கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 9, 2014

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II


இந்த முறை நாங்கள் சென்ற கோவில்கள் எல்லாம் பிரபலமானவை என்பதால் அவைகளைப் பற்றி பெரும்பாலனோர் அறிந்திருப்பீர்கள். எனவே அவைகளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

திருவிடைமருதூர்:

பெரும்பாலான சோழ  தேச கோவில்களையும் போல இதுவும் மற்றொரு பிரும்மாண்டமான கோவில்.  மிகப் பெரிய சுதை நந்தியும், கர்பக்ரஹத்தில் பெரிய லிங்கமும் பிரமிப்பூட்டுகின்றன. 'மூன்று முழமும் ஒரு  சுற்று,முப்பது முழமும் ஒரு சுற்று' என்னும் சொலவடை உருவாக காரணமான மூன்று கோவில்களுள் இதுவும் ஒன்று. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர்  , திருவிடைமருதூர் மகாலிங்கம்,திருச்சி தாயுமானவர் கோவிலில் இருக்கும்  மாத்ருபூதேஸ்வரர் ஆகிய மூன்றுமே பெரிய லிங்கத் திரு மேனிகள். எனவே இவற்றிற்கு சாற்ற வேண்டிய வஸ்திரம் மூன்று முழமாக இருந்தாலும் சரி முப்பது முழமாக இருந்தாலும் சரி ஒரு சுற்றுதான் வரும் என்பதால் ஏற்பட்ட வசனம்.

கோவிலில் அம்மன் சந்நிதி தவிர மூகாம்பிகைக்கென்று ஒரு தனி சந்நிதி உள்ளது. அங்கு ஸ்ரீ சக்ர மேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தியை தாண்டிச் செல்லும் பொழுது பிரதான வாயிலுக்கு முன் இடது புறம் வரகுண பாண்டியனை பிடிப்பதற்காக காத்திருக்கும் ப்ரஹ்ம்மஹத்தி தம்மை பீடித்து விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. அம்மன் சந்நிதியில் தரிசனம் தரிசனம் முடித்துக் கொண்டு அப்படியே வெளியே வந்து விடுகிறார்கள்.

மருத மரத்தை(அர்ஜுன மரம்) தல வ்ருக்ஷமாக கொண்ட மூன்று முக்கிய தலங்களுள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலம்  எனப்படும்  மல்லிகார்ஜுன ஷேத்ரம் தலை மருதம் என்றும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருபுடை மருதூர் கடை மருதம் என்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதால் இது இடை மருதம் என்றும் அழைக்கப் படுகிறது. சுவாதி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது.

சாதாரணமாக சிவன்  கோவில்களில் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர்,சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். இந்த கோவிலுக்கோ திருவலஞ்சுழி(விநாயகர்), சுவாமி மலை(சுப்பிரமணியர்), ஆலங்குடி(தட்சிணாமூர்த்தி), பட்டீஸ்வரம் (துர்க்கை) சீர்காழி சட்டநாதர் கோவில் (பைரவர்), சிதம்பரம்(நடராஜர்) போன்ற கோவில்களே பரிவார தேவதைகளாக விளங்குவது ஒரு சிறப்பு.

பட்டீஸ்வரம்:

காமதேனுவின் மகள் பட்டியல் வணங்கப்பட்ட தேனுபுரிஸ்வரர் என்னும் சிவன் கோவிலே பிரதானமாக இருந்தாலும், பட்டீஸ்வரம் என்றாலே இங்குள்ள துர்க்கை அம்மனே பெரும்பாலநோர்க்கு நினைவில் வரும். அத்தனை சக்தி வாய்ந்த அம்மன். ராஜராஜசோழனின் மந்திரியாக இருந்த அன்பில் அநிருத்த பிரம்ம ராயரின் இஷ்ட தெய்வம். சாந்தம் தவழும் அழகிய வடிவம். இரண்டு வருடங்கள் முன்பு வரை கூட அம்மனுக்கு மடிசார் புடைவைதான் அணிவித்து வந்தார்கள். இப்போதோ சாதாரண மாம்பழ கட்டு. காலம் போகிற போக்கில் சூடிதார் அணிவிக்காமல் இருந்தால் சரி!

இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியிலிருந்து பார்த்தால் நேராக வீதி கண்ணில் படுகிறது. நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று நகர்ந்து உள்ளது. ஒரு கோடை காலத்தில் பக்தர்கள் புடை சூழ திருஞான சம்பந்தர் பஜனை செய்தபடி வரும் அழகை காண விரும்பிய சிவா பெருமான் நந்தியை சற்று நகர்ந்து இருக்கும்படி கட்டளை இட்டாராம். அதன்படி அவரும் நகர்ந்து இருக்கிறார்.

திரு நாகேஸ்வரம்:

ராகுவிற்கான பரிகார தலம் இது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மூன்று யுகங்களுக்கான(த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்) மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.  தனி கோவிலில் குடி கொண்டிருக்கும் கிரி குஜாம்பாள் சந்நிதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ச சாமர ரமா வாணி சவ்ய தக்ஷின சேவிதாயை என்னும் நாமத்திர்கேற்ப சரஸ்வதியும்,லக்ஷ்மியும் அம்மனுக்கு இரு புறங்களிலும் எழுந்தருளி இருப்பதை தரிசிக்கலாம். அம்மனுக்கு புனுகு சட்டம் சார்த்தப் பட்டிருக்கிறது, அபிஷேகம் கிடையாது.



திருபுவனம் கோவில் நன்றாக பராமரிக்கப்படுகிறது. அதைப் போலவே கணபதி அக்ரஹாரம் விநாயகர் கோவிலும் அளவில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் அர்ச்சகர் ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து அர்ச்சனை செய்து விட்டு போன திங்களூர்(நவ கிரக கோவில்களில் சந்திரனுக்கு உரியது) இன்று யத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு முன்னால் மண்டபம் எடுத்து கட்டப்பட்டு சிறப்பாக இருப்பதை காண சந்தோஷமாக இருக்கிறது. இங்கு நவக்ரகங்களும் சூரியனை பார்த்தபடி இருக்கின்றன.

இன்றைக்கு சிறு கிராமங்களாக இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் பிருமாண்டமான கோவில்களை பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் அவை பெரிய ஊர்களாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அவைகளில் சில நன்றாக பராமரிக்கப் படுகின்றன. சில கோவில்களில் ஒரே ஒரு அர்ச்சகர் அம்மன் சந்நிதியை பூட்டி விட்டு சுவாமி சந்நிதிக்கும், சுவாமி சந்நிதியை பூட்டி விட்டு அம்மன் சந்நிதிக்கும் வந்து பூஜை செய்கிறார். நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கும் பொக்கிஷங்கள் கோவில்கள். அவைகள் காப்பாற்றப் பட வேண்டுமானால் அர்ச்சகர்கள் போஷிக்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது நம் கடமை.