கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 31, 2013

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்? என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் தங்கை!! அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் திருமுகத்தோடு 20 அடி உயர சிலா மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய திருவடிக்கருகே மஹாலட்சுமி, உயர்த்திய திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன்,இடது திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்! பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். 

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்யா ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 
புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர்,தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருகோவிலூருக்கு விழுபுரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! 

Tuesday, October 15, 2013

ராஜா ராணி

ராஜா ராணி 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாராவின் வருகை! கை தட்டி வரவேற்கலாம்! படத்தின் மிகப் பெரிய பலம் அவர்தான்! படம் முழுவதும் பிழியப் பிழிய அழுகிறார் கிளிசரின் போட்ட சினிமா அழுகை இல்லை கண்களில் உள்ள மை கரைந்து வழியும் நிஜ அழுகை! என்றாலும் அதைப் பார்க்கும் நமக்கு எரிச்சலோ, அலுப்போ வராதது அவருக்கு கிடைத்த வெற்றிதானே!  
இரண்டு ஹீரோக்கள், இரண்டு கதா  நாயகிகள், முன்பாதியில் ஒன்று பின்பாதியில் ஒன்று என்று இரண்டு பிளாஷ்  பாக்குகள் இப்படி படமே இரண்டு பாதியாக பிரிந்து நிற்கிறது. முதல் பாதியை சத்யராஜ், நயன்தார,ஜெய் இவர்களின் திறமையும் அனுபவமும் காப்பாற்றுகின்றன. இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்த சந்தானம் மட்டும் முயலுகிறார்.  ஆர்யா கொஞ்சம் நடிக்கவும் முயற்சிக்கலாம் நஸ்ரியாவுக்கு போகப் போக நடிக்க வரும் என்று தோன்றுகிறது.
ஜீ .வீ .பிரகாஷின் இசையில் எந்த பாடலும் ஈர்க்கவில்லை. வசனம் சில இடங்களில் மட்டும் பளிச்சிடுகிறது. ஆர்யா படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். அதனாலோ என்னவோ படம் கொஞ்சம் தள்ளாடுகிறது. இந்தப் படத்தை சிலர் மௌன ராகத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதற்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லலாம் முக்கியமான வித்தியாசம் மௌன ராகம் காலத்தை வென்ற கிளாசிக் !

Friday, October 4, 2013

மஹாலய அமாவாசையும் மாடும்!
இன்றைக்கு மகாளய அமாவாசை! இன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது என்று ஏதாவது புத்தகத்தில் படித்திருப்பேன் அல்லது டி.வீ. சானெல் எதிலாவது யாராவது கூறியிருப்பார்கள்... அது நினைவுக்கு வரவே கே.கே.நகரில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இருக்கும் மாடுகளுக்கு அகத்தி கீரை கொடுக்கலாம் என்று நானும் என் மகனும் ஒரு கட்டு  அகத்தி கீரை வாங்கிக் கொண்டு சென்றோம்.
என் மகனுக்கு ஒரு கட்டு என்பது ரொம்பவும் குறைந்த அளவு என்று தோன்றியது. கோவில் வாசலிலே அகத்தி கீரை விற்பார்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. எனக்கு முன்னாலேயே பலர் அங்கு விற்றுக் கொண்டிருந்த அகத்தி கீரை அனைத்தையும் வாங்கி மாடுகளுக்கு போட்டு விட்டனர். என் மகன் நீட்டிய அகத்தி கீரை கட்டை முகர்ந்து பார்த்த மாடு முகத்தை திருப்பி கொண்டு விட்டது. கொட்டிலில் வைக்கோல் போடும் இடம் முழுவதும் அகத்தி கீரையாகவே இருந்தால் அது என்னதான் செய்யும்?
சரி நம் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாடு கட்டியிருப்பார்கள், அங்கு போட்டு விடலாம் என்று திரும்பினோம். அங்கும் சிலர் அகத்திகீரை கட்டை போட்டிருந்தார்கள் என்றாலும் கீரை அதுவரை திகட்டாததால் நாங்கள் கொடுத்ததை சாப்பிட்டது. எங்களுக்கு பின்னாலேயே இன்னொருவர் கீரை கட்டோடு வந்தார்... அடுத்த முறை  கொஞ்சம்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
அகத்தி கீரை போடப் போனால் நம்மை மாடு முட்டினாலும் ஆச்சர்யமில்லை.

