கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 4, 2013

மஹாலய அமாவாசையும் மாடும்!
இன்றைக்கு மகாளய அமாவாசை! இன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது என்று ஏதாவது புத்தகத்தில் படித்திருப்பேன் அல்லது டி.வீ. சானெல் எதிலாவது யாராவது கூறியிருப்பார்கள்... அது நினைவுக்கு வரவே கே.கே.நகரில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இருக்கும் மாடுகளுக்கு அகத்தி கீரை கொடுக்கலாம் என்று நானும் என் மகனும் ஒரு கட்டு  அகத்தி கீரை வாங்கிக் கொண்டு சென்றோம்.
என் மகனுக்கு ஒரு கட்டு என்பது ரொம்பவும் குறைந்த அளவு என்று தோன்றியது. கோவில் வாசலிலே அகத்தி கீரை விற்பார்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. எனக்கு முன்னாலேயே பலர் அங்கு விற்றுக் கொண்டிருந்த அகத்தி கீரை அனைத்தையும் வாங்கி மாடுகளுக்கு போட்டு விட்டனர். என் மகன் நீட்டிய அகத்தி கீரை கட்டை முகர்ந்து பார்த்த மாடு முகத்தை திருப்பி கொண்டு விட்டது. கொட்டிலில் வைக்கோல் போடும் இடம் முழுவதும் அகத்தி கீரையாகவே இருந்தால் அது என்னதான் செய்யும்?
சரி நம் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாடு கட்டியிருப்பார்கள், அங்கு போட்டு விடலாம் என்று திரும்பினோம். அங்கும் சிலர் அகத்திகீரை கட்டை போட்டிருந்தார்கள் என்றாலும் கீரை அதுவரை திகட்டாததால் நாங்கள் கொடுத்ததை சாப்பிட்டது. எங்களுக்கு பின்னாலேயே இன்னொருவர் கீரை கட்டோடு வந்தார்... அடுத்த முறை  கொஞ்சம்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
அகத்தி கீரை போடப் போனால் நம்மை மாடு முட்டினாலும் ஆச்சர்யமில்லை.

Wednesday, October 2, 2013

பெரியோரைப் போற்றுவோம்!

பெரியோரைப் போற்றுவோம்!
 
 
 
அகில இந்திய காங்கிரெஸ் கமிட்டி அந்த இளைஞருக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தது. அதை வைத்துக் கொண்டுதான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். ஒரு சமயம் எதிர் பாராத திடீர் செலவு வந்தது எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பிய பொழுது அவர் மனைவி, "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம்" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துத் தந்தார். இவருக்கோ ஆச்சர்யம், "உன்னிடம் ஏது பணம்"? என்று எல்லா கணவன்மார்களையும் போலவே கேட்க, "நீங்கள் தந்த பதினைந்து ரூபாயில் பன்னிரண்டு ரூபாய்  மட்டும் செலவழித்து விட்டு மிச்சம் மூன்று  ரூபாயை சேமித்து வந்தேன்" என்றார். அப்படியா என்று கேட்டுக் கொண்ட அவர் உடனே காங்கிரெஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார் என்னவென்று தெரியுமா? "ஐயா! நீங்கள் எனக்கு தரும் சம்பளம் அதிகம் எங்கள் குடும்ப செலவிற்கு ரூ.பன்னிரண்டு  மட்டும் போதும். எனவே அடுத்த மாதம் முதல் ரூ.பன்னிரண்டு  மட்டும் அனுப்புங்கள்" என்று!!! நம்ப முடிகிறதா? அதனால்தான்  பிரதமராக பணியாற்றிய அவர் இறந்த பொழுது அவர் கடனில் அம்பாசிடர் கார் வாங்கிய நிலுவை பாக்கி இருந்தது.  
 
இப்படி பட்ட எளிய, நேர்மையான மா மனிதர் திரு.லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் (அக்டோபர் இரண்டு). இன்று அவரையும் நினைவு கூர்வோம்! 
 
இன்றைய அரசியல் வாரிசுகள் எந்த வியக்கும் செல்லாமல் கோடி கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள். அவர்கள் வாங்கியிருக்கும் ஆடம்பர கார்களை நிறுத்துவதற்கே கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்களை வாங்குகிறார்கள்.  இந்த சூழலில் லால் பகதூர் சாஸ்திரி போல ஒருவர் நம் நாட்டு பிரதமராக இருந்திருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். சரித்திரம் தன்னைத் தானே புரட்டிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள்(history repeats itself) என்பார்கள். அப்படி புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும் மீண்டும் நமக்கு உன்னதமான தலைவர்கள் கிடைக்கட்டும் என்று இந்த நாளில் வேண்டிக் கொள்வோம்!