கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 18, 2014

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?



வழக்கறிஞர் சுமதியின் மேடை பேச்சை மிகவும் விரும்பி ரசிப்பவள் நான். பட்டி மன்ற மேடை களில் தன் தரப்பு வாதத்திற்கான பாயிண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி  நச்சென்று அவர் முடிக்கும் அழகை வியப்பேன். ஆனால் கடந்த ஞாயிறன்று(15.6.2014) சன் டி.வி.யில் ஹூஸ்டனில் நடை பெற்ற 'கல்யாண மாலை' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமான பட்டி மன்றத்தில் அவர் பேசியதை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்! 'திருமண வாழ்க்கை சுவையா? சுமையா'?  என்பதில் சுமையே என்னும் தலைப்பில் பேச வந்த அவர் ஸ்டேஜ் டேகோரம்  என்பதை பற்றி கவலைப் படாமல் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடியில்  சண்டை போடுபவர் ரேஞ்சுக்கு பேசியது கொஞ்சம்  கூட ரசிக்கும் படியாக இல்லை.  

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணிடம்  அவள் மாமியார் குளித்து விட்டு சமையல் அறைக்குள் வா என்று கூறுவது சுமையாம். "குளிக்காம வந்தா டிஸ்மிஸ் பண்ணிடுவியா?" என்பது சுமதியின் கேள்வி. இப்பொழுது எந்த மாமியார் அப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.அப்படியே கூறினாலும் என்ன தவறு? ஆசாரம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது ஒரு குடும்பம் முழுவதற்கும் உணவு தயாரிக்க வேண்டிய இடத்தில் சுகாதாரத்தை கடை பிடிக்க சொல்வது தவறா? 

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அவள் கணவன், "நீ என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாயோ இல்லையோ என் அப்பா அம்மாவை அட்ஜெஸ்ட்  செய்து கொள்" என்று கூறுவது அவருக்கு எரிகிறதாம். அதாவது ஒரு நல்ல பையன் தனக்காக கஷ்டப்பட்ட தன் பெற்றோர்களை அனுசரித்து தன் மனைவி நடந்து கொண்டால் போதும்,அதற்காக இவன் அவளை அனுசரித்து போக தயாராக இருக்கிறான். அது கூட இவருக்கு எரியும் என்றால் வேறு எது இவருக்கு குளிர்ச்சி ஊட்டும் என்று தெரியவில்லை. மேலும் நடுவர் பாக்யராஜை தனிப்பட்ட முறையில் தாக்கியதும் பட்டிமன்ற நாகரீகமாக இல்லை.

என்னதான் வாழ்க்கை முறை மாறி இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் வேதனைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இன்றும் கூட இருக்கின்றன. என்றாலும் பட்டிமன்ற மேடையை பெண்ணியம் பேசும் மேடையாக மாற்றுவது சரியில்லை என்று சுமதிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். 

ஒரு வேளை இவை எல்லாமே pre fixingஆக  கூட இருக்கலாம் (இப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஷோக்கள் அப்படித்தானே நடத்தப் படுகின்றன)  இருந்தாலும் உலகம் முழுவதும் ஒளி பரப்பக் கூடிய ஒரு நிகழிச்சியின் தரம் தாழ்ந்து போகலாமா?