Wednesday, October 2, 2013

பெரியோரைப் போற்றுவோம்!

பெரியோரைப் போற்றுவோம்!
 
 
 
அகில இந்திய காங்கிரெஸ் கமிட்டி அந்த இளைஞருக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தது. அதை வைத்துக் கொண்டுதான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். ஒரு சமயம் எதிர் பாராத திடீர் செலவு வந்தது எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பிய பொழுது அவர் மனைவி, "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம்" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துத் தந்தார். இவருக்கோ ஆச்சர்யம், "உன்னிடம் ஏது பணம்"? என்று எல்லா கணவன்மார்களையும் போலவே கேட்க, "நீங்கள் தந்த பதினைந்து ரூபாயில் பன்னிரண்டு ரூபாய்  மட்டும் செலவழித்து விட்டு மிச்சம் மூன்று  ரூபாயை சேமித்து வந்தேன்" என்றார். அப்படியா என்று கேட்டுக் கொண்ட அவர் உடனே காங்கிரெஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார் என்னவென்று தெரியுமா? "ஐயா! நீங்கள் எனக்கு தரும் சம்பளம் அதிகம் எங்கள் குடும்ப செலவிற்கு ரூ.பன்னிரண்டு  மட்டும் போதும். எனவே அடுத்த மாதம் முதல் ரூ.பன்னிரண்டு  மட்டும் அனுப்புங்கள்" என்று!!! நம்ப முடிகிறதா? அதனால்தான்  பிரதமராக பணியாற்றிய அவர் இறந்த பொழுது அவர் கடனில் அம்பாசிடர் கார் வாங்கிய நிலுவை பாக்கி இருந்தது.  
 
இப்படி பட்ட எளிய, நேர்மையான மா மனிதர் திரு.லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் (அக்டோபர் இரண்டு). இன்று அவரையும் நினைவு கூர்வோம்! 
 
இன்றைய அரசியல் வாரிசுகள் எந்த வியக்கும் செல்லாமல் கோடி கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள். அவர்கள் வாங்கியிருக்கும் ஆடம்பர கார்களை நிறுத்துவதற்கே கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்களை வாங்குகிறார்கள்.  இந்த சூழலில் லால் பகதூர் சாஸ்திரி போல ஒருவர் நம் நாட்டு பிரதமராக இருந்திருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். சரித்திரம் தன்னைத் தானே புரட்டிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள்(history repeats itself) என்பார்கள். அப்படி புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும் மீண்டும் நமக்கு உன்னதமான தலைவர்கள் கிடைக்கட்டும் என்று இந்த நாளில் வேண்டிக் கொள்வோம்!
  

Thursday, July 25, 2013

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!


சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.

கற்றதும் பெற்றதும்:

ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன.

 பிரபல கொலை வழக்குகள்:

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப்  பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர்.

நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட  ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு   சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே  வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும்  அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார்  எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம்  இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம்.

அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக   சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை  கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.

நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி  விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.

பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச்  சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது.  உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.

நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.

     






   

Tuesday, June 18, 2013

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...
 
 
இப்போதெல்லாம் தொலை  காட்சியில் நிறைய ஜோதிட நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதில் ஜாதகத்தில் என்னென்ன  தோஷங்கள் இருந்தால்  எந்தெந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். அதைத் தவிர கோவில்களைப் பற்றி சிறப்பு நிகழ்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. அவைகளிலும் அந்த ஆலயங்களில் சென்று வழி படுவதால் ஒருவருக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று சிறப்பித்து சொல்கிறார்கள். இந்த நிகழ்சிகளைப் பார்க்கும் மக்கள் எப்படியாவது தன்  துன்பம் தீராதா என்ற ஆதங்கத்தோடு அந்த கோவிலுக்குச்  செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? பெரும்பாலான பெரிய கோவில்களில் அர்ச்சனை செய்வதே கிடையாது. நாம் வாங்கிச்  செல்லும் தேங்காயை வெளியிலேயே உடைத்து விட்டு நம்மிடம் திருப்பித்  தந்து விடுகிறார்கள்.
 
