கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 8, 2015

மாயா - விமர்சனம்

மாயா - விமர்சனம் 



நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா, அதற்குள் ஒரு சினிமா, ஒரு கட்டத்தில் நிஜ சினிமா மாந்தர்கள் கதை சினிமா பாத்திரங்களாக மாறி விடும் அமானுஷ்யம்தான் கதையின் ஜீவன். வண்ணத்தில் வருவது நிஜ சினிமா,கருப்பு வெள்ளையில் வருவது சினிமாவுக்குள் வரும் சினிமா என்பது நமக்கு புரியும் பொழுது இடை வேளை வந்து விடுகிறது. நிஜ சினிமா கதா நாயகி நயன்தாரா கதை சினிமாவுக்குள் எப்படி  புகுந்து புறப்பட்டார் என்பதுதான் பின் பாதி.

கணவனைப் பிரிந்து கைக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் அடைக் கலமாகி, கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கும், சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்க முயன்று கொண்டிருக்கும் நயன்தாரா கதை ஒன்று, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் ஆரிக்கு 'மாயாவனம்' என்னும் தொடருக்கு படம் வரைய தொடங்கியவுடன் நேரும் விபரீதங்கள் ஒருகதை, அதில் கிளை கதையாக அவருடைய பாஸின் மனைவிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு,  இருள் என்று ஒரு திகில் படம் எடுத்து விட்டு அது போனி ஆகாததால், இந்த படத்தை தனியாக இரவுக் காட்சி பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வெகுமதி என்று அறிவிக்கும் இயக்குனர் கதை ஒன்று. (உஸ்ஸ்! அப்பாடா?) இப்படி தனித் தனியாக இயங்கும் கதைகளை எப்படியோ ஒன்று சேர்த்து விடுகிறார் இயக்குனர்.  ஒளிப் பதிவும், இசையும் அவருக்கு நல்ல துணை! 

நயன்தாராவை பொறுத்த வரை படம் முழுவதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்து விட்டு, கொஞ்சம் பயந்தால் போதும். அதை சரியாக செய்திருக்கிறார். அவர் தோழியாக வரும் லக்ஷ்மி பிரியா நன்றாக செய்திருக்கிறார்.  மற்ற நடிகர்கள் எல்லோருமே கச்சிதம்! மர்மங்களை யூகிக்க முடிவது ஒரு குறை. படத்தை பார்த்து விட்டு பயப் படுகிறோமோ இல்லையோ குழம்புவது நிச்சயம். குழப்பம் தீர்ந்தால் ரசிக்கலாம்.   

No comments:

Post a Comment