கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 24, 2014

idiot box wisdom box

idiot box wisdom box


தொலை காட்சியை அதாவது டி.வி. யை இடியெட் பாக்ஸ் என்று சொல்பவர்கள் உண்டு. காரணம், டி.வி. பார்க்கும் பொழுது நம் சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதுதான். ஆனால் முட்டாள்கள் என்று நாம் நினைக்கும் சிலர் சில சமயங்களில் சில அபூர்வ கருத்துக்களை கூறுவார்கள். அது போல டி.வி.மூலமும் நாம் சில புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

டி.வி.யில் எனக்கு கிடைத்த சில விஷய தானங்கள்:

சமையலுக்கு தாளித்தவுடன் பாத்திரத்தை மூடி விட வேண்டும். அப்போதுதான் சூடாக தாளித்த கடுகு அல்லது சீரகத்திலிருந்து வெளிப்படும் புகை தாளிக்கப்பட்ட பண்டத்தின் மீது ஒரு ஏடு போல படிந்து அந்த பண்டம் மூன்று மணி நேரம் வரை கேட்டுப் போகாமல் பாதுகாக்குமாம். இதை கூறியது திரு. சுகி சிவம் அவர்கள்!

சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம்(வாக்கம், பாக்கம் இரண்டும் ஒரே பொருள் உடையவைதான்),மேடவாக்கம், புழுதிவாக்கம்,மடிப்பாக்கம் என்று பல வாக்கங்கள்/பாக்கங்கள் இருப்பதை அறிவோம். இங்கு மட்டும் ஏன் இத்தனை பாக்கங்கள் தெரியுமா? ஏரி போன்ற நீர் நிலையை ஒட்டிய பகுதிதான் பாக்கம் என்று அழைக்கப்படுமாம். இதை கூறியது திரு.கண்ணன் பட்டச்சார்யா அவர்கள்.

மேலே குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் ஒரு லேக்வியு(lake view) தெருவோ, லேக் வியு அபார்ட்மெண்டொ இருப்பதை பார்க்கலாம். சென்னையின் உள்ளேயும் புறமும் நூற்றி ஐம்பதிர்க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் இருந்தனவாம்!  அவற்றில் பெரும்பான்மை தூர்க்கப்பட்டு விட்டன என்பது எவ்வளவு பெரிய சோகம்!  

நேஷனல் ஜாக்ரபி சானலில் ஒரு முறை பகார்டி ரம் தயாரிப்பதை காட்டினார்கள். ரம் நிரப்பும் முன் அந்த குப்பிகளை தண்ணீரால் கழுவாமல் ரம்மால்தான் கழுவுவர்களாம். காரணம் குப்பிகளில் ஒரு வேளை தண்ணீர் தேங்கி,அதனுடன் ரம் கலந்து விட்டால், ரம்மின் சுவை மாரி விடும் என்னும் எச்சரிக்கையாம்! செய்யும் தொழிலில் அவர்களின் அக்கறை என்னை வியக்க வைத்தது.

இதைத் தவிர 'அனிமல் பிளானெட்' சானலில் காண்பிக்கப் படும் மிருகங்களின் வாழ்கை முறைகளைப் பார்க்கும் பொழுது மனிதர்களாகிய நாம் மிருகங்களிடமிருந்து எந்த வகையில் வித்தியாசப்படுகிறோம்? என்று தோன்றும். நமக்கிருக்கும் அத்தனை உணர்வுகளும் அவைகளுக்கும் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அதை நம்மைப் போலவே அவைகளும் வெளிப் படுத்துகின்றன என்பதுதான் ஆச்சர்யம்!

இதைத் தவிர ஜோதிட சம்பந்தமாக சில நல்ல தகவல்கள் டி.வி.யில் கிடைத்திருக்கின்றன. அதைப் போலவே ஒரே பெற்றோருக்கு பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று சிறப்பாகவும், மற்றொன்று கஷ்ட நிலைமையிலும் இருக்க காரணம் என்ன என்னும் என்னுடைய நீண்ட கால கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் அவர்கள் அளித்த கர்மா பற்றிய விளக்கம் விடையளித்தது. பூஜ்ய ஸ்ரீ முரளி தர சுவாமிகளின் அருளுரைகள் திறக்கும் கதவுகள் ஏராளம்!
ஆக தொலைகாட்சி தொல்லை காட்சியாக எப்போதுமே இருப்பதில்லை.