கடவுளுக்கு மாலை சாற்றுவது மிகவும் சிறப்பு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் எனவே திருச்சிக்கு அருகில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்ற பொழுது மாலை வாங்கி சென்றேன் ஆனால் அங்கிருந்த அர்ச்சகரோ மாலையிலிருந்து ஒரு ரோஜாப் பூவை பிய்த்து என் கையில் கொடுத்து விட்டு மாலையை நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்த படியே சந்நிதியை நோக்கி விட்டெரிந்தர் அது அம்மன் காலடியில் போய் விழுந்தது. நான் மனம் நொந்து போனேன்.
 
இன்னொரு முறை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு தேங்காய் மாலை சாற்ற சொன்னதால் தேங்காய் மாலை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றேன். அங்கு, "நாங்கள் ஏற்கனவே ஒரு மாலை சாற்றி விட்டோம் எனவே இதை நாளை சாற்றுகிறோம் என்றார்கள்". சதுர்த்தி அன்று சாற்ற வேண்டிய மாலையை அவர்கள் மறு நாள் சாற்றுவர்களாம்...!
அதை விட கொடுமை அன்றைக்கு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கிக்   கொண்டு சென்றோம். அவர்கள் அஷ்டோத்திரம்(108) சொல்லி  அர்ச்சனை செய்யாமல் விநாயகருக்கு உரிய ஷோடச நாமாக்களை (16 மட்டும்) சொல்லி அர்ச்சித்து கொடுத்து விட்டார்கள். இதன்  பிறகும் நமக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தோன்றுமா? ஒரு வேளை விளக்கு ஏற்றக் கூட வழி இல்லாமல் இருந்த கோவில்களில் இன்று கும்பல் நெரிகிறது, அதை நல விதமாக அங்குள்ளோர் பயன் படுத்திக்கொண்டால் பக்தர்களுக்கும் மனம் நிறையும் கோவில்களும் செழிக்கும்!

Wednesday, May 29, 2013

குருவே சரணம்!

குருவே சரணம்!


இன்று (28.5.2013)வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி  குரு பெயர்ச்சி! திருக்கணித காரர்கள் 24ம் தேதியே குரு பெயர்ந்து விட்டார் என்கிறார்கள். எப்படியோ, இது வரை ரிஷப ராசியில் இருந்த குரு  பகவான் மிதுன  ராசிக்கு மாறுகிறார்.

ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம். தேவர்களின் ஆச்சர்யனாக(ப்ரஹஸ்பதி)  விளங்குவதால்  குரு  என  அறியப்படுகிறார். பொன் வண்ண நிறத்தில் விளங்குவதால் 'பொன்னன்' என்றும் 'வியாழன்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

சிலர் குரு பகவானும்  தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக் கொள்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு ரூபம். தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி சிவ பெருமானை வழிபட்டு அவரால் "குரு" என்று
அழைக்கப்பட்டு நவ கிரகங்களில் ஒன்றானவர்.

குரு வழிபட்ட தலங்களுள் முக்கியமானவை குருவாயூர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சென்னைக்கு அருகில்  உள்ள பாடி,  தஞ்சாவூருக்கு  அருகில் உள்ள திட்டை, முதலிய கோவில்கள் ஆகும். ஆலங்குடியில்  தட்சிணாமூர்த்தியே குரு  வடிவாக வணங்கப் படுகிறார்.

குருவிற்கு உரிய மூலிகை : பொன் ஆவரை
திசை                                            :  வட கிழக்கு என்னும் ஈசான்யம்
உலோகம்                                  :   தங்கம்
நிறம்                                            :  மஞ்சள்
மரம்                                             :  சந்தனம்
சமித்து                                        :  அரசு(அரச மர பட்டை/குச்சி)
குருவிற்குரிய தலம்             :  திருச்செந்தூர்




 

Sunday, May 26, 2013

கொஞ்ச நாட்களாக ஏனோ சலிப்பு! ப்ளாக் எழுத அலுப்பாக இருந்தது. ஆமாம், நான் எழுதி என்ன சாதிக்கப் போகிறேன்? என்று தோன்றியது. மழை யாருக்காக பொழிகிறது? இதோ இந்த வேப்ப மரத்திலிருந்து கூவுகிறதே ஒரு குயில் அது கை தட்டலை எதிர் பார்த்தா கூவுகிறது? என்றெல்லாம் என்னை நானே தேற்றிக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்ற வந்து விட்டேன்.

