கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, May 29, 2013

குருவே சரணம்!

குருவே சரணம்!


இன்று (28.5.2013)வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி  குரு பெயர்ச்சி! திருக்கணித காரர்கள் 24ம் தேதியே குரு பெயர்ந்து விட்டார் என்கிறார்கள். எப்படியோ, இது வரை ரிஷப ராசியில் இருந்த குரு  பகவான் மிதுன  ராசிக்கு மாறுகிறார்.

ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம். தேவர்களின் ஆச்சர்யனாக(ப்ரஹஸ்பதி)  விளங்குவதால்  குரு  என  அறியப்படுகிறார். பொன் வண்ண நிறத்தில் விளங்குவதால் 'பொன்னன்' என்றும் 'வியாழன்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

சிலர் குரு பகவானும்  தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக் கொள்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு ரூபம். தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி சிவ பெருமானை வழிபட்டு அவரால் "குரு" என்று
அழைக்கப்பட்டு நவ கிரகங்களில் ஒன்றானவர்.

குரு வழிபட்ட தலங்களுள் முக்கியமானவை குருவாயூர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சென்னைக்கு அருகில்  உள்ள பாடி,  தஞ்சாவூருக்கு  அருகில் உள்ள திட்டை, முதலிய கோவில்கள் ஆகும். ஆலங்குடியில்  தட்சிணாமூர்த்தியே குரு  வடிவாக வணங்கப் படுகிறார்.

குருவிற்கு உரிய மூலிகை : பொன் ஆவரை
திசை                                            :  வட கிழக்கு என்னும் ஈசான்யம்
உலோகம்                                  :   தங்கம்
நிறம்                                            :  மஞ்சள்
மரம்                                             :  சந்தனம்
சமித்து                                        :  அரசு(அரச மர பட்டை/குச்சி)
குருவிற்குரிய தலம்             :  திருச்செந்தூர்




 

Sunday, May 26, 2013

கொஞ்ச நாட்களாக ஏனோ சலிப்பு! ப்ளாக் எழுத அலுப்பாக இருந்தது. ஆமாம், நான் எழுதி என்ன சாதிக்கப் போகிறேன்? என்று தோன்றியது. மழை யாருக்காக பொழிகிறது? இதோ இந்த வேப்ப மரத்திலிருந்து கூவுகிறதே ஒரு குயில் அது கை தட்டலை எதிர் பார்த்தா கூவுகிறது? என்றெல்லாம் என்னை நானே தேற்றிக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்ற வந்து விட்டேன்.

மீண்டும் திருவண்ணாமலை பயணம். இந்த முறை விடி காலை 4.30 மணிக்கு பஸ்சில் ஏறி விட்டோம்!!  அதி காலையில் சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பது பொய்யாய், பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கிறது!பேருந்தில் நல்ல கூட்டம், டோல் கேட்டில் வாகன நெரிசல், கடக்க 10 நிமிடங்களாகியது. 

அந்த விடிகாலை நேரத்தில் பஸ்சில் சினிமா பாடல்களை அலற விட்டார்கள். மற்றவர்களின் மௌனத்தில் இப்படி அத்து மீறி பிரவேசிக்கும் நம்மவர்களின் அதிரடி உரிமை என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். நல்ல வேளை  போட்டது எல்லாம் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள். ஆகவே  கொஞ்சம்  ரசிக்க  முடிந்தது. எம்.ஜி.ஆர். பாடல்கள்  தீர்ந்த  பிறகு  ஒன்றிரண்டு  சிவாஜி  பாடல்களும், சந்திரபாபு பாடல்களும் வந்தன.  சிவாஜியைப்  போல  'போனால் போகட்டும் போடா' என்றோ 'சட்டி சுட்டதடா'   என்றோ விரக்தியாக இல்லாமல் 'சிரித்து வாழ வேண்டும்' 'நாளை நமதே' என்ற உற்சாக பாடல் வரிகள்,  தாளம்  போட  வைக்கும் இசை அமைப்பு.... அந்த 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலைச் சொல்லுங்கள்! அதற்க்கு ஈடாகவோ அல்லது அதை  விட சிறப்பாகவோ வேறு ஒரு பாடல் வந்ததாக தெரியவில்லை.

சந்திர பாபுவின் தனித்தன்மை கொண்ட இனிய பாடல்களை கேட்ட பொழுது, ஏன் இவர் பாடல்களை சூபர் சிங்கர்கள் பாடுவதில்லை? என்று தோன்றியது.

சந்திக்கலாம்...