கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, October 10, 2015

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம்

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம் 


அகல்யா திரௌபதி குந்தி மண்டோதரி தாரா 
ததா பஞ்சகன்யா ஸமரேன்  நித்யம் 
மஹா பாதக நாசனம்!

தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. அகலிகை, திரௌபதி, குந்தி(குந்திக்கு பதிலாக சீதா என்றும் சிலர் கூறுவார்கள்),மண்டோதரி, தாரா என்னும் ஐந்து பெண்களை தினமும் நினைக்க அல்லது ஸ்மரிக்க மஹா பாதகங்களும் நசித்துப் போகும் என்பது இதன் மேலெழுந்த பொருள். உட்கிடை என்ன என்று சற்று ஆராயலாமா?

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் ஐந்து பெண்களும் பெரிய தபச்வினிகள் கிடையாது. பெரும்பாலும் சோகத்தில் தன் வாழ் நாளை கழித்தவர்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கற்பு நிலையில் கூட விஞ்சி நிற்பவர்கள் இல்லை. 




இந்திரனால் வஞ்சகமாக தன கற்பை இழந்தவள் அகலிகை,அதனால் கல்லாய் சமைந்தவள்.  கல்லாய் சமைவது என்றால் நாம் எல்லோரும் நினைப்பது போல அவள் வெறும் பாறையாகி விடவில்லை.கல் போல சமைந்தாள். அதாவது பசிக்கும் ஆனால் சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும் நீர் அருந்த முடியாது. இந்திரன் அவளை ஆட்கொண்ட பொழுது அது தன் கணவன் இல்லை வேறு ஒருவன் என்று அவளுக்கு தெரிகிறது இருந்தாலும் உடல் இச்சையை கட்டுப் படுத்த முடியாமல் கல் போல் கிடந்ததால், "கல் போல கிட" என்று கௌதமர் இட்ட  மிகக் கடுமையான சாபம்.  

திரௌபதி இந்த காலத்தில் கூட ஒப்பு கொள்ள முடியாதபடி ஒரே சமயத்தில் ஐந்து கணவர்களோடு வாழ்ந்தவள்.அவள் அனுபவிக்காத சோகங்களா? அரசியல் காரணங்களுக்காக ஐந்து ஆண்களை மணக்க வேண்டிய நிர்பந்தம். மாவீரர் களாகிய ஐந்து கணவர்கள் இருந்த போதும் சபையில் துகிலுரிக்கப் பட்டாள். 


 

குந்தியோ திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியோடு வாழ் நாளை கழித்தவள்.  குந்திக்கு பதிலாக சீதை என்று கொண்டாலும் ஜனக ராஜன் மகள், தசரதன் மருமகள், பேராண்மை கொண்ட ராமனின் மனைவி என்று இத்தனை பெருமைகள் இருந்தாலும் ராவணனால் சிறையெடுக்கப் பட்டாள். அதற்குப் பிறகும் மிகக் கடுமையான சுடு சொற்களை ராமன் பேசி அவள் தீக்குளித்து
 தான் பரிசுத்தமானவள் என்று நிரூபித்த பிறகே அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் ராமன். அதன் பிறகும் நிறை மாத கர்பிணி என்ற இரக்கம் இல்லாமல் காட்டிற்கு விரட்டப் படுகிறாள்.  சுக்ரீவன் மனைவியாகிய தாரா மைத்துனனாகிய வாலியால் கவர்ந்து செல்லப் பட்டவள். ஒவ்வொரு பெண்ணிற்கும் இப்படி ஒரு சோகமான பின்னணி.  அவர்களால் எப்படி நம் மஹா பாதகத்தை நசிக்கச் செய்ய முடியும்? அப்போது இந்த ஸ்லோகம் பொய் சொல்லுகிறதா? இல்லை, இந்தப் பெண்களின் வாழ்கையை சிந்தியுங்கள். ஒவ்வொரு பெண்ணின் சோகத்திற்கும் ஏதோ ஒரு ஆண், அவனுடைய பேராசை, கூடா  ஒழுக்கம் இவைகளே காரணமாக இருந்திருக்கின்றன. இதை சிந்திக்கும் எந்த ஆணும் பெண்ணுக்கு தீங்கிழைக்க விரும்புவானா? 

மண்டோதரியின் கணவனாகிய ராவணன் பிறன் மனை விழைதல் என்னும் பெரும் பாவத்தை செய்ததால் அவள் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவள் தன் புதல்வர்களை இழக்கிறாள், கணவனை இழந்து தானும் மாண்டு போகிறாள்.

மே ற்கண்ட  ஸ்லோகத்தில் இந்த பெண்களை வணங்குகிறேன்
என்றோ, துதிக்கிறேன் என்றோ குறிப்பிடப் படவில்லை. நினையுங்கள், மஹா பாதகம் நசித்துப் போகும் என்றுதான் உள்ளது. அந்த பெண்களை நினைப்போம், அவர்கள் பட்ட துயரங்களை நினைத்துப் பார்ப்போம் அதற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்போம், பாவம் செய்ய மனம் வராது, அதாவது பாவம் நசித்துப் போகும்.  

Thursday, October 8, 2015

மாயா - விமர்சனம்

மாயா - விமர்சனம் 



நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா, அதற்குள் ஒரு சினிமா, ஒரு கட்டத்தில் நிஜ சினிமா மாந்தர்கள் கதை சினிமா பாத்திரங்களாக மாறி விடும் அமானுஷ்யம்தான் கதையின் ஜீவன். வண்ணத்தில் வருவது நிஜ சினிமா,கருப்பு வெள்ளையில் வருவது சினிமாவுக்குள் வரும் சினிமா என்பது நமக்கு புரியும் பொழுது இடை வேளை வந்து விடுகிறது. நிஜ சினிமா கதா நாயகி நயன்தாரா கதை சினிமாவுக்குள் எப்படி  புகுந்து புறப்பட்டார் என்பதுதான் பின் பாதி.

கணவனைப் பிரிந்து கைக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் அடைக் கலமாகி, கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கும், சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்க முயன்று கொண்டிருக்கும் நயன்தாரா கதை ஒன்று, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் ஆரிக்கு 'மாயாவனம்' என்னும் தொடருக்கு படம் வரைய தொடங்கியவுடன் நேரும் விபரீதங்கள் ஒருகதை, அதில் கிளை கதையாக அவருடைய பாஸின் மனைவிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு,  இருள் என்று ஒரு திகில் படம் எடுத்து விட்டு அது போனி ஆகாததால், இந்த படத்தை தனியாக இரவுக் காட்சி பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வெகுமதி என்று அறிவிக்கும் இயக்குனர் கதை ஒன்று. (உஸ்ஸ்! அப்பாடா?) இப்படி தனித் தனியாக இயங்கும் கதைகளை எப்படியோ ஒன்று சேர்த்து விடுகிறார் இயக்குனர்.  ஒளிப் பதிவும், இசையும் அவருக்கு நல்ல துணை! 

நயன்தாராவை பொறுத்த வரை படம் முழுவதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்து விட்டு, கொஞ்சம் பயந்தால் போதும். அதை சரியாக செய்திருக்கிறார். அவர் தோழியாக வரும் லக்ஷ்மி பிரியா நன்றாக செய்திருக்கிறார்.  மற்ற நடிகர்கள் எல்லோருமே கச்சிதம்! மர்மங்களை யூகிக்க முடிவது ஒரு குறை. படத்தை பார்த்து விட்டு பயப் படுகிறோமோ இல்லையோ குழம்புவது நிச்சயம். குழப்பம் தீர்ந்தால் ரசிக்கலாம்.