மீண்டும் திருவண்ணாமலை பயணம். இந்த முறை விடி காலை 4.30 மணிக்கு பஸ்சில் ஏறி விட்டோம்!!  அதி காலையில் சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பது பொய்யாய், பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கிறது!பேருந்தில் நல்ல கூட்டம், டோல் கேட்டில் வாகன நெரிசல், கடக்க 10 நிமிடங்களாகியது. 

அந்த விடிகாலை நேரத்தில் பஸ்சில் சினிமா பாடல்களை அலற விட்டார்கள். மற்றவர்களின் மௌனத்தில் இப்படி அத்து மீறி பிரவேசிக்கும் நம்மவர்களின் அதிரடி உரிமை என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். நல்ல வேளை  போட்டது எல்லாம் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள். ஆகவே  கொஞ்சம்  ரசிக்க  முடிந்தது. எம்.ஜி.ஆர். பாடல்கள்  தீர்ந்த  பிறகு  ஒன்றிரண்டு  சிவாஜி  பாடல்களும், சந்திரபாபு பாடல்களும் வந்தன.  சிவாஜியைப்  போல  'போனால் போகட்டும் போடா' என்றோ 'சட்டி சுட்டதடா'   என்றோ விரக்தியாக இல்லாமல் 'சிரித்து வாழ வேண்டும்' 'நாளை நமதே' என்ற உற்சாக பாடல் வரிகள்,  தாளம்  போட  வைக்கும் இசை அமைப்பு.... அந்த 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலைச் சொல்லுங்கள்! அதற்க்கு ஈடாகவோ அல்லது அதை  விட சிறப்பாகவோ வேறு ஒரு பாடல் வந்ததாக தெரியவில்லை.

சந்திர பாபுவின் தனித்தன்மை கொண்ட இனிய பாடல்களை கேட்ட பொழுது, ஏன் இவர் பாடல்களை சூபர் சிங்கர்கள் பாடுவதில்லை? என்று தோன்றியது.

சந்திக்கலாம்...





     
 

Tuesday, March 26, 2013

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன்.
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:




தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று.

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு.

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.



ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார்.

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள்.

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:



முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான்.



இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை.

அனுராதா ரமணன்:



லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார்.

ரமணி சந்திரன்:



ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:




பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:



கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம்.
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:




தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:



பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை.

பி.கு. இது ஒரு மீள் பதிவு.


  























  

Friday, February 22, 2013

viswaroopam - review

விஸ்வரூபம்!


பெரிதும் சர்ச்சைக்குள்ளான  அதனால்  அளவுக்கு  அதிகமாக  பப்ளிசிட்டி  பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தேன்! மிகச் சமீபத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு சரித்தர சம்பவத்தை படமாக்க முயற்சித்திருக்கிறார் கமல்ஹாசன்! ஆனால் அதை நடு நிலையோடு அணுகாமல் அமெரிக்காவுக்கு வால் பிடித்திருப்பதால்
இந்தப் படம் ஏற்படுத்தி இருக்க வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது  மட்டுமில்லை மருத்துவம் பார்க்க வந்த பெண்ணின் மரணமும், ரசித்து ஊஞ்சல் ஆடும் இளைஞன்  சூசைட் பாம்பராகி இறக்கும் சோகமும் மனதைத் தொடவே இல்லை.

 கதக் நடனக் கலைஞர் வேடத்தில் இருக்கும் இந்திய ரா உளவாளியான விஸ்வநாத்தை
(கமலை) அவர்  மனைவியாக  வரும்  பூஜா  குமார்  சந்தேகப்பட்டு  உளவறிய  ஒரு ஆளை அனுப்புவதில் படம் தொடங்குகிறது.  ஆனால் அவர்  எதற்காக  கமல் மேல் சந்தேகம் கொள்கிறார் என்பது தெளிவாக காட்டப்படவில்லை. அதே போல கணவனிடம் பொய் சொல்லிவிட்டு தன் பாசோடு வெளியே சுற்றி விட்டு வீடு
திரும்பும் பூஜா கணவனின் குறட்டை ஒலி கேட்டு அவர் தூங்கி விட்டதாக நினைத்து  நிம்மதியாக படுத்துக்கொள்ளும்
போது  வேறு பக்கம் திரும்பி படுத்திருக்கும் கமல் தூங்காமல் உக்கிர பார்வை (பயங்கர பின்னணி இசையோடு) பார்கிறாரே  பிறகு என்ன செய்தார்?

