கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 19, 2014

அரிமா நம்பி! - review

அரிமா நம்பி!


ஒரு பப்பில்(PUB) முதல் நாள் இரவு அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபுவும், பிரியா ஆனந்தும் உடனே காதலில் விழுந்து  மறுநாளும் ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்து, "பார் மூடும் நேரமாகி விட்டது சார்" என்று சர்வர் கூறும் வரை குடித்து, குடியைத் தொடர(அடடா!) ப்ரியாவின் வீட்டிற்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர் கடத்தப் பட, அதன் பின்னணி என்ன? அவரை அரிமா நம்பி மீட்டாரா? என்பதுதான் கதை. அரிமா என்றால் சிங்கம், நம்பி என்பது இளைஞன் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்.           

A.R. முருகதாசின் சீடர் ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் முதல் படம். குருவிற்கு ஏற்ற சீடராக படத்தை விறுவிறுவென்று கொண்டு சென்றிருக்கிறார்! படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தீயாக பற்றிக் கொள்ளும் பரபரப்பு இறுதி வரை நீடித்திருப்பது ஒரு சிறப்பு. ட்ரம்ஸ் சிவமணி இசைஅமைப்பாளராக அறிமுகம். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

பொதுவாக இந்த மாதிரி   படங்களில் கதா நாயகிக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இருக்காது, இதில் கதா நாயகனுக்கும் இல்லை. சமீபத்திய ந ம்பிக்கை நட்சத்திரமான விக்ரம் பிரபு ஓடுகிறார், துரத்துகிறார், சண்டை போடுகிறார். கொஞ்சம் காதலிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

அதென்ன பிரியா ஆனந்த் எல்லா படங்களிலும் ஹீரோவோடு சேர்ந்து   மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறார்? நவீன பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா என்ன? 

சின்ன  ரோலில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். 

பிரியா ஆனந்த் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் சர்வேயலென்ஸ் காமிராவில் பிரியா ஆனந்தும் விக்ரம் பிரபுவும் பதிவாகாமல் போனது எப்படி? ஒரு பெரிய சேனலின் சி.ஈ.வோ.வின் வீடு இப்படியா கை வைத்ததும் திறந்து கொள்ள கூடியதாய் காவல் எதுவும் இல்லாமல் அனாமத்தாய் இருக்கும்? அதன் வாசலில் பார்க் செய்யப் பட்டிருக்கும் விக்ரம் பிரபுவின் பைக்  வில்லன் கையாட்களின் கண்களில் படாதது எப்படி? எந்த சென்ட்ரல் மினிஸ்டர் ஐ.ஜி. ஆபீசில் உட்கார்ந்து வில்லனைத் தேடுவார்? அங்கு  உண்மைக்கு வெகு அருகில் வந்து விடும் இளம் போலிஸ் அதிகாரியை வெகு அலட்சியமாக கொலை செய்கிறாரே அது அவ்வளவுதானா? 
தனக்கு எல்லாமே தன தந்தைதான் எனும் கதாநாயகி அவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறார் என்று அறியும் போது ஏதோ நாலு வீடு  இருக்கும் அங்கிள் இறந்து போனது போல ஏனோ தானோ என்றுதான் கண்ணீர் வடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளை மறக்கடிக்கிறது படத்தின் விறுவிறுப்பு!