கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 17, 2014

காவியத் தலைவன் (Review)

காவியத்  தலைவன் 





இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் நம் நாட்டில் கொடி கட்டி பறந்த பாய்ஸ் கம்பெனியை நிலை களமாக வைத்து புனையப்பட்டிருக்கும் கதை.
 
நாசர் நடத்தும் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயது முதலே சேர்ந்து பயிற்சி பெரும் காளியப்பன்(சித்தார்த்),கோமதி நாயகம்(பிரித்விராஜ்) இருவருக்கும் இடையே நிலவும் நட்பு ,பொறாமை , பகை இவைகளை சுற்றியே படம் நகர்கிறது. 

ப்ரித்விராஜின் பாத்திரப் படைப்பில் இருக்கும் தெளிவு சித்தார்த்தின் பாத்திரப் படைப்பில் இல்லாதது ஒரு குறை. ராஜபார்ட் சித்தார்த்தா? குருவி தலையில் பனங்காய்! அதற்கேற்ற உடல் அமைப்பும் அவருக்கு  இல்லை. குரலிலும், உடல் மொழியிலும் அவரையும் அறியாமல் கான்வென்ட் வந்து விடுகிறது.  மைல்ஸ் டு கோ.

பிரித்விராஜ் பின்னி எடுக்கிறார். ஆரம்பத்தில் பொன் வண்ணனின் நடிப்பை மறைந்திருந்து பார்த்து தானும் ஒரு நாள் ராஜ பார்ட் வேஷம் கட்ட வேண்டும் என்று ஆசைப் படுவதாகட்டும், ராஜ பார்ட் வேஷத்தை ஆசானுக்கு முன் நடித்து காட்டிவிட்டு தனக்குத் தான் அந்த வேடம் கிட்டப் போகிறது என்று எதிர்பார்போடு நிற்பதாகட்டும், அது கிட்டதா போது குமைவதாகட்டும், பின்னால் கம்பெனி முதலாளியாக தானே மாருவதாகட்டும், ஒரு இடத்திலும் சோடை போகவில்லை. சித்தார்த் மீது அவருக்கு வரும் பொறாமை கூட தனக்கு கிட்ட வேண்டிய அங்கீகாரம் கிட்டாததால் அவர் அடையும் தாபம் போல தோன்றுவது இயக்குனரின் திறமையா? அல்லது நடிகரின் திறமையா? அந்த தமிழாளத்தை மன்னித்து விடலாம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பொன் வண்ணனும், தம்பி ராமையாவும்   மன்சூர் அலிகானும் கச்சிதம். முத்திரை நடிப்பு நாசருடையது! திருப்புகழை மனப்பாடம் செய்ய சொல்லும் காட்சியும், படத்தின் முன் பாதியில் ப்ரித்விராஜை ஒருமையில் அழைக்கும் தம்பி ராமையா,பின் பாதியில் முதலாளி என்று விளிப்பதும் அந்தக்  கால நடை முறையை எடுத்துக் காட்டுகிறது. அரங்க அமைப்பும் உடைகளும் கூட நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. பாடல்கள் இனிமை என்றாலும் 1940களின் இசை போல இல்லை. 

ஜமீன்தாரின் மகளாக வந்து, சித்தார்த்தை காதலித்து இறந்து போகும் அனைகா மனதில் ஒட்டவே இல்லை. ராணி வேஷம் போட்டுக் கொண்ட பள்ளிக் கூட மாணவி போல இருக்கிறார். வேதிகா பரவாயில்லை. 

ரத்தம் பீரிடும் சண்டை இல்லை, அடி உதை,இரட்டை அர்த்த காமெடி இல்லை. வித்தியாசமான கதை களத்தில், போரடிக்காமல் ஒரு படத்தை எடுத்திருக்கும் வசந்த பாலனை உற்சாகப்படுத்த இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்கலாம். பார்க்க வேண்டும்