ஆண்ட்ரியவுக்கு வேலையே இல்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள், ஆனானப்பட்ட சேகர் கபூரும் நாசரும் வீணடிக்கப்பட்டிருப்பது அவர்கள் கண்களில் படவில்லை போலிருக்கிறது.

இந்தப் படத்தில் பிரமாதமான விஷயங்கள் என்றால் முதலாவது ராகுல் போசின் நடிப்பு, இரண்டாவது செட் அமைப்பு, கமலஹாசன் பேட்டியில் சொல்லியிருக்க விட்டால் நாம் நிஜமாகவே
ஆப்கானிஸ்தானில்தான் படம் பிடித்திருக்கிறார்கள் என்று நம்பி இருப்போம். இசை
இரையாமல், உறுத்தாமல் இழைகிறது. பிறகு அந்த முதல் சண்டை காட்சி, வாவ்!

இந்தப் படத்தின் நல்ல விஷயங்கள்: 1. பூஜா குமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம் நல்ல
வேளை நமக்கு அது தெரியாது எனவே வெல்கம் பூஜா!
2. கமல் அறிமுகமாகும் காட்சி! ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கும் நடிகர்கள் கூட காலின் கீழ் நெருப்பு பொறி பறப்பது போல அறிமுகமாகும் பொழுது பெண்மை மிளிரும் ஒரு கதா பாத்திரத்தில் அறிமுகமாகும் துணிச்சல் மற்றும் இறுதிக் காட்சி.

தவிர்த்திருக்க கூடியவை:
"என் கடவுளுக்கு நான்கு கைகள் உண்டு"
"அப்படி என்றல் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்'?
நாங்கள் சிலுவையில் அறைய மாட்டோம், கடலில் மூழ்கடித்து விடுவோம்"
என்பது போன்ற தேவையில்லாத குசும்புகளை விட்டு விட்டால் நன்றாக இருக்கும். தளர்வான, கொடூரமான முதல் பாதி  இன்னும் கொஞ்சம் க்ரிப்போடு இருந்திருக்கலாம். தீவிர வாதத்தின் தீமையை  காட்ட வேண்டும் என்றால் ரத்தம் ஆறாக ஓட வேண்டும் என்பது கிடையாது. சட்டிலாக அதை உணர்த்தக் கற்றுக் கொண்டு விட்டால் கமல் நல்ல இயக்குனரும் ஆகி விடுவார்.









 

Thursday, February 7, 2013

uratha sindhanai

உரத்த சிந்தனை!

எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு  இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்?

எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம்.
பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.  
அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.

போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச  வேண்டும்  என்று  இன்றும்  சிலர்  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பொது இடம் என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய  தகவல்களையும்  பகிர்ந்து  கொள்கிறார்கள்.  

ஹார்ன்  அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம்  எப்படிப்பட்ட  டிராபிக்  ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள். 

சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்?


நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்"  என்னும்  வசனத்தைக்  கூட   ஹை  டெசிபெல்லில்தான்  கூறுவார்கள்.  

   
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது. அமைதியாக இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக  இருக்கும்  நம் நாட்டில்தான் தியானம், யோகம்  போன்ற  விஷயங்களும்  இருக்கின்றன. மௌன  விரதம்  அனுஷ்டிக்கும்  பழக்கமும்  நம்  மதத்தில்  ஒரு வழிபாட்டு முறை. ஒரு  வேளை  நம்மை  சுற்றி  இத்தனை  சத்தம்  இருப்பதால்தான் ஒரு  சிலராவது  அமைதியை  தேடிச்  செல்கிறார்கள்  போலிருக்கிறது.  பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது குறைவு. ஆனால் முழுக்க முழுக்க அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் 
ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ?