்டேன். ஹைட்ரஜன் குண்டாவது, நைட்ரஜன் குண்டாவது? ஒன்றும் இனிமேல் என்னை எதுவும் செய்ய முடியாது.

"என் ப்ரெண்ட் மீனா மத்தியானம் வந்திருந்தா, அவளுக்காக இந்த புடவையை வாங்கினாளாம், ஆனா அவ ஹஸ்பேண்ட் அவளுக்கு இந்த கலர் சூட் ஆகாதுன்னு சொன்னாராம். நான் கலராக இருப்பதால் எனக்கு நன்னா இருக்கும்னு மீனா சொன்னா.."

இப்போது இதை நான் ஆமோதித்தாலும் கஷ்டம், ஆமோதிக்காவிட்டாலும் கஷ்டம். ரெண்டும் கெட்டானாக,"ம்..ம் .. புடவை நன்னாத்தான் இருக்கு ஆனா இப்போ எ ..து ..க் ..க்..கு?

" ஒங்க மேனேஜர் வீட்டில சாப்பிட கூப்பிட்டிருக்காங்க,பளிச்சுனு ட்ரெஸ் பண்ணின்டு போக வேண்டாமா? தவிர போன தடவை உங்க மேனஜர் வொய்ப் ஒரு பின்னி சில்க் கட்டிண்டிருந்தா, என்ன விலைனு கேட்டதுக்கு இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லீனு திமிரா பதில் சொன்னா. அவளாலதான் காஸ்ட்லீ புடவை கட்டிக்க முடியுமா? என்னாலேயும் முடியும்னு காட்டணும்.."

"காஸ்ட்லீ புடவை கட்டிக்கணும்னா ஒங்கிட்ட எவ்ளோ பட்டுப் புடவை இருக்கு, அதுல ஒண்ணு கட்டிக்கோயேன்.."

"ம்..ம் ..நீங்க பஞ்சகச்சம் கட்டிண்டு வாங்கோ, நான் பட்டுப் புடவை கட்டிக்கறேன்.."

"அப்போ எதுக்கு பட்டுப் புடவை வாங்கணும்.?"

"ரொம்ப அழகா இருக்கே.. கோவில்,குளம், நாள், கிழமை, கல்யாணம், கார்த்தி இதுக்கெல்லாம் பட்டுப் புடவை வேண்டாமா?"

நான் வாயடைத்துக் கொண்டேன். 'போன மாதம்  ஒரு ஷிஃபான் வாங்கினாயே என்று கேட்கவில்லை. சாரு வழக்கம்போல என் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டாள்"

"மீனா ரொம்ப நல்ல மாதிரி, இப்போ பணத்துக்கு அவசரமில்லை. மெதுவா மாசக் கடைசில கொடுனு சொல்லிட்டா."

இருபதாம் தேதி என்பது மாத முதல் என்ற எண்ணம் சாருவுக்கு. எப்படியோ இன்னும் பத்து நாள் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். 

"இன்னும் கிளம்பலையா ? பேப்பரெல்லாம் அப்பறம் படிச்சுக்கலாம், சீக்கிரம் கிளம்புங்கோ"

"எங்க"? 

"எங்கேயா? சரிதான், இன்னிக்கு ப்ளௌஸ் பீஸ் வாங்கி தைக்க குடுத்தால்தான், அவன் சனிக்கிழமை சாயந்திரம் குடுப்பான்.."

சாருவிடம் ஏற்கனவே ரெண்டு கருப்பு பிளவுஸ்கள் இருப்பது என் நினைவுக்கு வந்தாலும் அதை வெளியே சொல்லவில்லை. சொல்லி என்ன பிரயோஜனம்? 

"ஐயோ! உங்களுக்கு கலரைப் பத்தி ஏதாவது தெரியுமா? அது ப்ளாக்கிஷ் க்ரீன், இது க்ரீனிஷ் பிளாக்" என்பாள். பேசாமல் கிளம்பினேன்.

"ஏன் இப்படி மூஞ்சியை உம்முனு வெச்சிண்டு வரேள்? எப்படியும் என் னோட பர்த்டே அடுத்த மாதம் வரும், அதுக்கு வேற புடவை வாங்க வேண்டாம். நான் இதையே கட்டிக்கிறேன்"

இப்போது இப்படித்தான் சொல்லுவாள். ஆனால் பர்த்டேக்கு நாலு நாள் முன்னால் ஒரு சாந்தா வந்து அவள் வாங்கி கொண்ட புடவை டிசைன் அவள் ஹஸ்பேண்டுக்கு பிடிக்கலைனு இவளிடம் குடுத்துட்டு போவாளே !?  

- தொடரும்     

11 comments:

  1. புன்னகையுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. ஹாஹா... நல்லாவே அவதிப்படுகிறார் போலும்...

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமானப் பல்லவி
    ஏற்கெனவே படிக்கவில்லை என்பதால்
    கூடுதல் சுவாரஸ்யம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. படிச்ச ஞாபகம் வரலை. அருமையா எழுதி இருக்கீங்க! அந்த பின்னி சில்க் இருக்கே அதைப் பத்தி வந்திருப்பதால் அந்தக் காலத்துக் கதைனு எளிதில் கண்டு பிடிச்சுடலாம். ஹிஹிஹி, ஒரு காலத்தில் நானும் அந்த பின்னி சில்க்குக்கு ஆசைப்பட்டிருக்கேன். சொல்றாப்போல் அது ரொம்பவே விலை அதிகம் தான். சென்னையில் வெங்கடேஷ் வஸ்திராலயாவில் (ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூருக்குக் கீழ்த்தளத்தில் ஹைகோர்ட்டுக்கு எதிரே இருந்தது) அதை விற்பனை செய்வாங்க. அந்தக் கால தீபாவளி மலரில் மற்றும் வாராந்தரிகளில் இந்த பின்னி சில்க் புடைவை குறித்த விளம்பரம் ஒரு கதையைப் போல் இரு பக்கங்களில் வரும். அதே போல் ராசி சில்க்கிற்கும். அந்த நினைவுகள் எல்லாம் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! பின்னி சில்க் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள். எனக்கு அது கொஞ்சம் விலை உயர்ந்த ரகம் என்பது மட்டுமே நினைவில் இருக்கிறது.

      Delete
  5. எங்களால் வாங்கலாம் என்னும் சமயம் அந்த பின்னி சில்கே விற்பனையில் இல்லை. பின்னி கம்பெனியே இழுத்து மூடியாச்சு! :)

    ReplyDelete
  6. அந்தக்கால சினிமா நடிகைகளால் மிகவும் விரும்பிக் கட்டப்பட்ட புடைவை இதுவாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்போது தொலைக்காட்சியில் ஒளி பரப்பான மஹாபாரதம் சீரியலில் திரௌபதி துகில் உறியப்படும் கட்சியில் கட்டிக்கொண்டிருந்தது பின்னி சில்க்தானோ? அந்த மஞ்சள் நிறப் புடவை திரௌபதி சாரி என்று மிகவும் பிரபலமாக இருந்தது.

      Delete
  7. முதலில் வாழ்த்துகள்!!! தங்கள் குறுநாவல் பத்திரிகையில் வெளிவந்தமைக்கு.

    அஹ்ஹாஹ்ஹ ரகம்!! ரசித்து வாசிக்கிறோம்...அருமையாக எழுதுகிறீர்கள்!! வாழ்த்துகள்!

    ReplyDelete