கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 29, 2014

எல்லே இளம் கிளியே!

எல்லே இளம் கிளியே!





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 




No comments:

Post a Comment